1990ல் எனது நண்பர் ஒருவர் அகமதாபாத்தில் ஒரு வங்கி யின் கோட்ட மேலாளராகப் பொறுப்பேற்றார். குஜராத்திலிருந்த 75 கிளைகள் அவரது கட்டுப்பாட்டில். நண்பர் எளிதில் புகழ்ச்சிக்கு அடிமையாகி விடுவார். காரியம் ஆக வேண்டுமெனில் பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் அவரை இந்திரன் சந்திரன் என்பர். யார் போய்க் கேட்டாலும் சொந்த ஊரிலோ அதற்கு அருகாமையிலோ இடமாற்றம் கிடைக்கும். அந்த ஊரில் அவரைப் போட்டால் வங்கிக்கு உதவுவாரா அல்லது அவரை விட அதிகத் தேவை, தகுதி உடையவர் அங்கு செல்ல விழைகிறாரோ என்பதையெல்லாம் யோசிக்க மாட்டார்!
அவ்வாறு பலன் பெற்றோரில் சிலர் ஓடியாடித் தெரிந்தவர்களைத் தொடர்பு கொண்டு வர்த்தகத்தை வளர்த்தனர். ஆனால் பெரும் பாலோர் அலுவலக நேரத்திலேயே அடிக்கடி வீட்டிற்குச் செல்வது, சொந்தக்காரர்களுக்கு தட்ட முடியாமல் கடன் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். சிலரோ மதிய உணவு வேளையில் வீட்டிற்குச் செல்வதுடன் குட்டித் தூக்கம் போடுவது, மாலையில் பக்கோரா(டா), டீ சாப்பிட்டுவிட்டு அலுவலகம் வருவது என்றெல்லாம் அனுபவித்தனர்!
மேலும் பெரும்பாலானோர் அகமதாபாத், பரோடா, சூரத் எனப் பெரிய நகரங்களில் பணிசெய்ய விரும்பியதால் அக்கிளைகளில் தேவைக்கதிகமான ஆட்கள் குவிந்தனர். 15 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 20 பேர் இருந்தால் என்னவாகும்? வெட்டிப்பேச்சும், ஒழுங்காக வேலை செய்பவர்களுக்குத் தொந்தரவும்தான் பெருகின. சில கிராமத்துக் கிளைகளிலோ ஆள் பற்றாக்குறை!
ஆனால் நண்பரோ மாறவில்லை. தான் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக, பதவி உயர்விற்குத் தகுதியானவர்கள் யாரென மேலிடம் கேட்டால் தன்னை உயர்த்திப் பேசுபவர்களைக் குறிப்பிடுவார்.
அவரது இந்தக் கட்டுபாடில்லாத தாராளமயமாக்கும் கொள்கை களால் வங்கிக்காக உழைப்போருக்கும் சும்மா நேரத்தைக் கடத்தி பாவ்லா பண்ணுவோருக்கும் வித்தியாசமில்லாமல் போய்விட்டது. வேலையில் கெட்டிக்காரர்கள் மனம் வெறுத்துவிட்டனர். ஏமாற்றுக் காரர்களுக்கோ உழைக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போய்விட்டது. இதனால் எல்லோரிடமும் ஒரு மெத்தனம் தொற்றிக் கொண்டது. அதனால் கோட்டத்தில் வங்கியின் வர்த்தகம் வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. பிறகுதான் அவர்களது தலைமையகம் விழித்துக்கொண்டது. அவர் வங்கியைத் தனது சொந்த நிறுவனம் போல் நினைத்துக்கொண்டு சலுகைகளை வாரி இறைத்ததால் ஏற்பட்ட எதிர்வினையைப் புரிந்து கொண்டனர். பின்னர் என்ன? அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மற்றவர்களுக்கு உதவுவது என்பது தர்மம் செய்வதற்கு ஒப்பான நல்ல செயல்தான். ஆனால் அதற்கும் ஒரு நெறிமுறை, வரைமுறை இருந்தால் தானே நன்று? பெறுபவரின் தேவையையும் தகுதியையும் பார்ப்பதுடன் நம்மிடம் கொடுப்பதற்கு எவ்வளவு இருக்கிறது என்றும் பார்க்கவேண்டுமில்லையா? பொருளோ, பதவியோ, உதவியோ அளவில்லாதவை அல்லவே! தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவிசெய்தால் அச்செல்வம் விரைவிலேயே கெட்டு விடுமென்கிறார் வள்ளுவர்!
உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வளவரை வல்லைக் கெடும் -குறள் 480
somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago