குறள் இனிது :கலந்தாய்வில் பேசணுமா, கேட்டுக்கணுமா?

By சோம.வீரப்பன்

வேட்பதாஞ் சொல்லி பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள் (குறள்: 646)



அலுவலகங்களில் நடத்தப்படும் ஆலோ சனைக் கூட்டங்களில் கலந்து கொண் டிருக்கின்றீர்களா? புதிய அதிகாரி பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தால், அல்லது முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியதிருந்தால் நடத்தப் படுபவை அவை.

உயர் அதிகாரி தலைமை வகிப்பார். எல்லோரும் ஒரு குழுவாய் இணைந்து இதைச் செய்ய வேண்டும், அந்த விற்பனை, லாப இலக்குகளை அடைய வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்துவார்.

பல சமயங்களில் இத்தகைய கூட்டங்கள் தலைமை வகிப்பவரின் சுய புராணமாகவும் அவரது ஜால்ராக்கள் பாடும் பின்பாட்டாகவும் இருக்கும்! அதனால் கேட்பவர்களுக்கோ அது ஒரு கலப்படமற்ற அக்மார்க் அறுவையாக அமையும்!

இந்த மாதிரியான கூட்டங்களில் பங்கெடுப்பவர்கள் அங்கே உடலளவில் அமர்ந்திருந்தாலும் மனதளவில் வேறு எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்! பொதுவாகப் பேச்சு தொடங்கிய இரண்டு மூன்று நிமிடங்களிலேயே ஒவ்வொருவரும் அப்பேச்சைக் கேட்பதா வேண்டாமா என்று முடிவெடுத்து விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்!

பிறர் விரும்பும்படி பேசுவது என்பது கேட்பவர் விரும்பும் நல்ல செய்திகளை மட்டும் சொல்வதில்லையே அண்ணே! அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்;அதாவது கேட்டிருப்பீர்கள்.

பேசுபவர் முதலில் கேட்பவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அதற்கான அடிப்படை யுக்தி அவர் சொல்லப்போவது கேட்பவர்களை எவ்வாறு பாதிக்கும், அவர்களுக்கு அது எப்படிப் பயனளிக்கும் என்பதைச் சொல்வதுதானே?

காரில் கியரை ஒன்று, இரண்டு, மூன்று என உயர்த்துவது போலப் பேச்சும் படிப்படியாகக் கேட்பவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதாக இருந்தால் நன்று!

கேட்பவர்களின் முந்தைய சாதனைகளை நினைவுபடுத்தி, ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' எனக் கேட்டால் உணர்ச்சி கொப்பளிக்குமில்லையா?

நல்ல பேச்சு என்றால் நகைச்சுவை இழையோடியிருப்பதும் அவசியமாயிற்றே! இன்னும் சொல்லப்போனால் அதில் குட்டிக்கதைகள், புள்ளி விபரங்கள், பழமொழிகள், தொழில் வல்லுனர்களின் பொன்மொழிகள் என நவரசங்கள் இருந்தால் நன்று.

கேசரிக்குச் சுவை கூட்டுவதற்கு முந்திரி, ஏலக்காய், குங்குமப்பூ, அன்னாசித் துண்டு சேர்ப்பது போலத்தான்!

இன்னுமொரு விநோதம். கலந்தாய்வுக் கூட்டமேயென்றாலும் பணியாளர் யாரும் எழுந்து மாற்று யோசனை கூறுவதைச் சில மேலதிகாரிகள் சகித்துக்கொள்வதில்லை!

‘நம்மில் பலர் மற்றவர் பேச்சைக் கேட்பது, அவர்களைப் புரிந்து கொள்வதற்காக இல்லை, அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகத் தான்' என்கிறார் ஸ்டீபன் கோவே.

வாடிக்கையாளர் எதை விரும்புகிறார் என்பதை நேரிடையாகப் பார்ப்பவர் கவுன்டரில் இருப்பவர் தானே? அவரது அனுபவம் தரும் பாடங்களை உதாசீனப்படுத்தலாமா?

1997ல் வெறும் சர்ச் இன்ஜினாகத் தொடங்கப்பட்ட கூகுள், இன்று ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஆண்டராய்டு இயங்குதளம் என்று வளர்ந்ததுடன் நிற்கவில்லை.

ஓட்டுனர் இல்லாமல் ஓடும் கார்கள், பறக்கும் பலூன்கள் மூலம் இணையம் போன்ற புதிய சேவைகளை அறிமுகப்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறதாம்! காரணம் பணியாளர்களின் யோசனைகளைக் காது கொடுத்துக் கேட்பதுதான் என்பது ஊர் அறிந்த உண்மை!

பிறர் விரும்பும் படியாகப் பேசி, தம்பேச்சைக் கேட்பவர்கள் சொல்லும் நல்யோசனைகளையும் செவிமடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சொல்கிறது குறள்.

- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்