இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். (குறள்: 517) |
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் திவ்யதரிசன டிக்கெட் பெற, ஆதார் அட்டை கட்டாயம் என அறிவித்துள்ளதைப் பார்த்தீர்களா? விமான நிலையத்தில் நுழைவுச்சீட்டு பெறவும் ஜனவரி 1 முதல் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது! ஆமாங்க, இனி இந்த ஆதார்கார்டு தானுங்க எல்லாவற்றிற்குமே ஆதாரம் ஆகப் போகுது!
ஆதாரில் பான்கார்டு, வங்கிக்கணக்கு, ஓட்டுநர் உரிமம் போன்றவை இணைக்கப்பட்டு வருகின்றன. எனவே உங்களது 12 இலக்க ஆதார் எண்ணைச் சொன்னால் உங்கள் சரித்திரம் என்ன, பூகோளமும் கூடத்தெரிந்து விடும்! 10 கைவிரல்களின் ரேகை அமைப்பு, கருவிழிகளின் தன்மை எனும் உயிரியளவுகளால் எவரையும் சந்தேகத்திற்கு இடமின்றி அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பது இன்றையத் தொழில்நுட்பம். இனி நான் அவனில்லையென்று யாரும் ஏமாற்ற முடியாது!
2009-ம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு குடிமக்களுக்குத் தனித்தனி அடையாள எண் வழங்கி நாடு தழுவிய தரவுத்தளத்தை உருவாக்க முடிவு செய்தது.அதற்காக UIDAI (Unique Identification Authority of India) எனும் அமைப்பை உருவாக்கியது. இவ்வளவு பெரிய பொறுப்பை யாரிடம் கொடுத்தார்கள்? எப்படி முடிவு செய்திருப்பார்கள்?
சுமார் 120 கோடிக்கும் அதிகமானவர்களை அடையாளம் காண வேண்டும், பின்னர் அவர்களது விபரங்களைப் பதிவிட வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டைகள் கொடுக்க வேண்டுமென்றால், அதுகணினிகளையும் அவற்றுக்கேற்ற மென்பொருட்களையும் நன்கு அறிந்தவரால்தானே முடியும்?
அரசின் சுமார் 600 அமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாற்றும் பக்குவம் வேண்டும்.பல ஆயிரம் கோடி செலவாகும் திட்டத்தில் தவறுகள் நடக்கக் கூடாது. யாரும் சந்தேகம் கொள்ளவோ புகார் சொல்லவோ இடம் கொடுக்கக் கூடாது. அதாவது எல்லோராலும் இவர் வல்லவர், நல்லவர் என்று ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவராக இருக்க வேண்டும்!
அதனால் தான் நம்ம இன்போசிஸின் நந்தன் நிலகேணியை அழைத்து அந்தப் பொறுப்பைக் கொடுத்திருப்பார்கள்! இன்போஸின் விற்பனையை 5 ஆண்டுகளில் 6 மடங்கு ஆக்கியதுடன் அதன் மதிப்பையும் உயர்த்திய செயல்வீரர் அல்லவா அவர்!
இன்றைக்கு 104 கோடி ஆதார்அட்டைகள் கொடுக்கப்பட்டு விட்டன! ஏப்ரல் மாத நிலவரப்படியே 31 கோடி வாக்காளர் அட்டைகளும், 25.3 கோடி வங்கிக் கணக்குகளும், 12 கோடி எரிவாயு இணைப்புகளும், 11.2 கோடி குடும்ப அட்டைகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன! இனி வயலுக்குப் பாய்வது வாய்க்காலில் வீணாகாது!
அன்று காங்கிரஸ் ஆட்சி நிலகேணியை ஆதாருக்கு தேர்ந்தெடுத்தது. இன்று மோடி அரசும் அவரையே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக் குழுவின் தலைவராக்கியிருப்பது எதைக் காட்டுகிறது என்று நான் சொல்லணுமா என்ன? காரியம் சிறிதோ, பெரிதோ..., சரியான ஆள் பார்த்து கொடுத்துவிட்டால் நல்லா முடிஞ்சிடுங்க!
இந்தச் செயலை இன்ன காரணங்களால் இவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்து அச்செயலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர்!
- somaiah.veerappan@gmail.com
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
4 hours ago