2022 காட்டுயிர் வாரம்: மதுரையில் நடைபெற்ற ’தி ஆர்ட் ஆஃப் சீயிங்’ பயிலரங்கு

By நிஷா

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 முதல் 8வரை காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தில், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் பாலாஜி லோகநாதன், காமிராவின் மூலம் காட்டுயிர்களைக் காட்சிப்படுத்துவதற்கான பயிற்சியை வழங்கினார்.

மதுரையில் நடைபெற்ற ’தி ஆர்ட் ஆஃப் சீயிங்’ எனும் அந்தப் பயிலரங்கில் வெவ்வேறு ஒளி நிலைகளில் காட்டுயிர்களைப் படம்பிடிப்பதற்குத் தேவைப்படும் அடிப்படை நுட்பங்களை அவர் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். முக்கியமாக, அந்தப் பயிற்சியின்போது பங்கேற்ற மாணவர்களுக்கு நவீன காமிராவைத் தொட்டுப் பார்த்துக் கையாளும் வாய்ப்பு கிடைத்தது.

பங்கேற்ற பள்ளி மாணவர்கள்

மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற அந்தப் பயிலரங்கில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அக்ஷரா மெட்ரிகுலேஷன், பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளி, மகாத்மா குளோபல் கேட்வே ஆகிய மூன்று பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர். அவர்களுக்குக் காட்டுயிர்களை ஒளிப்படம் எடுத்தல் தொடர்பான பல்வேறு அம்சங்களை பாலாஜி லோகநாதன் விளக்கினார். அப்போது மாணவர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் செவிசாய்த்துக் கவனித்தது பாலாஜியின் பயிற்சி திறனைப் பறைசாற்றியது.

காட்டுயிர் ஒளிப்படம் என்பது என்ன?

காட்டுயிர் ஒளிப்படம் என்பது காமிராவைக் கையாளும் திறனுடன் மட்டும் தொடர்புடையது அல்ல; அது அந்தக் காட்டுயிர்களின் நடத்தையைக் குறித்த புரிதலையும் உள்ளடக்கியது. பாலாஜி லோகநாதன் அளித்த பயிற்சி அந்த மாணவர்களுக்குக் காட்டுயிர்களின் நடத்தைக் குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இந்தக் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞரின் அனுபவம், மாணவர்களுக்கு இயற்கையின் கூறுகளையும் நுண்கலையின் கூறுகளையும் இணைத்து, அவற்றை ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தில் சித்தரித்து அளித்தது.

பாலாஜியின் அக்கறை

பாலாஜி தனது அனுபவக் கதைகளையும், தொழில்முறை நுண்ணறிவுகளையும் மாணவர்களிடம் வெகு இயல்பாகப் பகிர்ந்து கொண்டார். வளர்ந்து வரும் ஒளிப்படக் கலைஞர்களிடம் எவ்வித தயக்கமுமின்றி தனது தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டது, அடுத்த தலைமுறை ஒளிப்படக் கலைஞர்களை வளர்த்தெடுப்பதில் அவருக்கு இருக்கும் அக்கறையை உணர்த்தியது.

பல்லுயிர் பாதுகாப்பு

காட்டுயிர் தொடர்பான தனது பயிலரங்குகளை பாலாஜி நாடு முழுவதும் நடத்தி வருகிறார். முக்கியமாக, அந்தப் பயிலரங்குகளின்போது பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்துவதில் அவர் கூடுதல் கவனம் செலுத்துகிறார். மதுரையில் நடைபெற்ற பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள், காட்டுயிர்களை ஒளிப்படம் எடுப்பது பல்லுயிர் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டனர்.

அதிகரிக்கும் புரிதல்

காட்டுயிர் ஒளிப்படம் எடுக்கும் ஆர்வலர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு வகையான பறவைகளும், விலங்குகளும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பது குறித்த புரிதலும், அவை எதிர்கொள்ளும் பல்வேறு பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வும் இன்று அதிகரித்து இருக்கின்றன.

இயற்கையின் வரலாறு, தாவரங்கள், விலங்கினங்கள், விலங்குகளின் நடத்தை ஆகியவற்றை ஆவணப்படுத்துவதும் புரிந்துகொள்வதும் அறிவியலின் முக்கிய அம்சங்கள் என்றால் அது மிகையல்ல. பாபா டியூம் கூறியது போல், ”இறுதியில் நாம் விரும்புவதை மட்டுமே பாதுகாப்போம்; நாம் எதைப் புரிந்துகொள்கிறோமோ அதை மட்டுமே நேசிப்போம், நமக்குக் கற்பிக்கப்பட்டதை மட்டுமே புரிந்துகொள்வோம்”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

15 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்