நரேந்திர மோடி அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ‘ஓராண்டில் நூறாண்டு சாதனை' என்பது சாத்தியமில்லை என்பது உண்மைதான். ஆனால், நாடாளு மன்றத் தேர்தல் நேரத்தில் ஏராளமான எதிர்பார்ப்புகளை மோடி உருவாக்கியிருந்தார்.
அதன் விளைவாக அவர் மீதும் இன்றைய அரசின் மீதும் மிக அதிக நெருக்கடி உள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் நம்மில் பெரும்பாலோருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியக் கப்பலின் பயணத் திசையை உறுதிசெய்யும் சுக்கான், மோடியின் கைகளில் கொடுக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. கப்பல் கரையேற வேண்டிய திசைவழியைத் தீர்மானிக்கும் பொறுப்பு மோடிக்கும், அவருடைய அமைச்சரவைக்கும் உள்ளது. ஆனால், ஓராண்டில் அரசு செல்லும் திசை முந்தைய ஆட்சியைவிட எந்த வகையிலும் சிறப்பானதாக அமையவில்லை என்பதுதான் நிதர்சனம்.
மாறாத கொள்கைகள்
அதற்கு நேரெதிராக முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை, மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் வேலையில் தான் தீவிரம் காட்டுகிறது இன்றைய பா.ஜ.க. அரசு.
காணாமல் போன சுதேசி
நம் நாட்டின் அடிப்படையாக உள்ள இயற்கைவள ஆதாரங்களைக் கொள்ளையடிக்க வரும் பெருநிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியாமல், மத்திய அரசு திணறுவதைக் காண முடிகிறது. அந்த நிறுவனங்களை நம்பிப் பிழைக்கும் உள்நாட்டுத் தரகர்களையும் அதனால் சமாளிக்க முடியவில்லை. கருத்துரீதியிலும், பணரீதியிலும் அவர்கள் ஆசை காட்டிவருகிறார்கள்.
மற்றொருபுறம் ஐ.நா. போன்ற பன்னாட்டு மன்றங்களில் இந்தியாவின் வேளாண்மையையும் இறையாண்மையும் விட்டுத்தர முடியாது என்று நம்முடைய பிரதமர் முழங்குகிறார்.
அதைக் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், மறுநாள் உலக வணிகர்களின் கூடுகைகளில் ‘உங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை, இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்யுங்கள்' என்று அவரே பேசும்போது மனம் வலிக்கிறது.
இப்படி முரண்படும் போக்கைப் புறந்தள்ளும் மனவலிமை அரசுக்கு இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஓராண்டு களக் காட்சிகள் ஊடாக பா.ஜ.க.வின் சுதேசிவாதம், காணாமல் போன ஒன்றாக மாறிவருவதைத் தெளிவாகக் காண முடிகிறது.
வாக்குறுதி என்னாச்சு?
மத்திய ஓராண்டு ஆட்சியில் வேளாண்மையை எடுத்துக்கொண்டால் ‘கிஸான் தொலைக்காட்சி’ என்ற அறிவிப்பைத் தாண்டி ஆக்கபூர்வமாகப் பெரிதாக ஒன்றுமில்லை. தனது தேர்தல் உரைகளில் விளைச்சலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் 50% வரை உயர்த்தப்படும் என்று மோடி அறிவித்துக்கொண்டே இருந்தார். அப்படியென்றால் நெல் கிலோ ரூ. 10 என்றால், அது ரூ. 15-க்குக் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உண்மையில் வெறும் 10% உயர்வு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இடுபொருள் விலை உயர்ந்துகொண்டே போகும் நிலையில், இந்த உயர்வு எந்த வகையிலும் உழவர்களுக்குப் பயன்படாது.
அடிப்படை உரிமை
இது ஒருபுறம் இருக்க உழவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான நிலத்தின் மீது அரசு கைவைக்கிறது. பல நூறாண்டுகள் போராடிப் பெற்ற உரிமை, அடிப்படை நிலவுரிமை.
ஆனால், அந்த உரிமையைப் பறிக்கும் முயற்சியில் தீவிர முனைப்பு காட்டுகிறது இந்த அரசு. சர்வதேச மண்வள ஆண்டு என்று ஐ.நா. சபை அறிவித்திருக்கும் இந்த ஆண்டில், மோடியின் அரசோ, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்து மண் மீது மக்களுக்கு உள்ள உரிமையைப் பறிக்க முனைகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
9 mins ago
விளையாட்டு
16 mins ago
ஜோதிடம்
45 mins ago
தமிழகம்
35 mins ago
விளையாட்டு
54 mins ago
சினிமா
55 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago