பூச்சிகளின் பிரம்மாண்ட உலகம்

By சித்ரா வி.ரமணி

நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு பூச்சிகள்தான், மிகவும் சிக்கலான இயற்கை உணவுச் சங்கிலியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன.

‘இன்செக்டாரியம்’ என்னும் பூச்சி காட்சியகம் மூலம் வேளாண்மை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகளுக்கான தேசியக் கழகம் (National Bureau of Agriculturally Important Insects) உணர்த்தும் செய்தி இதுதான்.

உயிருடைய பூச்சிகளைத் தொகுத்து வைக்கும் அருங்காட்சியகமாக இன்செக்டாரியம் இருக்கிறது. இந்தியாவின் முதல் பூச்சி காட்சியகம் இது. கொசுத் தேனீ, நெல் அந்துப்பூச்சி, வெட்டுக்கிளி, சிலந்திகள், லேடிபேர்ட் வண்டு, தட்டான்கள் என ஏகப்பட்ட பூச்சிகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தின் இன்னொரு புதுமை என்னவென்றால், நீர் பூச்சிகளும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுதான் என்கிறார் இக்கழகத்தின் இயக்குநர் ஆப்ரகாம் வர்கீஸ்.

லட்சம் பூச்சிகள்

இந்தியாவில் உள்ள ஒன்றரை லட்சம் பூச்சி இனங்களில் வெறுமனே 80 ஆயிரம் பூச்சி வகைகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. வேளாண்மை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகளுக்கான தேசியக் கழகத்தின் அருங்காட்சியகத்தில் 30 ஆயிரம் பூச்சி மாதிரிகள் மற்றும் 108 உயிருள்ள செல் சேகரிப்புத் தொகுப்புகள் (insect culture collections) உள்ளன.

"பல்லுயிர் சூழலையும், சுற்றுச்சூழலையும் பராமரிப் பதில் பூச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும் மட்டுமே முக்கியமான பூச்சிகள் என்று மாணவர்கள் கருதுகின்றனர். ஆனால், அது சரியல்ல. இயற்கை யில் வாழும் 98 சதவீதப் பூச்சிகள் பயனுள்ளவை" என்கிறார் அவர்.

பூச்சி அறிவு

பூச்சிகளை வேடிக்கை பார்ப்பது உற்சாகமான அனுபவம் என்று கூறும் அவர், பூச்சிகளைக் கவனிப்பதன் மூலம் பல்லுயிர் சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வது அவசியம் என்கிறார்.

பூச்சிகள் தொடர்பான அறிவை ஊட்டச் சுவரொட்டிகள், ஸ்லைடு கண்காட்சிகளுக்கும் இன்செக்டாரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இவை உதவிகரமாக இருக்கும்.

வேளாண்மையைப் பாதிக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு இயற்கையில் வாழும் மற்ற பூச்சிகளையே பயன்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் வர்கீஸ்.

விவசாயத்துக்கு உதவும்

"பூச்சிக்கொல்லி ஆய்வுகளைப் பொறுத்தவரை, பூச்சிகளைப் பயன்படுத்தித் தேவையற்ற பூச்சிகளைக் கொல்வதில்தான் எதிர்காலம் அடங்கியுள்ளது.

இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு பரவலாகி வரும் பின்னணியில், அடுத்த பத்தாண்டுகளில் வேதிப்பொருட்களைப் பயன்படுத்திப் பூச்சிகளைக் கொல்லும் வழக்கம் இல்லாமல் போய்விடும். பயிர்களைப் பாதிக்கும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த விவசாயத்துக்கு உதவும் பூச்சிகளைப் பயன்படுத்தும் முறை விரைவில் வரும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர்.

தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ஷங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்