இ
ன்று பல மாணவர்களும் இளைஞர்களும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அண்மையில் வெளிவந்த ஆய்வு ஒன்றில் பறவை நோக்குதலால் மன ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, இளைஞர்களிடையே பிரபலமான பொழுதுபோக்கு அம்சங்களுள் ஒன்றாக இந்தப் பறவை நோக்குதலும் இடம்பெறத் தொடங்கியஉள்ளது.
மாவட்டப் பறவை
இயற்கைக்கும் குழந்தைகளுக்குமான தொடர்பை வலுப்படுத்துவதில் பறவைகளுக்கு முக்கியப் பங்குள்ளது. ஆனால் இன்றுவரையில், குழந்தைகள் பலருக்கும் தெரிந்த ஒரே பறவை மயில் அதுவும், அது நாட்டின் தேசியப் பறவையாக இருப்பதால்தான். அதே குழந்தைகளுக்கு, தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது என்பது தெரியாது. நமது மாநிலப் பறவை, மரகதப் புறா (Emerald Dove).
இதுபோல மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பறவை இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தால் குழந்தைகளுக்கும் பறவைகளுக்குமான நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்.
தமிழ்நாட்டில் இது வரை அதிகாரப்பூர்வமாக 525 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நம் மாநிலத்தில் 32 மாவட்டங்கள் உள்ளன. எனில் 32 புதிய பறவைகளைக் குழந்தைகளிடம் அறிமுகம் செய்யும் அற்புதமான வாய்ப்பு நம்மிடையே உள்ளது. இப்படிச் செய்தால் அங்கு வாழும் மக்களுக்கும் தினசரி வாழ்வில் பறவைகளின் முக்கியத்துவம் புரியத் தொடங்கும். பறவை நோக்குதலும் பறவைகளின் பாதுகாப்பும் தானாக நிகழும்.
எப்படித் தேர்வு செய்வது?
சரி, ஒரு மாவட்டத்துக்கான பறவையை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது?
மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பார்க்கக்கூடிய ஒன்றாக அந்தப் பறவை இருக்க வேண்டும். எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஓரிடவாழ்வியாக, அழியும் நிலையில் உள்ள, பறவைகளாக இருந்தால் இன்னும் சிறப்பு.
சேலத்தின் பறவை
மேற்கண்டவற்றின் அடிப்படையில் சேலம் மாவட்டத்துக்கான ஒரு பறவையாக, நான் ஒன்றைத் தேர்வு செய்துள்ளேன். இது வரை சேலத்தில் 275-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்துப் பறவை இனங்களையும் ஆராய்ந்த பிறகு சேலத்தின் மாவட்டப் பறவையாக பாம்புத்தாராவை (Oriental Darter) நான் பரிந்துரைக்கிறேன்.
ஏன் காகத்தையோ மைனாவையோ கிளியையோ அல்லது கரிச்சானையோ தேர்ந்தெடுக்கவில்லை? தேர்ந்தெடுக்கலாம். அதில் தவறேதுமில்லை.
மரகதப் புறா அனைத்து இடங்களிலும் நல்ல எண்ணிகையில் பரவி உள்ளது. இப்போதைக்கு அது அழிவின் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அது ஏன் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக உள்ளது என்று யாருக்காவது தெரியுமா எனத் தெரியவில்லை.
இன்றிலிருந்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து வரும் இளம் பறவை ஆர்வலருக்குக் கிளியோ காகமோதான் அனைத்து இடங்களிலும் உள்ளதே பின் இது ஏன் தேர்வு செய்யப்பட்டது என்று எண்ண வாய்ப்புண்டு. மாறாக அழிவை நோக்கி இருக்கும் ஒரு பறவையைத் தேர்வுசெய்வதன் வாயிலாக அனைவரின் கவனத்தையும் பங்களிப்பையும் பெற இயலும்.
குறைந்துவரும் பாம்புத்தாரா
பாம்புத்தாரா ஒரு நீர்ப்பறவை. பெரும்பாலும் மீன்களையே உண்ணும். வேட்டையாடும்போது கழுத்து மட்டும் பாம்பு போல நீருக்கு மேல் தெரியும். அதனாலேயே இப்பெயர் பெற்றது. சர்வதேச இயற்கைப் பாதுகாப்புக் கழகம் (ஐ.யு.சி.என்.) இப்பறவையை ‘அழிவு நிலைக்கு நெருக்கமாக உள்ள’ பறவையாக அறிவித்திருக்கிறது. தற்போது பாம்புத்தாராவின் எண்ணிக்கை குறைந்து வருவதால் விரைவில் அழிவின் பாதைக்கு அது தள்ளப்படலாம் என்று யூகிக்க முடிகிறது.
சேலத்தின் பெரும்பாலான நீர்நிலைகளில் இப்பறவையைக் காண இயலும். மேலும் இதன் கழுத்து ‘S’ வடிவத்தில் இருப்பதால் சேலத்திற்குப் பொருத்தமான ஒன்றாகவும் இருக்கும்.
இதுபோல ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனைத்துப் பறவை ஆர்வலர்களும் ஆலோசித்து ஒரு பறவையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆண்டுதோறும் நடைபெறும் தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பிலும் இது பற்றி ஆலோசிக்கலாம்.
இதுபோன்ற முயற்சிகள் இயற்கையின் மீதான நம் ஆர்வத்தை அதிகரிக்கும். மனித குலத்தின் வளமான எதிர்காலத்துக்கு இயற்கை வளம் இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்து, இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும்!
கட்டுரையாளர், சேலம் பறவையியல் கழக நிர்வாகிகளில் ஒருவர்
தொடர்புக்கு:
enviroganeshwar@gmail.com
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
வணிகம்
7 hours ago
சுற்றுச்சூழல்
40 mins ago
சுற்றுலா
52 mins ago
கல்வி
9 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago