தொல்லியல் படிப்பை 25 ஆண்டுகளாக வழங்கும் கல்லூரி!

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் தற்பொழுது கீழடி உள்ளிட்ட பல இடங்களிலும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. முக்கியமாகக் கீழடியில் நடக்கும் அகழாய்வுகள் தமிழ்நாட்டின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றுகின்றன. இந்த ஆய்வுகளின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள தொல்பொருட்கள், மக்களிடையே அகழாய்வுகளின் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக, மாணவர்களிடையே இவ்வகழாய்வுகளில் ஈடுபட எந்தப் படிப்பைப் படிக்க வேண்டும் என்பதை அறியும் ஆவல் எழுந்துள்ளது. அகழாய்வுகளில் ஈடுபட தொல்லியல் துறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பு முதுகலைப் படிப்பாகப் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருப்பினும், இளங்கலை அளவில் வெகுசில கல்லூரிகளில்தான் உள்ளது.

சென்னை கிறித்தவக் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் தொல்லியலுக்கான இத்தகு இளங்கலை வரலாறு (வகேஷனல்) (B.A., History – Vocational) தொல்லியல் மற்றும் அருங்காட்சியியல் என்னும் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

1837ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து மிஷனரியான ஜான் ஆண்டர்சனின் தலைமையில் ஜெனரல் அசெம்ப்ளி பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியே 1865ஆம் ஆண்டு வில்லியம் மில்லரின் தலைமையில் கிறித்தவக் கல்லூரியாக உயர்ந்தது. இக்கல்லூரியில் மிகப் பழமையான துறைகளில் ஒன்றான வரலாற்றுத் துறை 1887ஆம் ஆண்டிலிருந்து 133 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இத்தகைய தொன்மையான துறையின் இளங்கலையில் தொல்லியல் சம்பந்தமான பிரத்தியேகப் படிப்பு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு இப்படிப்பின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

இத்துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் தற்பொழுது இந்தியத் தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையில் பணியாற்றிவருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் இங்கு பயிலும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொல்லியல் உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயில்கின்றனர். தொல்லியல் மற்றும் அருங்காட்சியியலில் கள மற்றும் செய்முறைப் பயிற்சியும் மாணவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இத்துறையில் பயிற்றுவிக்கப்படும் அடிப்படைப் பாடங்கள் மற்றும் களப்பணிகள் தங்களின் மேற்படிப்புக்கு பெரிதும் உதவுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இங்கே மாணவர்களுக்குப் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கற்காலக் கருவிகள், மண்பாண்டங்களை வேறுபடுத்திக் காண கற்றுத் தரப்படுகிறது. இதற்காக பிரத்தியேகச் செய்முறைக் கூடம் உள்ளது. களப்பணிகளுக்காக அத்திரம்பாக்கம், சென்னை அருங்காட்சியகம், பூண்டி அருங்காட்சியகம், வடமங்களம், கல்வாய், மேல்சித்தாமூர், கீழடி போன்ற இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் பல கண்காட்சிகளை சென்னை கிறித்தவக் கல்லூரி வரலாற்றுத் துறை நடத்தியுள்ளது.

மேலும், தொல்லியல் துறையைச் சேர்ந்த பல்வேறு அறிஞர்களையும் வல்லுநர்களையும் கொண்டு அவ்வப்போது மாணவர்களுக்குச் சிறப்புப் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.

கடந்த 2021 ஜூலையில் தொல்லெழுத்தியல் பயிற்சிப் பட்டறை இணையவழியில் நடத்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்