இருபதாம் நூற்றாண்டில் பலவிதமான கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மண், கற்கள், மரங்களைக் கொண்டுதான் பழமையான பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. சேர்க்கைப் பொருளாக சுண்ணாம்பு, கருப்பட்டி, மண் போன்ற பொருள்களை கட்டுமானப் பொருள்களாக நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்தனர். அதேபோல் ஒவ்வொரு பிராந்தியத்துக்குத் தகுந்தாற்போல் கட்டுமானப் பொருள்கள் வேறுபட்டன. ஆனால் இன்றைக்கு உலகம் முழுமைக்கும் ஒரேவிதமான கட்டுமானப் பொருள்களைத்தான் பயன்படுத்திவருகிறோம். எல்லா இடங்களிலும் சிமெண்ட் கலவையைக் சேர்க்கைப் பொருளாகக் கொண்டுதான் கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. இது கான்கிரீட் கலவை அல்லது சாந்து கலவை என அழைக்கப்படுகிறது.
இந்த சாந்து கலவை என்பது சிமெண்ட், ஜல்லி, மண், தண்ணீர் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட அளவில் கலந்து தயாரிக்கப்படுவது ஆகும். முன்பு பெரும்பாலும் இந்தக் கலவை, கட்டுமானம் நடக்கும் களத்தில்தான் தயாரிக்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு அதற்கு மாற்றாக இந்தக் கலவையையும் தயாராகத் தயாரித்து, கட்டுமான இடத்துக்குக் கொண்டு பயன்படுத்தப்படுகிறது. இதை ரெடி மிக்ஸ்டு கான்கிரீட் என அழைக்கப்படுகிறது. சுருக்கமாக ஆர்.எம்.சி. என அழைக்கப்படுகிறது.
சாந்து கலவை தயாரிக்கும் இடம் இல்லாத நெருக்கடியான ஓரிடத்தில் மனை வாங்கி வேலைக்கு ஆட்களே கிடைக்காத சூழலில் வீட்டுக் கட்டுமானத்துக்கு ஆர்.எம்.சி. சரியான மாற்று எனலாம். ஏனெனில் இது பயன்படுத்தத்தக்க நிலையில் நமக்குத் தயாராக கிடைக்கும். எவ்வளவு கான்கிரீட் தேவையோ அவ்வளவு கான்கிரீட்டை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஜல்லி, மணல், சிமெண்ட், நீர், வேதிப்பொருள்கள் ஆகியவை ஆர். எம். சி தயாரிக்க உதவுபவை. மணலைப் பொறுத்தவரை இயற்கையான ஆற்று மணலோ செயற்கை மணலோ பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட்டை இளகிய நிலையில் நீடித்திருக்க செய்யும் பொருட்டு வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. எவ்வளவு நேரம் கழித்து கான்கிரீட் இறுக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொருட்டும் வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிமெண்ட்டுக்குப் பதிலாக உலைக் கசடையும், எரிசாம்பலையும் பயன்படுத்தும் போக்கும் புழக்கத்தில் உள்ளன.
ஆர்.எம்.சி தயாராகும் இடத்துக்கும் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்குமான இடைவெளி மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் கான்கிரீட் தயாராகி இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் அதன் தரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
ஆர்.எம்.சி.யைப் பொறுத்தவரை பலவிதக் கலவை விகிதங்களில் இது கிடைக்கிறது. ஆகவே தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த வேலைக்கு எந்தத் தரத்தில் கான்கிரீட் தேவையோ அதைப் பெற்றுக்கொண்டு பயன்படுத்தலாம். ஒரே மாதிரியான தரத்தைக் கொண்ட கான்கிரீட்டைத்தான் அனைத்துக் கட்டுமானத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என்னும் நிலையை ஆர். எம். சி. தவிர்த்துவிடுகிறது.
கான்கிரீட் இறுக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதனால் வேலைகள் முடிய அதிக நேரம் ஆகும். ஆனால் ஆர்.எம்.சி. விரைவில் இறுகிவிடக்கூடிய தன்மையில் கிடைக்கிறது. இதனால் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாகிறது. நேரத்தை மிச்சப்படுத்தும் ஆர்.எம்.சி.யின் விலை சாதாரண கான்கிரீட்டை விட அதிகம் என்பது கலக்கம் தரத்தான் செய்யும். ஆனால் நேரத்தை மிச்சப்படுத்த விரும்பினால் அதற்குரிய விலையை நாம் தரத் தான் வேண்டியுள்ளது.
தரத்தைப் பொறுத்தவரை ஆர்.எம்.சி.யின் தரத்தை எளிதில் அறிந்துகொள்ளக் கருவிகளும் முறைகளும் உள்ளன என்கிறார்கள். எனவே நமக்குத் தேவையான தரத்தில் இதைப் பெற்றுக்கொள்ள முடியும். சாதாரணமாகக் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் கான்கிரீட்டைத் தயாரிக்கும் போது இடமும் அதிகம் வேண்டும். மேலும் இந்தப் பணியின் போது ஒலி மாசும், தூசும் உருவாகும். ஆனால் ஆர்.எம்.சியில் இந்தப் பிரச்சினை இல்லை.
ஆர்.எம்.சியைப் பயன்படுத்துவதில் நமக்கு தயக்கம் ஏற்படுத்தும் முதல் அம்சம் இதன் விலை. அதிக விலைக்கு மட்டுமே ஆர்.எம்.சி. கிடைப்பதால் செலவு வழக்கத்தைவிட அதிகமாகும். மேலும் ஆர்.எம்.சியைக் கொண்டுவரும் போக்குவரத்து செலவும் இதில் கூடிவிடும். கட்டுமான இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கும்போது அது பலருக்கு வேலை வாய்ப்பாக அமையும். ஆனால் ஆர். எம். சி. இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படுவதால் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைக் குறைத்துவிடும். ஆர்.எம்.சி. பயன்படுத்தும்போது கட்டிடத்தில் விரைவில் விரிசல்கள் விழுந்துவிடுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், எந்தக் கட்டுமானப் பொருளிலும் நன்மைகளும் தீமைகளும் கலந்தே உள்ளன என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
34 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago