சின்ன வீடு என்றாலும் சொந்த வீடாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவோர் பலர். ஆனால் வீடு கட்டியவர்கள் சொன்ன அனுபவத்தைச் சொல்லக் கேட்டவர்கள். வீடு கட்டும் ஆசையையே கைவிட்டுவிடுவார்கள். நம் திட்டமிடும் தொகைக்கு மேலே செலவு இழுத்து வந்துவிடும். ஏனெனில் நம்மில் பலர் வீடு கட்ட வங்கிக் கடனையே நம்பியிருப்போம். வங்கிக் கடன் மூலம் 80 சதவீதம்தான் கிடைக்கும். இதில் 20 சதவீடம் நாம்தான் தயாராக்க வேண்டியிருக்கும். அதற்கு மேலே போய்விட்டால் எப்படிச் சமாளிப்பது என்ற பயம் எல்லோருக்கும் வந்துவிடும்.
ஆனால் பயத்தை விட்டுவிட்டு வீடு கட்டுவதிலுள்ள சிக்கமான வழிகளைப் பற்றித் தெரிந்து அதனடிப்படையில் வீடு கட்டலாம். கட்டுமானச் செலவைக் குறைக்கும் முயற்சியில் அடிப்படையான விஷயம் தகுந்த கட்டுமானப் பொருளைக் கையாள்வது. நாம் வீடு கட்டும் பகுதிக்கு அருகிலேயே கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவது என்பது பெருமளவில் செலவைக் குறைக்கும் ஒரு வழிமுறை.
இந்தியாவில் வீடு கட்டப் பயன்படும் அடிப்படையான கட்டுமானப் பொருள்கள் செங்கல், மரம், கல் போன்றவையே. வீடு கட்டுவதில் பிரதான செலவுகள் என்பவை கட்டுமானப் பொருள்களுக்கானவையும் வீடு கட்டுவதற்கானவையுமே. சிறிய வீடு என்பது செலவாகாது என நம்புகிறோம். ஆனால் வீட்டின் சதுர அடி குறையக் குறைய வீடு கட்டுவதற்கான சதுர அடிச் செலவு அதிகரிக்கும். இவையெல்லாம் அடிப்படையான காரணிகள்.
கட்டுமானப் பொருள்களைப் பொறுத்த அளவில், ஸ்டெப்ளைஸ்டு கம்ப்ரஸ்ஸட் எர்த் ப்ளாக்ஸ், ப்ளை ஆஷ் ஜிப்சம் ஸ்டெபிப்லைஸ்டு மட் ப்ளாக்ஸ், ப்ளை ஆஷ்-லைம் ஜிப்சம் தயாரிப்புகள், க்ளே ரெட் மட் பர்ன்ட் செங்கல், கான்கிரீட் ப்ளாக் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அஸ்திவாரத்தை எழுப்ப ஆகும் செலவு வீட்டின் மொத்தக் கட்டுமானச் செலவில் 10 முதல் 15 சதவீதம்வரை பிடித்துக்கொள்கிறது. ஆகவே செம்மண் போன்ற சாதாரண மண் கொண்ட நிலத்திற்கு இரண்டு அடி அஸ்திவாரம் போதுமெனவும் ஆர்ச் பவுண்டேஷன் முறையைக் கையாளலாம். கரிசல் மண் போன்ற மென்மையான மண் கொண்ட நிலத்தில் அண்டர் ரீம் ஃபைல் பவுண்டேஷனைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அஸ்திவாரம் அமைக்கும் செலவில் 20-25 சதவீதத்தை மிச்சப்படுத்த முடியும்.
ஆர்ச் பவுண்டேஷன் என்பது பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட முறை. இம்முறையில் அஸ்திவாரத்தின் ஆழத்தைப் பெருமளவில் குறைத்துவிடலாம். என்றாலும் அஸ்திவாரத்தின் அடிப்பகுதியைத் தாங்கு சுவரெழுப்பிப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் கட்டிடத்தின் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அஸ்திவாரம் உறுதியுடன் விளங்க இது அவசியம்.
நில மட்டத்திற்கு மேல் ஒரு அடி உயரத்திற்கு 1:6 என்னும் விகிதத்திலான சிமெண்ட் கலவையால் ஆன அடிப்பீடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக அடிப்பீடம் அமைக்கப் பயன்படும் நான்குக்கு ஆறு அங்குலம் என்னும் அளவிலான ஸ்லாபுகளைத் தவிர்த்துவிடலாம். அதற்குப் பதில் செங்கற்களைப் பயன்படுத்தலாம். இந்த முறையைப் பயன்படுத்தினால் அஸ்திவாரச் செலவை 35-50 சதவீதம் குறைக்கலாம்.
சுவர்களைப் பொறுத்தவரை எலிப்பொறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சுவர்களுக்கு உறுதி கூடும். கிராதி செங்கற்களையும் சுவர்களுக்குப் பயன்படுத்தலாம். வெப்பமயமான இடங்களில் வழக்கமான செங்கற்களால் சுவர்களை எழுப்புவதைவிட கிராதிச் செங்கற்களைப் பயன்படுத்தும்போது செலவும் குறையும்; வீட்டுக்குத் தேவையான வெளிச்சமும், காற்றும் கிடைக்கும்.
கூரைகளைப் பொறுத்தவரை, வழக்கமாக ஆர்சிசி ஸ்லாப்பைப் பயன்படுத்துவதற்குப் பதில் ஃபெர்ரோ சிமெண்ட் சேனல், ஜாக் ஆர்ச், ஃபில்லர் ஸ்லாப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் ஆர்சிசி ஸ்லாப்களில் அதிகமான அளவுக்கு கான்கிரீட் வீணாகிறது மேலும் இந்த ஸ்லாப்கள் காரணமாகக் கட்டிடத்தின் சுமையும் கூடுகிறது. எனவே எடை குறைவான பொருள்களைக் கொண்டு கட்டிடத்தின் கூரையை அமைப்பதன் மூலம் செலவையும் குறைக்கலாம்.
கட்டிடத்தின் சுவர்கள் வழியே அஸ்திவாரத்திற்குக் கடத்தப்படும் எடையும் குறையும். ஃபில்லர் ஸ்லாப்களைப் பயன்படுத்திக் கூரையை அமைக்கும்போது 15-25 சதவீதம் செலவை மிச்சப்படுத்தலாம். ஆனால் தகுந்த வடிவமைப்புப் பொறியாளரின் பரிந்துரையின் பேரிலேயே கட்டுமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- ஆர்.கே.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago