குறைந்த விலை
 வீடுகள் தேவை
 அதிகரிப்பு

ஆடம்பர வீடுகள், சொகுசு வீடுகள் கட்டுவதற்கு முன்பு ஆர்வம் காட்டிவந்த பல கட்டுமான நிறுவனங்கள், இன்று குறைந்த சதுர அடியில், குறைந்த விலையில் வீடுகள் கட்ட ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு என்ன காரணம்?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை நகரின் மையப் பகுதிகளில் சொகுசு வீடுகள் வாங்கப் பலரும் ஆர்வம் காட்டி வந்தனர்.

ஆனால், 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, கட்டுமானத் துறையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக 2012ஆம் ஆண்டு இறுதி வரை கட்டப்பட்ட சொகுசு வீடுகள் பலவற்றை விற்க முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் திணற ஆரம்பித்தன. இதன் பின்னர் அதிக விலையில் சொகுசு வீடுகள் அல்லது வில்லாக்கள் எனப்படும் தனி வீடுகளைக் கட்டப் பல கட்டுமான நிறுவனங்கள் தயங்கின என இத்துறையில் உள்ளவர்களே வெளிப்படையாகக் கூறுவதைக் கேட்க முடிந்தது.


2012ஆம் ஆண்டு இறுதியில், இந்தியப் பெருநகரங்களில் வீடுகளுக்கான பற்றாக்குறை 2.6 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையில் சுமார் 70 சதவீதம் வீடுகள் நடுத்தரக் குடும்பத்தினர் விரும்பும் குறைந்த விலை வீடுகளே அதிகம். வீடு தேவை அதிகரித்த சூழ்நிலையில் பெரிய நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன.

டாடா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்மார்ட் வேல்யூ ஹோம்ஸ், மஹிந்திரா லைஃப் ஸ்பேஸ், படேல் ரியாலிடி உள்ளிட்ட பல நிறுவனங்கள் வீடு தேவையைக் கருத்தில் கொண்டு புதிய திட்டங்களைச் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளன.
 இது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், முக்கிய நகரங்களின் மையப் பகுதிகளில் நிலத்தின் விலை அதிகம் என்பதால், புறநகர்ப் பகுதிகளில்தான் வீடுகளைக் கட்ட வேண்டியிருப்பதாக முன்னணி கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, பெங்களூரு, புனே போன்ற நகரங்களில், பிரதானப் பகுதிகளில் இருந்து 25 முதல் 30 கி.மீ. தூரத்திலேயே குறைந்த விலைக்கு வீடுகளைக் கட்ட முடிகின்றன. இங்குத்தான் ஓரளவு குறைந்த விலையில் நிலங்கள் கிடைக்கின்றன. ஆனால், கொல்கத்தா, அகமதாபாத் போன்ற நகரங்களில் 10 முதல் 15 கி.மீ. தூரத்திலேயே வீடு கட்ட முடிகிறது என்று பெரிய கட்டுமான நிறுவனங்கள் குறைப்பட்டுக் கொள்கின்றன.

சென்னையிலும் இந்த நிலை வர வேண்டும் என்பது கட்டுமான நிறுவனங்களின் எதிர்பார்ப்பு.
பொதுவாக எல்லோருக்குமே சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தாலும், ஆண்டு வருமானம் 4 முதல் 5 லட்சத்திற்குள் வாங்குவோருக்கு இந்த ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்க இவர்கள் தயாராகவும் உள்ளனர்.

இதனால், இவர்களைக் குறி வைத்து 550 முதல் 700 சதுரஅடி வரையிலான குறைந்த பரப்பளவிலான வீடுகளைக் கட்டுவதற்குக் கட்டுமானத்துறையினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், 2 படுக்கை அறைகள் அல்லது 3 படுக்கை அறைகள் கொண்ட வீடுகளை வாங்கவும் பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.

எனவே இதுபோன்ற வீடுகள் தவிர்த்து ஆடம்பர, சொகுசு வீடுகள் கட்டுவதையும் கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைத்துக் கொண்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இனி எதிர்காலத்தில் குறைந்த விலை வீடுகளை அதிகம் கட்டவும் முன்னணி கட்டுமான நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இதற்குச் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் முக்கிய அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்