பெண் தடம்: அரியணை ஏறாமல் நடத்திய ஆட்சி

By ஆதி

மொகலாயப் பேரரசு என்றவுடன் நம் நினைவுக்கு வரும் பெண் பெயர் மும்தாஜும் அவரது நினைவாகக் கட்டப்பட்ட தாஜ்மகாலும். ஆனால், அதே மொகலாயப் பேரரசில் அரியணையில் அமராமலேயே செல்வாக்கு செலுத்திய அரசி நூர்ஜஹான். ஆட்சி நிர்வாகம், பொருளாதாரம், கலை, அரசியல் எனப் பல துறைகளைத் தனித்துவத்துடன் கையாண்டதற்காக அவர் புகழ்பெற்றிருக்கிறார். இந்திய வரலாற்றில் செல்வாக்கு செலுத்திய மூன்று பெண்களில், மத்திய காலத்தைச் சேர்ந்த நூர்ஜஹானும் ஒருவர் என்கிறார் எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா.

உலகின் ஒளி

நான்காவது மொகலாய அரசரும் அக்பரின் முதல் மகனுமான ஜஹாங்கிரின் (1569 -1627), கடைசி மனைவி நூர்ஜஹான்

(1577-1645). நூர்ஜஹானுக்கு அவர் இரண்டாவது கணவர். ஈரானில் இருந்த காந்தஹாரில் வசதியான பெர்சியக் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவில் குடியேறியவர் நூர்ஜஹான். பூர்விகப் பெயர் மெஹருன்னிசா. அவருடைய தந்தை மிர்சா கியாஸ் பேக் இலக்கியவாதி, பேரரசர் அக்பரின் அமைச்சர். அதனால் மெஹருன்னிசாவுக்கும் உயர்ந்த கல்வியை வழங்கினார்.

பெர்சிய ராணுவ வீரரும் பிகார் பகுதி ஆளுநருமான ஷேர் ஆப்கனை 17 வயதில் மெஹருன்னிசா திருமணம் செய்துகொண்டார். ஷேர் ஆப்கன், அரசரின் எதிரிகளுக்கு நெருக்கமானபோது கொல்லப்பட்டார். கணவரை இழந்த பின் அரண்மனை பணிப்பெண்களில் ஒருவரானார் மெஹருன்னிசா. அவருடைய அழகால் ஈர்க்கப்பட்ட ஜஹாங்கிர், விரைவிலேயே தன் மனைவியாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் நூர் மகால் என்றழைக்கப்பட்ட மெஹருன்னிசா, ‘உலகின் ஒளி’ என்று பொருள்படும் வகையில் நூர் ஜஹான் என்ற பெயரைப் பெற்றார்.

தனிச் செல்வாக்கு

திருமணம் செய்துகொண்ட ஒன்பது ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தையும், அரண்மனையில் அனைத்து உரிமைகளையும் பெற்றுவிட்ட அவர், ஜஹாங்கிர் இறக்கும்வரை செல்வாக்கு செலுத்தினார். நூர்ஜஹானுடன் திருமணம் நடைபெற்ற பிறகு, அரசர் ஜஹாங்கிர் அரண்மனை சுகபோகங்களில் திளைத்திருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் சொல்கின்றன. அப்போது நூர்ஜஹானே அரசவை நிர்வாகத்தையும் அரசியல் அதிகாரத்தையும் புத்திசாலித்தனம், துணிச்சலுடன் கையாண்டார். இத்தனைக்கும் அவரது காலத்தில் அரண்மனை முஸ்லிம் பெண்கள் ஆண்களை நேரடியாகப் பார்த்துப் பேசத் தடை இருந்தது. இருவருக்கும் இடையில் பர்தா துணி தொங்கவிடப்பட்டிருக்கும்.

நூர்ஜஹானுக்குத் துணையாகத் தலைமை அமைச்சர் மிர்சா கியாஸ் பேக், அரசவையில் இடம்பெற்றிருந்த அசஃப் கான், ஜஹாங்கிரின் மகன் குர்ரம் ஆகியோர் ஆட்சி நடத்த உதவினர். மிர்சா கியாஸ் பேக் வேறு யாருமல்ல; நூர்ஜஹானின் தந்தை, ஏற்கெனவே அமைச்சராக இருந்தவர். அசஃப் கான், நூர்ஜஹானின் சகோதரர். ஜஹாங்கிரின் இரண்டாவது மனைவியின் மகன் குர்ரம். இவர்தான் பிற்காலத்தில் தாஜ்மகாலைக் கட்டியதற்காகப் புகழ்பெற்ற ஷாஜஹான்.

வணிகம், கலையின் உச்சம்

தன் ஆட்சிக் காலத்தில் மொகலாய நிலப்பகுதியைக் கடந்து சென்ற வணிகர்களிடம் நூர்ஜஹான் வரி வசூலித்தார். ஐரோப்பியர்களின் சொகுசுப் பொருட்களை வர்த்தகம் செய்தார். வெளிநாட்டு, உள்நாட்டு வர்த்தகத்தில் அவரது தலையீடு இருந்ததால், வணிகர்கள் அவரது ஆதரவை வேண்டி நின்றனர். தனக்குச் சொந்தமான பயணிகள், சரக்குக் கப்பல்களை மெக்காவுக்கு அனுப்பி வணிகம் செய்தார். இந்த அம்சங்கள் காரணமாக அவருடைய வர்த்தகத் தொடர்புகளும் சொத்தும் அதிகரித்தன. அவரது காலத்தில் மொகலாயர்களின் தலைநகரமான ஆக்ரா, வர்த்தகத்தில் செழித்தது.

ஜஹாங்கிர் காலத்தின் கலை, கட்டுமானம், பண்பாட்டு உச்சங்களுக்கும் ஊக்கமளித்தவர் நூர்ஜஹானே. அவரது அழகியல் பார்வையே இதற்கு அடிப்படை. தலைநகர் ஆக்ராவிலும், அரசவையின் கோடைவாசஸ்தலமான காஷ்மீரிலும் அழகுற அமைக்கப்பட்ட பூங்காக்கள், கல்லறைகளில் பல இப்போதும் உள்ளன. முழுக்க பளிங்கினால் கட்டப்பட்ட முதல் கல்லறையை தன் தந்தை மிர்சா கியாஸ் பேக்குக்கு ஆக்ராவில் அமைத்தார். வெள்ளைப் பளிங்கில் அரிய மணிக் கற்களைப் பதித்துக் கட்டிடங்களை அழகுபடுத்தும் முறை இந்தக் கல்லறையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. உலக அதிசயம் தாஜ்மகாலுக்கு இதுவே முன்னோடி.

கவிஞர்களின் வம்சாவளியில் வந்த நூர், தான் எழுதியதுடன் அரசவைப் பெண்களையும் எழுத ஊக்குவித்தார். அரசவைக்கு வெளியே பெர்சியப் பெண் கவிஞர் மெஹ்ரிப் போன்றவர்களை அவர் ஊக்குவித்தார்.

உச்சமும் வீழ்ச்சியும்

மொகலாயப் பேரரசில் ஒரு பெண் பெயரில் நாணயம் வெளிவந்திருக்கிறது என்றால் அது நூர்ஜஹானின் பெயரில் மட்டும்தான். அது மட்டுமல்லாமல், அரச முத்திரை பதிக்கும் அதிகாரமும் நூர்ஜஹானிடமே இருந்தது. அரச முத்திரை இல்லாமல் அரசவையில் முக்கியமான நடைமுறைகள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்பதிலிருந்து நூர்ஜஹானின் அதிகாரத்தை உணர்ந்துகொள்ளலாம்.

ஜஹாங்கிருக்கு அடுத்தபடியாக, தன்னுடைய மகள் லாட்லியின் கணவர் ஷெஹர்யார் அரச பதவியேற்க வேண்டுமென நூர்ஜஹான் விரும்பினார். ஆனால், ஷாஜஹான் அதை விரும்பவில்லை. நீண்ட காலம் பொறுத்திருந்த ஷாஜஹான், கடைசியில் ஜஹாங்கிருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து பதவியில் அமர்ந்தார். இதற்கு ரகசிய ஆதரவு கொடுத்தவர் அசஃப் கான், ஷாஜஹான் மணம் முடித்த மும்தாஜின் தந்தை. நூர்ஜஹான், மும்தாஜுக்கு அத்தை முறை.

ஷாஜஹான் ஆட்சிக்கு வந்த பிறகு, நூர்ஜஹான் சிறையில் அடைக்கப்பட்டாலும் பின்னர் லாகூருக்கு (தற்போது பாகிஸ்தானில்) நாடு கடத்தப்பட்டார். அங்கே அவரது கல்லறை, ஜஹாங்கிரின் கல்லறைக்கு அருகே உள்ளது.


நூர்ஜஹான் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள்

தனிப்பெருமை

மத்திய கால இந்தியப் பெண்களின் அதிகாரம், செல்வாக்குக்கு முதன்மை அடையாளமாக நூர்ஜஹான் திகழ்கிறார். மொகலாய ஆட்சியில் வியந்து பாராட்டப்பட்ட மதிப்புமிக்கப் பெண் அவர். மொகலாய ஆட்சி உச்சத்தில் இருந்த காலத்தில், 15 ஆண்டுகள் அவர் செல்வாக்கு செலுத்தியுள்ளார். மொகலாயர்கள் காலத்தில் இந்தியா பெருமளவு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. வணிகத்திலும் செழித்தோங்கி இருந்தது. ஆசிய, ஐரோப்பிய ஆட்சியாளர்கள் இதைப் பொறாமையாகப் பார்க்கத் தொடங்கி இருந்தார்கள்.

மொகலாய அரசவைப் பெண்கள் அரண்மனையை விட்டு எளிதாக வெளியில் செல்ல முடியாது என்ற நிலையில், ஆட்சியில் நூர்ஜஹான் செலுத்திய செல்வாக்கு சாதாரணமானதல்ல. ஒரு வகையில் பழைய இந்துஸ்தானம் என்கிற பரந்த பரப்பை முதலில் கட்டுக்குள் வைத்திருந்த பெண் என்ற பெருமை நூர்ஜஹானையே சேரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்