எனக்கு 38 வயதாகிறது. சில நாட்களாக வலது மார்பகம் வலிக்கிறது. அது மார்பகப் புற்றுநோயாக இருக்க லாம் என்று எச்சரிக்கிறாள் என் தோழி. என் குடும்பத்தில் இதுவரை யாருக்கும் புற்றுநோய் இல்லை. எனக்குப் புற்றுநோய் வருமா? எதனால் புற்றுநோய் ஏற்படுகிறது?
- சித்ரா, சென்னை.
டாக்டர் அசார் உசேன், வலி தணிப்பு நிபுணர், அடையாறு புற்றுநோய் மையம், சென்னை.
பொதுவாகப் புற்றுநோய் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. சுற்றுச்சூழல், வாழ்வியல் காரணங்கள் முதல் வகை. மற்றொன்று பரம்பரைக் காரணங்கள். தொடர்ச்சியாகப் புகையிலை உபயோகித்தால் புற்றுநோய் கண்டிப்பாக வரும். புகையிலையைத் தவிர்த்தாலே புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையும்.
பெரும்பாலான பெண்களில் கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகிய இரண்டு வகைகள்தான் அதிக அளவில் கண்டறியப்படுகின்றன. கர்ப்பப் பையில் புற்றுநோய் உண்டாக்கும் கிருமிகள் உண்டா என ‘பாப் ஸ்மியர்’ பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். அதிக வெள்ளைப்படுதல், நீண்ட நாள் உதிரப்போக்கு இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்துக்கு ஒருமுறையாவது உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுள் 50 சதவீதப் பெண்கள் மார்பகப் புற்றுநோயால்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மார்பக சுய பரிசோதனை செய்துவந்தால் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய முடியும். ‘மாமோகிராம்’ பரிசோதனை, ஆரம்ப நிலையில் உள்ள நுண்ணிய கட்டியையும் கண்டுபிடித்து விடும். தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொண்ட பிறகு இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
மார்பக சுயபரிசோதனை முறை
இடுப்புக்கு மேலே துணிகளைக் களைந்துவிட்டுக் கண்ணாடி முன் நிற்கவும். ஒவ்வொரு மார்பையும் தனித்தனியாக உன்னிப்பாகக் கவனிக்கவும். அதன் அளவு, நிறம், தோற்றம் மற்றும் காம்புகளின் அமைப்பைக் கவனிக்க வேண்டும்.
இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, அதேபோல் கவனிக்க வேண்டும்.
இரண்டு கைகளையும் இடுப்பில் அழுத்திக்கொண்டு, தோள்பட்டைகளை முன் தள்ளி கவனிக்க வேண்டும்.
கையின் மூன்று நடு விரல்களில் சோப்பையோ, குளிப்பதற்கு உபயோகப்படுத்தும் வழவழப்பான திரவத்தையோ தடவிக் கொள்ளுங்கள். மார்பின் மேல் அந்த விரல்களால் மிதமாக அழுத்திக்கொண்டு, வட்டம் வட்டமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் விரல்களை நகர்த்தி, மார்புப் பகுதி முழுவதையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
மார்புக்கு மேல் இருக்கும் காரை எலும்பில் இருந்து வயிற்றின் மேற்பகுதி வரையிலும், பக்கவாட்டில் அக்குளிலிருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரையிலும் கட்டி ஏதாவது இருக்கிறதா எனத் தடவிப் பார்க்க வேண்டும்.
இடது மார்பை வலது கையாலும், வலது மார்பை இடது கையாலும் பரிசோதனை செய்ய வேண்டும்.
மார்புக் காம்புகளில் இருந்து கசிவு உண்டா என்று அழுத்திப் பார்க்க வேண்டும்.
பின்னர் படுத்துக்கொண்டு, ஒரு கையை மேலே தூக்கி, மற்ற கையால் மேலே சொன்னபடி மார்பை அழுத்திப் பரிசோதித்துக்கொள்ளவும்.
பெண்கள் விழிப்புடன் இருந்தால் இரண்டு வழிகளில் புற்றுநோயை எதிர்த்துப் போரிடலாம். ஒன்று, நோய் வராமல் தடுக்கும் முறைகளைக் கையாள்வது, மற்றொன்று மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை செய்துகொள்வது.”
முக்கிய செய்திகள்
உலகம்
5 mins ago
சினிமா
3 hours ago
ஓடிடி களம்
26 mins ago
இந்தியா
34 mins ago
தமிழகம்
56 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
வாழ்வியல்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago