தம்புரா, வயலின், மிருதங்கம் பின்னணியில் ஒலிக்க மேடையில் பிரதானமாக கர்நாடக இசைக் கச்சேரி நடப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் பேஸ் கிடார், டிரம்ஸ், மாண்டலின், கீபோர்ட் போன்ற வாத்தியங்களுக்கு இடையில் வித்தியாசமான ஓர் இசை நிகழ்ச்சியை ‘மிஸ்டிக் ஜர்னி’ என்னும் பெயரில் சமீபத்தில் சென்னை, கிருஷ்ண கான சபாவில் வழங்கினார் சாஸ்வதி.
உள்ளொளிப் பயணம்
பொதுவாக கர்நாடக இசை நிகழ்ச்சிகளின் போது, அந்த இசையை நுட்பமாக ரசிக்கத் தெரிந்தவர்களே அதின் ஊன்றிப்போய் இருப்பார்கள். மீதிப் பேர், செல்போனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டோ, பக்கத்தில் இருப்பவரிடம் ஓட்டலில் சற்றுமுன் சாப்பிட்ட டிபனைப் பற்றி விமர்சித்துக் கொண்டோ இருப்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட காட்சிகளை சாஸ்வதியின் நிகழ்ச்சியில் பார்க்கவே முடியவில்லை. காரணம், புதுமை.
கர்நாடக இசை, இந்துஸ்தானி, அபங், மேற்கத்திய இசை போன்ற பல வடிவங்களும் நிகழ்ச்சியில் வெளிப்பட்டன. கல்யாணி ராகத்தில் அமைந்த எத்தனையோ கர்நாடக இசை கீர்த்தனைகள் இருக்கும் போது, ‘காற்றினில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ’ என்னும் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடியவிதம், நிகழ்ச்சியோடு ரசிகர்களை ஒன்ற வைத்தது. அவர்களை ஓர் உள்ளொளிப் பயணத்துக்குத் தயார்படுத்தியது.
பெண் பாடலாசிரியர்கள்
நிகழ்ச்சியில் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகள் பாடப்பட்டாலும் சில பெண் பாடலாசிரியர்களின் பாடல்களுக்கு தானே இசையமைத்து வழங்கினார் சாஸ்வதி. இந்து பாலாஜியின் ‘உன்னை காணாத’, பிருந்தா ஜெயராமனின் ‘நீ என்ன கடவுளா?’, ‘இசை வெள்ளமாக பூமி எங்கும் வருதே…’ ஆகிய பாடல்களும் கேட்பதற்குப் புதிய அனுபவமாக இருந்தன.
உளவியல் ஆலோசகரான பிருந்தா ஜெயராமனின் பாடல் வரிகளும் நிகழ்ச்சியின் தலைப்புக்கு உதவும் வகையில் அமைந்தன. கீபோர்ட் வாசித்த ரவிஷங்கர் அய்யர், மாண்டலின் வாசித்த சச்சிதானந்த் சங்கரநாராயணன், டிரம்ஸ் வாசித்த கிருஷ்ண கிஷோர், மிருதங்கம் வாசித்த பிரேம், இந்திய அளவில் புகழ் பெற்ற பேஸ் கிடாரிஸ்ட்டான கீத் பீட்டர் ஆகியோரின் இசையும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு துணையாக இருந்தன.
“எனக்கு கர்நாடக இசை மட்டும்தான் தெரியும். ஆனால் இந்துஸ்தானி பாடவும் செய்வேன். மேற்கத்திய வாத்தியங்களான கீபோர்ட், டிரம்ஸ் போன்றவற்றை வாசிக்கவும் தெரியும். இதெல்லாமே நான் பாடும் இசையிலும் வெளிப்படும். இதுதான் மிஸ்டிக் ஜர்னி” என்கிறார் சாஸ்வதி.
யக்ஞராமன் ஜூலை திருவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை கிருஷ்ண கான சபாவும் உத்ஸவ் மியூசிக்கும் ஏற்பாடு செய்திருந்தன. கிருஷ்ண கான சபாவின் தலைவர் முரளி. இவர் யக்ஞராமனின் மகன். ‘மிஸ்டிக் ஜர்னி’யை வழங்கிய சாஸ்வதி யக்ஞராமனின் பேத்தி!
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
ஆன்மிகம்
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago