வானவில் பெண்கள்: இசையும் நடனமும் எனக்கு இரு கண்கள்

By வா.ரவிக்குமார்

சென்னை மியூசிக் அகாடமி அரங்கம். நண்பகல் 12 மணி. முத்துசாமி தீட்சிதரின் ‘விசாலாக்ஷி விஸ்வேஷி’ பாடிக்கொண்டிருந்தார் ஒரு பாடகி. மயிலிறகால் வருடுவது போல இதமாக இருந்தது அவரது குரல். ரசிகர்களின் கூட்டம் மெய்மறந்திருந்தது. தொடர்ந்து சுவாதி திருநாள், தியாகராஜரின் படைப்புகளை அடுத்தடுத்துப் பாடி ரசிகர்களின் பாராட்டைக் கைத்தட்டல்களின் மூலம் பெற்றார். இந்த ஆண்டின் சங்கீத கலாநிதி விருது பெற்ற ஏ. கன்யாகுமாரி இசையமைத்த அன்னமாச்சார்யாவின் ‘மேலு லேது தீலு லேது’ பாடலைப் பாடி ரசிகர்களை பக்தியில் திளைக்க வைத்தார். அந்தப் பாடகியின் பெயர் ரேவதி குமார்.

“இன்னும் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கலாம்…” என்றபடி அரங்கத்தை விட்டு வெளியேறினர் ரசிகர்கள். இப்படியொரு எதிர்பார்ப்பை, பாராட்டை அகாடமிக்கு வரும் ரசிகர்களிடமிருந்து ஒரு கலைஞர் பெறுவதற்கு அசாத்தியமான உழைப்பு இருக்க வேண்டும். அந்த உழைப்பு ரேவதியிடம் நிறைந்திருந் ததை அந்த நாள் நிகழ்ச்சியில் பரிபூரணமாக உணர முடிந்தது.

தொடங்கியதும் தொடர்வதும்

2008-ம் ஆண்டு மியூசிக் அகாடமி நடத்திய 20-வது ஸ்பிரிட் ஆஃப் யூத் போட்டியில் சிறந்த இளம் பாடகராகத் தேர்வானவர் இந்த ரேவதி. முதல் தலைமுறை இசைக் கலைஞரான ரேவதி, கர்னாடக இசையை கற்றுக்கொள்ளத் தொடங்கியது சுலோச்சனா பட்டாபிராமனிடம். தற்போது இசைப் பயிற்சியை வீணை வித்வான் வசந்த்குமாரிடம் தொடர்வதாகச் சொன்னார் ரேவதி.

கர்னாடக இசைப் பாடகர், பரத நாட்டியக் கலைஞர், அரங்கக் கலைஞர், பரத நாட்டியத்துக்காகப் பாடுவது, நட்டுவாங்கம் செய்வது, பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிகாரி எனப் பல துறைகளில் ரேவதியின் திறமை பளிச்சிடுகிறது.

இசையும் நடனமும் தனது இரு கண்கள் என்று சொல்லும் ரேவதி, புகழ்பெற்ற நடனக் கலைஞர் ஷோபனாவிடம் பல ஆண்டுகளாக பரத நாட்டியத்தைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். ஷோபனாவின் புகழ்பெற்ற டேன்ஸிங் டிரம்ஸ், மாயா ராவணன், கிருஷ்ணா போன்ற படைப்புகளில் பாடுவதோடு நடனமும் ஆடியிருக்கிறார் ரேவதி.

இயல்பாகக் கிடைத்த அரங்க வாய்ப்பு

“பாட்டு, நடனத்தில் இயல்பிலேயே எனக்கிருந்த ஈடுபாட்டை அறிந்த எழுத்தாளரும் அரங்க செயற்பாட்டாளருமான ப்ரஸன்னா ராமஸ்வாமி அவரது நாடகங்களில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்தார். ‘வளர்கலை’ போன்ற படைப்புகளிலும் அவரது ‘சக்திக் கூத்து’ நாடகத்தில் நடிகை ரோஹிணியுடனும் இடம்பெற்றேன். கடந்த ஆண்டு பிரான்ஸிலும் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டது” என்கிறார் ரேவதி.

“வாய்ப்பாட்டுக் கலைஞராகப் பாடுவதற்கும் ஒரு நடனக் கலைஞருக்காக பாடுவதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?” என்றோம் ரேவதியிடம்.

“என்னைப் பொறுத்த அளவில் அப்படியொரு வித்தியாசத்தை நான் உணர்ந்ததில்லை. இதற்கு நான் ஒரு நடனக் கலைஞராக இருப்பதும் ஒரு காரணம். பொதுவாக வாய்ப்பாட்டுக் கலைஞராகப் பாடுவதற்கும் நடனத்துக்கு பாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நடனம் ஆடுபவரின் அபிநயம், ஜதி, அவரின் உடல் மொழிக்கேற்ப சிறிது விஸ்தாரமாக பாடுவது அவசியம். இது தவிர, அனுபவித்துப் பாடுவது என்பது, தனியாகப் பாடினாலும், நடனத்துக்குப் பாடினாலும் பொதுவான அம்சம். நம்முடைய இசையே மனோதர்மத்துடன் கூடியது. கலையின் வடிவம் எதுவானாலும் இந்த மனோதர்மம் வெளிப்படும்” என்று பளிச்செனப் பதில் சொல்கிறார் ரேவதி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

விளையாட்டு

10 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்