தனசீலி திவ்யநாதன்ஊடகங்களில் நாம் அன்றாடம் காணும் செய்திகளில் சிறுமிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவும் ஒன்று. இதை மற்றுமொரு செய்தியாகப் பலர் கடந்துபோய்விடுகின்றனர். அப்படிக் கடந்துவிட முடியாததொரு பாலியல் வல்லுறவையும் அதன் விளைவையும் பேசுகிறது சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘ஃபயர்பிராண்ட்’ மராத்தியத் திரைப்படம்.
பிரியங்கா சோப்ராவின் தயாரிப்பில் அருணா ராஜே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வல்லுறவால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் வலிமிகுந்த போராட்டத்தைச் சொல்கிறது. கதாநாயகி, தேசிய விருதுபெற்ற உஷா ஜாதவ். மும்பை குடும்பநல நீதிமன்றம் ஒன்றில் வழக்குரைஞராகப் பணியாற்றும் இவர், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடி நீதியையும் நஷ்டஈட்டையும் பெற்றுத்தருபவர்.
அச்சுறுத்தும் நினைவு
வேலை, வேலை எனக் கருத்துவலிமையோடு போராடும் உஷாவுக்கு இணக்கமான கணவர் கிரீஷ் குல்கர்னி. உஷாவின் இரவுப் பொழுதுகள் வலியோடு தொடங்குகின்றன. அன்பும் காதலும் கொண்ட கணவனின் தொடுதல், பாலியல் வல்லுறவு நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதால் கணவனோடு இயல்பாக இருக்க முடியாமல் தவிக்கிறார். கேள்விக்குறிபோல் அவர் வளைந்து சுருண்டு படுத்திருக்கும் காட்சி அச்சுறுத்தப்பட்ட குழந்தையை நினைவூட்டுகிறது.
உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்றும் மாற்றம் ஏதும் நிகழவில்லை. அதனால், விவாகரத்து பெற்று மறுமணம் செய்துகொள்ளும்படி கணவனை வேண்டுகிறார். அதற்கு அவர், “காதல் வேறு; பாலுறவு வேறு. நான் உன்னைக் காதலிக்கிறேன். அன்பு செய்கிறேன்” என்று சொல்கிறார். சிறிது காலம் பிரிந்திருப்பது, மருத்துவர் பரிந்துரைத்த பயிற்சியைத் தொடர்வது என முடிவுசெய்கின்றனர்.
கணவனின் போராட்டம்
திரைப்படத்தில் உணர்வைக் கையாளத் தெரியாத கதாபாத்திரம் ராஜேஷ்வரி சச்தேவ். தன் கணவர், பெண்களின் பின்னால் அலைபவர் எனக் கூறி அவரிடமிருந்து விவாகரத்துக் கோரி உஷா ஜாதவை அணுகுகிறார். தன்னைக் கண்டுகொள்ளாத கணவனைத் தண்டிக்கத் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்கிறார்.
மனைவி கேட்கும் விவாகரத்தைத் தரச் சம்மதித்தாலும் மூளைவளர்ச்சி குறைபாடுள்ள மகளை எப்படியாவது தன்னிடம் வைத்துக்கொள்ளப் போராடும் தந்தையாக வருகிறார் சச்சின் ஹெடேகர். முதன்முறையாக இந்த வழக்கில் உஷா ஜாதவ் தோற்றுப்போகிறார்.
ஆறாத காயம்
இயல்பிலேயே உணர்வுவயப்படும் ராஜேஷ்வரி சச்தேவ், உஷாவுடன் நீதிமன்ற வளாகத்திலேயே சண்டையிடுகிறார். கழுத்து வலியோடு வீட்டுக்குத் திரும்பி, தன்னந்தனியாகச் சுருண்டு படுத்துக்கிடக்கும் உஷாவைச் சந்திக்க வருகிறார் சச்சின். தன் மனைவியின் நடத்தைக்கு மன்னிப்புகோர வந்தவர் உஷாவின் கழுத்து வலியைப் போக்க உதவுகிறார்.
எது நடந்தாலும் அது நம்மை வீழ்த்த அனுமதிக்கக் கூடாது; ‘அதனால் என்ன?’ என்ற மனநிலையோடு அதைக் கடந்துசெல்ல வேண்டும் என்றும் சொல்கிறார். இந்த உரையாடல், உறவில் முடிகிறது. வழக்கத்துக்கு மாறாக அச்சமும் அருவருப்பும் அற்றதாக உஷாவுக்கு அந்த உறவு இருந்தது. தன் கணவனை அழைத்து வீட்டுக்கு வந்துவிடும்படி சொல்கிறார். அவர் வந்ததுமே நடந்தவற்றைச் சொல்கிறார்.
‘நீ சொன்னதுபோல காதல் வேறு; உடல் உறவு வேறு. இது காதல் அல்ல’ என்று விளக்குகிறார். லேசாகத் தயங்கினாலும் எவ்வித விமர்சனமும் இன்றிக் கணவனும் அதை ஏற்கிறார். இறுதிக் காட்சிகளும் மனநல சிகிச்சை முறைகளும் விமர்சனத்துக்கு உரியவையாக இருந்தாலும், உஷா தன் நீண்ட காலத் துயரிலிருந்து விடுபட்டது ஆறுதலாக இருக்கிறது.
இணக்கமான கணவன்களாக இரு கதாபாத்திரங்களை அமைத்திருப்பது மகிழ்ச்சி. கல்வி, சமூக நிலை, தொழில் ஆகியவற்றில் வெற்றிபெற்றாலும் பாலியல் வல்லுறவால் உண்டாகும் காயங்களைத் துடைத்தெறிவது எளிதல்ல என்ற உண்மையை உரக்கச் சொன்னவிதம் பாராட்டுக்குரியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago