போ
ராட்டத்தை வாழ்க்கையாகப் பலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், லட்சுமி அம்மாவைப் போராட்டம்தான் தேர்ந்தெடுத்தது. 12, 13 வயதுகளிலேயே வறுமை, தந்தையின் கவனிப்பின்மையால் வேண்டாத மனிதராகி, குழந்தைத் தொழிலாளியாக பனியன் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே தொழிற்சங்கத்திலிருந்து தனது போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார் லட்சுமி அம்மா. இவரது சுயசரிதையான ‘லட்சுமி என்னும் பயணி’க்கு சுயசரிதை வகைமையில் ஸ்பேரோ (Sound and Picture Archives for Research On Women) விருது கிடைத்துள்ளது. சமூகம், அரசியல், வாழ்வாதார உரிமைகளுக்காக அடித்தளத்திலிருந்து போராடும் பெண்களின் பதிவுகள் மிக அரிதான நிலையில் லட்சுமி அம்மாவுக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கவுரவம் முக்கியமானது.
தொழிலாளர் உரிமைகள், சாதி எதிர்ப்பு, வர்க்கப் போராட்டங்களுக்குப் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த லட்சுமி, சி.ஐ.டி.யு. அமைப்பில் ‘குழந்தைத் தொழிற்சங்கவாதி’யாகத் தனது போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தத் தொடர்பிலேயே கட்சியின் முழுநேர உறுப்பினராகச் செயல்பட்ட, தற்போதைய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசனை மணந்துகொண்டார். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது காவல்துறையினரால் தேடப்பட்ட ஒருவருடன் திருமணத்தில் இணைந்த லட்சுமிக்கு ஒரு இந்திய, தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைக்கும் சாதாரணக் குடும்ப மகிழ்ச்சிகூடக் கிடைக்கவில்லை என்பதை அவரது சுயசரிதை விளக்குகிறது. பிரசவம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகள் எதிலுமே கணவர் இல்லாத சூழ்நிலையை எதிர்கொண்டவர் லட்சுமி அம்மா. குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் கவனிப்பு, வறுமை, தனிப்பட்ட இழப்பு ஆகியவற் றோடு தனது கணவரது அனைத்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகிறார் லட்சுமி அம்மா.
வலியின் வடிகால்
‘லட்சுமி என்னும் பயணி’ புத்தகம் லட்சுமி என்ற ஒரு பெண்மணியின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சொல்வதல்ல. பொதுவாழ்க்கையில் சில லட்சியங்களுடன் தங்கள் வாழ்நாளையே செலவழிக்கும் ஆண்களுக்குப் பின்னால் பங்களிக்கும் பெண்களின் கதை இது. குடும்பப் பொறுப்புகளையும் சுமந்துகொண்டு கணவரின் லட்சியங்களுக்கும் துணை நிற்கும் பெண்கள் குறித்த நூல்கள் மிகவும் அரிதானவை. அந்த வகையில் லட்சுமி அம்மாள் எழுதியுள்ள இந்த நூல் தனித்துவமானது என்று குறிப்பிட்டுள்ளார் ‘ஸ்பேரோ பெண்கள் ஆய்வக’த்தின் நிறுவன அறங்காவலரும் எழுத்தாளருமான அம்பை.
“புலம்பலும் தீர்ப்புகளும் இல்லாமல் இயல்பாக ஒரு தன்வரலாற்று நூலாக இது அமைந்தது. இந்தப் புத்தகம் இடதுசாரிகள், தமிழ்த் தேசியவாதிகள், பென்ணியவாதிகளிடையே ஓரளவு பரவலாகச் சென்றடைந்தது. முக்கியமான பெண்ணிய எழுத்தாளராக அறியப்படும் அம்பை நடத்துகிற அமைப்பால் இந்தப் புத்தகம் அங்கீகரிக்கப்பட்டு விருதும் கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி” என்கிறார் இந்த நூலை வெளியிட்ட மைத்ரி பதிப்பகத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கிருஷ்ணவேணி.
பொது வாழ்க்கை, ஆண்களுக்குக் கொடுக்கும் அனுபவமும் அங்கீகாரமும் வேறு. ஆனால், எளிய பின்னணியில் குடும்பத்தையும் குழந்தைகளையும் கணவரின் தோழமைகளையும் ஒரு சிறிய வீட்டுக்குள் சமாளித்தபடியே போராட்டம் மற்றும் சமூக மாற்றத்தில் நம்பிக்கையுடன் தொடரக்கூடிய பெண்களின் வலியும் அனுபவமும் வேறுவிதமானது. வீட்டுக்கே துரதிர்ஷ்டம் என்று கூறி லட்சுமியின் வெளியேற்றத்தை ஊக்குவித்த அவருடைய தாயை அவரது மரணம்வரை பராமரித்தவர் லட்சுமி அம்மா. எத்தனையோ தனிப்பட்ட நெருக்கடிகளுக்கிடையிலும் ஒரு லட்சிய வாழ்க்கையை வாழ முடியும் என்பதற்கான உதாரணம் இவர். அந்த வகையில் ஸ்பேரோவின் இந்த அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
38 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
43 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago