சந்தேகம் சரியா 13: காது குடைய பட்ஸ் பயன்படுத்தலாமா?

By கு.கணேசன்

தலைக்குக் குளிக்கும் போதெல்லாம் காது அடைத்துக் கொள்கிறது. அப்போது எனக்குக் காது சரியாகக் கேட்பதில்லை. `பட்ஸ்’ கொண்டு காதை சுத்தப்படுத்திய பிறகுதான் பிரச்சினை சரியாகிறது. இப்படி அடிக்கடி காதை குடைவது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. இது தவறு என்கிறாள் என் தோழி. இது சரியா?

உங்கள் தோழி சொல்வது சரிதான்.

காதுக்குள் குரும்பி இருக்கும்போது, அதில் தண்ணீர் இறங்கிவிட்டால் குரும்பி உப்பிவிடும். இது காது சவ்வை அடைத்துக்கொள்ளும். இதனால் காது சரியாகக் கேட்காது. குரும்பியை அகற்றிவிட்டால் காது அடைப்பு சரியாகிவிடும். குரும்பியை `பட்ஸ்’ கொண்டு அகற்றுவதைவிட மருத்துவர் உதவியுடன் அகற்றுவதுதான் சரி.

காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர்- பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். இதற்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. ஆனால், இது ஆபத்தானது.

பட்ஸை வைத்துக் காதை குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்குத் தள்ளிவிடுவதுதான் நடக்கும். அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். தவறுதலாகச் செவிப்பறையில் `பட்ஸ்’ பட்டு கிழித்துவிட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை பட்ஸைக் கொண்டு காது குடைவதைத் தவிர்ப்பதே நல்லது.

காது குரும்பியை அகற்ற

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை (Ear drum) சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்குத் தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. காதுக்குள் ‘செருமினஸ் சுரப்பிகள்’ (Ceruminous glands) உள்ளன. இவைதான் காதுக்குள் குரும்பியைச் சுரந்து, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன. குறிப்பாக, காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையைப் பாதிக்காதபடி தடுப்பது, இந்தக் குரும்பிதான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெள்ள மெள்ள ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெயைக் காதில் சில சொட்டுகள் விட்டால், அதில் குரும்பி ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும். என்றாலும், நாட்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்ச் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர் உதவி தேவை.

அந்நியப் பொருள் நுழைந்துவிட்டால்?

காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம். அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது. காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைச் சில சொட்டுகள் விட்டால், பூச்சி இறந்துவிடும். பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையைச் சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயைக் காதுக்குள் ஊற்றக் கூடாது. அப்படிச் செய்தால், காது கடுமையாகப் பாதிக்கப்படும்.

காதில் சீழ் வடிந்தால்?

காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம்தான். இதன் தொடக்கத்தில், மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் வரும். இதைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும். அந்த நிலையிலாவது சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்தச் சளியில் உள்ள கிருமிகள் மூக்கின் பின்பக்கத்தில் இருக்கும் ‘ஈஸ்டாக்கியன் குழல்' வழியாக நடுக்காதுக்குச் சென்று, சீழ் வைக்கும்.

பிறகு அங்குள்ள செவிப்பறையைத் துளைத்துக்கொண்டு வெளிக்காது வழியாகச் சீழ் வெளியேறும். காதில் சீழ் வடிந்தால், கண்டிப்பாக அது கேட்கும் திறனைப் பாதிக்கும். ஆகவே, இதற்கு ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுவிட வேண்டும். பட்ஸைப் பயன்படுத்திச் சுயமாகக் காதைத் துப்புரவு செய்துகொண்டு காலம் கடத்தினால், அறுவை சிகிச்சையில் கொண்டுபோய் விட்டுவிடும். எச்சரிக்கை அவசியம்.

(அடுத்த வாரம்: மாரடைப்பைத் தடுக்குமா `ஸ்டாடின்’ மாத்திரை?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

20 mins ago

விளையாட்டு

26 mins ago

சினிமா

32 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

38 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

24 mins ago

மேலும்