ரத்தக் குழாய் சுருக்கம் இதயத்தை பாதிக்குமா?

By டாக்டர் எல்.மகாதேவன்

எனக்கு Peripheral arterial disease இருப்பதாகச் சொல்கிறார்கள். இது மிகவும் சிக்கலான பிரச்சினையா? இதைப் பற்றி விளக்க முடியுமா டாக்டர்? -சுமித்ரா, மார்த்தாண்டம்

இதயத்துக்கு வெளியே உள்ள சுத்த ரத்தக் குழாய்கள் சுருங்குவதை Peripheral arterial disease என்று அழைப்பார்கள். ஒருவித கெட்ட கொழுப்பு கரைபடுவதால் இது உருவாகிறது. ரத்த நாளங்களில் `பிளேக்’ என்று சொல்லக்கூடிய அழுக்கானது படியலாம். இது கையிலும் படியலாம். காலிலும் படியலாம். இதனால் சுத்தமான ரத்த நாளங்கள் அடைபடுகின்றன. ரத்தம் போவது தடைபடுகிறது. குறிப்பாக, காலுக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது. ரத்தம் போகாவிட்டால், என்ன நேரிடும்?

அங்குள்ள திசுக்கள் அழியும். இதனால் காலை எடுக்க வேண்டிவரும். இதற்கு முக்கியமான காரணம் புகைபிடித்தல். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது வரலாம். அதிக கொழுப்பு உள்ளவர்கள், அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்களிடம் இது காணப்படும். சிலருக்கு வலி, மரத்துப் போதல், குத்துதல், கால் ஆடுசதையில் வலி போன்றவை காணப்படும். காலில் நாடிப் பார்க்க வேண்டும். அப்பொழுது காலில் புண்கள் வரும். குறிப்பாக விரல்கள், பாதங்கள் இவற்றில் புண் வந்தால் ஆறாது, நாள்பட்டு ஆறும். காலினுடைய நிறம் சற்று நீல நிறத்தில் காணப்படும். ஒரு காலின் சூடு, அடுத்த காலின் சூட்டிலிருந்து மாறுபடும். நகங்களில் மாறுபாடு காணப்படும். ஆண்மைக் குறைவு ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரலாம்.

கட்டுப்படுத்த வழி

இவர்கள் உடற்பயிற்சி, உணவு முறை, கொழுப்பை குறைக்கிற மருந்துகள், ரத்த அழுத்தத்தை குறைக்கிற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை செய்யும்போது ஆடுசதையில் வலி வரும். ஓய்வு எடுத்தால் குறைந்துவிடும். ரத்தம் போகாததுதான் இதற்குக் காரணம். இதற்கு நவீன அறுவைசிகிச்சைகள் உள்ளன. இவர்கள் பொதுவாகவே நடந்தால் வலி ஏற்படுகிறது என்பார்கள். `5 நிமிஷம் ஓய்வெடுத்த பின் வலி குறைந்து விட்டது’ என்று சொல்வார்கள்.

இவர்களுக்கு Doppler test என்று சொல்லக்கூடிய காலில் ரத்தம் எவ்வாறு ஒடுகிறது என்று பார்க்கும் சோதனையை செய்ய வேண்டும். Angiographic பரிசோதனை செய்து பார்ப்பவர்களும் உண்டு. MRA பரிசோதனை செய்து பார்ப்பவர்களும் உண்டு. புகையிலையை அறவே ஒழிக்க வேண்டும். ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீரிழிவு நோய், கொழுப்பு, ரத்த அழுத்த நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஆயுர்வேத அணுகுமுறை

காலில் ரத்த ஓட்ட அடைப்புக்கு சிகிச்சையாக வெண்தாமரை இதழ், மருதம்பட்டை இதழ், சீந்தில், பூண்டு ஆகியவற்றைச் சூரணமாக்கி சாப்பிட்டால், அந்த அடைப்பு வெளியேறும். கொத்தமல்லி கஷாயம் வைத்துக் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். மகா மஞ்ஞிஷ்டாதி கஷாயம் அல்லது மஞ்சட்டி, மரமஞ்சள், வேப்பம் பட்டை, சீந்தில் கஷாயம் வைத்துக் கொடுத்தாலும் அடைப்புகள் மாறும். திரிபலா சூரணம் 10 கிராம்வரை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரலாம். ஏலாதி, மகா ஏலாதி போன்றவையும் இதற்குச் சிறந்தவை. நவீன மருத்துவத்தில் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைக் கொடுப்பார்கள்.

கைமருந்துகள்

>> ‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேகவைத்துப் பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு அடைப்பு குறையும்.

>> பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், கெட்ட கொழுப்பு அடைப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்குச் சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தைக் குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளைக் கூட்டு வைத்துச் சாப்பிடலாம்.

>> ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய்விட்டுப் பிசைந்து சாப்பிட்டுவந்தால் கொழுப்பு அடைப்பு குறையும்.

>> கொள்ளை வேகவைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்துத் தாளித்து ரசமாகக் குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

>> கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

>> வாழைத்தண்டு சாற்றில் கருமிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்துப் பொடிக்கவும். உணவில் மிளகுக்குப் பதிலாக இந்தப் பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

>> நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கொடம்புளி என்னும் புளியை வழக்கமாகப் பயன்படுத்தும் புளிக்கு பதிலாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

இந்தியா

23 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்