மனதுக்கு இல்லை வயது | ஏப்ரல் 23, 2014

By மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

ஜெராக்ஸ் கடைக்கு ஒரு பெரியவர் சென்றார். கடைக்காரரிடம் சென்று ‘‘தம்பி! ஜெராக்ஸோ கிராக்ஸோ சொல்றாங்களே அது ஒண்ணு எடுக்கணும்’’ என்றார். ‘‘தாராளமா எடுக்கலாம் பெரியவரே! குடுங்க!’’ என்றார் கடைக்காரர். உடனே பெரியவர், ‘‘இந்த மிஷின்ல தமிழ்லயும் ஜெராக்ஸ் எடுக்க முடியுமா? இல்லை, இங்கிலீஷ் மட்டும்தானா?’’ என்றார்.

இன்னொருவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, ‘‘சென்னையில் இருந்து திருநெல்வேலி வந்திருக்கிறேன்’’ என்றேன். அதற்கு அவர், ‘‘உங்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்ப வேண்டும். அதைச் சென்னை முகவரிக்கு அனுப்பவா? அல்லது நெல்லை முகவரிக்கா?’’ என்று அப்பாவியாகக் கேட்டார். இதுபோல, தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வதிலும் பயன்படுத்துவதிலும் வயதானவர்களுக்கு பல சிரமங்கள் இருக்கின்றன.

இன்று தகவல் தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சியில் இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் வயதானவர்கள் பலரும் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆர்வமின்றியும் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களைக் கண்டு பயத்துடனும் இருக்கின்றனர். தொழில்நுட்ப அச்சம் (Technophobia) என்று அழைக்கப்படும் இந்தப் பயம் வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இவர்கள் ‘என்ன இருந்தாலும் அந்த காலம்போல் வருமா?’ ‘இதெல்லாம் என்ன வளர்ச்சி?’ என்றெல்லாம் கூறி புதுத் தொழில்நுட்பங்களை எதிர்ப்பார்கள்.

இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு முதல் காரணம் ஆர்வமின்மை. ‘இதையெல்லாம் இனிமேல் எதற்காக நாம் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்ற மனப்பான்மையே இதற்குக் காரணம். ஐந்து வயதுப் பொடியன் ஐ-பேடில் புகுந்து விளையாடுவதற்குக் காரணம் குழந்தைகளிடம் இருக்கும் ஆர்வம்தான். வயதானாலும் அந்தக் குழந்தைத்தனத்தை தொலைக்காமல் இருப்பவர்களே புது விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இரண்டாவது காரணம் இந்தத் தொழில்நுட்பங்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றன. வயதானால் மூளை கொஞ்சம் மெதுவாகத்தான் புரிந்து கொடுக்கும். ஆனால் பையனோ, பேரனோ நல்ல மூடில் இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் பழகிவிடலாம். ‘இது கூடத் தெரியாதா?’ என்று கேலி செய்து விடுவார்களோ என்று எண்ண வேண்டாம். எல்லோரும் இந்தக் கட்டத்தைக் கடந்துதான் வந்திருப்பார்கள்.

அதேபோல, இவற்றைத் தவறாக உபயோகித்து ஏதேனும் சேதப்படுத்தி விடுவோமோ, தகவல்களை அழித்துவிடுவோமோ என்றெல்லாம் பயந்து பயன்படுத்தாமல் விட்டு விடுவார்கள். நீங்களாக ஐ-பேடை மாடியிலிருந்து தூக்கி எறியாதவரை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவையெல்லாம் மிகையான பயங்களே.

ஆனால் எல்லோரும் இப்படி இருப்பதில்லை. சிட்னியில் இருக்கும் பேத்திக்குச் சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து ‘வத்தக் குழம்பு செய்வது எப்படி?’ என்று ஸ்கைப் மூலம் நேரடியாகப் பாடம் எடுக்கும் பாட்டிகளும், வெப் கேமரா மூலம் பேத்திகளுக்குக் கதை சொல்லும் தாத்தாக்களும் இருக்கின்றனர். அவர்களே காலத்தை வென்றவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

10 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

21 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

28 mins ago

சுற்றுச்சூழல்

56 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்