மரபு மருத்துவம்: மருந்தாகும் நாட்டுக் கோழி... நோய் தரும் பிராய்லர் கோழி

கிராமத்து வீடுகளிலும் வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சிறுதானியங்களைக் கொறித்துத் தின்றுவிட்டு, உற்சாகமாக அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தன நாட்டுக் கோழிகள். ஆனால், பிறந்து சில நாட்களிலேயே பல்வேறு செயற்கை மருந்துகளால் செறிவூட்டப்பட்டு, அளவுக்கு அதிகமாகத் தீவனத்தைச் சாப்பிட்டுவிட்டு, எங்கும் நகர வழியின்றி, பல்வேறு நோய்களைத் தனக்குள் வைத்துக்கொண்டு வாழ்கிறது பிராய்லர் கோழி.

மரபைத் தொலைத்த பிராய்லர்

ஹார்மோன் மருந்துகளால் எலும்பு சார்ந்த நோய்கள், வாழ்விடத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளால் கண் நோய்கள், அதிக உணவால் உடல் பருமன் என நோய்களின் கூடாரமாக உள்ளன பிராய்லர் கோழிகள். மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்திரிக்காய் எப்படி நம் உடலுக்கு எதிரானதோ, அதேபோலத்தான் மரபைத் தொலைத்த பிராய்லர் கோழிகளும்.

நோய்கள் தயார்

பதினொரு வயதுச் சிறுமி, இப்போது வளர்ந்த பெண்ணைப்போலத் தோற்றம் தருவதற்குப் பிராய்லர் கோழியும் ஒரு காரணம்தான். குறைந்த வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கு வெள்ளைக் கோழியில் உள்ள ஹார்மோன் கலப்படங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.

பிராய்லர் கோழிகள் விரைவாக வளர்வதற்காகக் கொடுக்கப்படும் வேதிப்பொருட்கள், மறதி, நரம்பு சார்ந்த நோய்கள் முதல் புற்றுநோய்வரை உண்டாக்கக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித உடலின் இயக்கங்களைப் புரட்டிப்போடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவருகின்றன பிராய்லர் கோழி ரகங்கள்.

அளவை மிஞ்சும் ஆன்டிபயாடிக்

எல்லாச் சூழ்நிலைகளிலும், நோய்களை எதிர்த்து உயிர் வாழ்வதற்காகவும், உடல் எடையை அதிகரிக்கவும் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் `ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் விளைவால், ரெசிஸ்டண்ட் பாக்டீரியாக்கள் (அந்த மருந்துகளை எளிதில் சமாளிக்கும் பாக்டீரியாக்கள்) அதிகரித்து, கோழிகளிடையே அந்த நோய்களின் வீரியம் பல மடங்கு பெருகுகிறது. இந்த நோய்களின் தாக்கம், அதைச் சாப்பிடும் மனிதர்களிடம் சங்கிலித் தொடர்போல நீள்கிறது.

மருந்தாகும் நாட்டுக் கோழி

உறவினர்களை விருந்தோம்பும் நோக்கத்துடன், வீட்டின் முன் அலைந்து கொண்டிருக்கும் கொண்டைச் சேவல்களைப் பிடித்து, விருந்தளித்து, கூடவே ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுப்பிய மரபு நம்முடையது. சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம். நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம்.

தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன. காமத்தைத் தூண்டும் உணவுப் பட்டியலில் நாட்டுக் கோழிக்கு நிச்சயம் இடமுண்டு. சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து. நாட்டுக் கோழியின் முழுப் பயன்களைப் பெற, கடைகளில் கிடைக்கும் உடனடி மசாலாப் பொடிகளைத் தவிர்த்து, அம்மியில் கைப்பக்குவத்தில் அரைக்கப்பட்ட மசாலா கலவையைப் பயன்படுத்துவது நல்லது.

வெப்பம் தரும்

கோழிக்கறி சாப்பிட்டால், சித்த ஆயுர்வேத முறைகள் குறிப்பிடும் வாத, பித்த, கப நாடி வகைகளில், பித்த நாடி மேலோங்கி இருக்கும் என்று நாடி விஞ்ஞானம் சொல்கிறது. உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் குணம் கோழிக்கறிக்கு உண்டு. பருவகாலச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் கோழி இறைச்சியைச் சாப்பிட வேண்டும். வெப்பம் மிகுந்த கோடைக் காலத்தில், வெப்பத்தின் பிரதிநிதியான கோழிக் கறியை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, அஜீரணத் தொந்தரவுகள் வரக்கூடும்.

தெரியாத கருங்கோழி

வெள்ளை வெளேரென பிராய்லர் கோழி ரகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இன்றைய இளம் தலைமுறைக்குக் கருங்கோழி என்ற ஒன்று நம்மிடையே வாழ்வது ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாத நோய் முதலியவை கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.

முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் மருத்துவக் குணத்திலும் மேலோங்கி நிற்பது கருங்கோழியின் தனிச்சிறப்பு. கருங்கோழி, ‘கடக்நாத்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஓமம், பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு.

எங்கும் எதிலும் பிராய்லர்

ஐந்து நட்சத்திர உணவகங்கள் முதல் சந்துகள் தோறும் நட்சத்திரங்கள்போலச் சிதறிக் கிடக்கும் தள்ளுவண்டிக் கடைகள்வரை, நோயை உண்டாக்கச் சாத்தியமுள்ள பிராய்லர் கோழிகள் செயற்கை மணம் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் அழைப்புவிடுப்பது சாதாரணமாகிவிட்டது. சிக்கன் 65, சிக்கன் டிக்கா, லாலி-பாப் சிக்கன், கிரில் சிக்கன், சபர்மா என நோய் உண்டாக்கும் பிராய்லர் கோழிகளைக் கொண்டு செய்யப்படும் உணவு வகைகளுக்கு மயங்காமல், நாட்டுக் கோழி ரகங்களுக்கு முன்னுரிமை அளிப்பது சிறந்தது.

சில இடங்களில், பல நாட்களாகக் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி (Frozen chicken) மூலம் தயாரிக்கப்படும் உணவு, பல உடல் உபாதைகளை உண்டாக்கும் சாத்தியம் உள்ளது. சுவைக்காகவும் அலங்காரத்துக்காகவும் இறைச்சி உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளும் வேதிப்பொருட்களும் நம் உடலுக்குள் களேபரத்தை உண்டாக்கி, நிச்சயம் ஆரோக்கியத்தைச் சீரழிக்கும். அதிலும் இன்றைய உணவு வணிகம், இளைஞர்களைத் தினமும் அசைவ உணவைச் சாப்பிட வைத்து வருவாயைப் பெருக்க மறைமுக அரசியல் செய்துவருவதால் கவனம் அத்தியாவசியம்.

மரபின் சின்னம் கோழிகள்

“கறுப்புறு மனமும் கண்ணிற் சிவப்புறு சூட்டும் காட்டி” - எனச் சேவல் சண்டைகளின் நயத்தை விளக்குகிறார் கம்பர். சோழ நாட்டின் தலைநகரமே கோழியின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. வீரம் மற்றும் ஆரோக்கியத்தின் சின்னமாக விளங்கிய கோழியினங்கள், இப்போது உடல் குறையோடு முழுக்க முழுக்க வியாபாரத்துக்காக வளர்க்கப்படுகின்றன. கோழி உணவுப் பிரியர்கள் பிராய்லர் கோழிகளைத் தவிர்த்து, காலம் மற்றும் உடல்நிலை சார்ந்து நாட்டுக் கோழி இனங்களை உட்கொள்வது நல்வாழ்வுக்குப் பெரிதும் உதவும்.

ஐந்து நட்சத்திர உணவகங்கள் முதல் சந்துகள் தோறும் நட்சத்திரங்கள்போலச் சிதறிக் கிடக்கும் தள்ளுவண்டிக் கடைகள்வரை, நோயை உண்டாக்கச் சாத்தியமுள்ள பிராய்லர் கோழிகள் செயற்கை மணம் மூலமாகவும் விளம்பரங்கள் மூலமாகவும் அழைப்புவிடுப்பது சாதாரணமாகிவிட்டது.

- டாக்டர்.வி.விக்ரம்குமார்,கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: > drvikramkumar86@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்