இறப்பு இயற்கையின் நியதி மட்டுமல்ல; அது ஒரு புதிரும்கூட . இறப்பைத் தவிர்க்க இயலாது. ஆனால், நமது இறப்பை நாம் விரும்பும்படி அமைத்துக்கொள்ள முடியும். அதற்கான சில எளிய வழிமுறைகள்:
நம் காலத்துக்குப் பிறகு நாம் சேர்த்து வைத்தவற்றை நமது வாரிசுகளுக்கும் உற்றார் உறவினருக்கும் பிரித்துக் கொடுப்பதே ‘விருப்ப உயில்’. இந்த உயிலை நமது விருப்பத்துக்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றிக்கொள்ளலாம்.
இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, நாம் நியமிக்கும் நபர் நம்மைவிடக் குறைந்த வயதுடையவராக இருக்க வேண்டும். இந்த உயிலை, நல்ல ஆரோக்யத்துடன் இருக்கும்போதே சிறந்த வழக்கறிஞர் மூலமாக எழுதி அதைப் பதிவுசெய்வது அவசியம்.
நற்பண்பாளரை நியமித்தல்
உயிலைச் செயல்படுத்த ஒரு நபரை நியமித்தல் அவசியம். ஆனால், நியமிக்கப்பட்டவர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும். மரணப்படுக்கையில் இருக்கும்போதே நமது உயிலை நெருக்கமானவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.
பயணத்தின் திட்டமிடல்
நம் கடைசிப் பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறோமோ, அதை முறையாக எழுதி வைக்கலாம். இதன் மூலம், நாம் விரும்பிய இடத்தில், நமது கலாச்சாரம், பண்பாடு, மதம் சார்ந்த முறைப்படி இறுதியாகப் பயணம் செல்லலாம்.
இறுதி ஊர்வலம், இறந்தவுடன் தெரியப்படுத்த வேண்டிய முக்கியமானவர்கள், நம்முடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட வேண்டிய சில விருப்பப் பொருட்கள், அடுத்து வரக்கூடிய காரியங்களுக்குக் கூப்பிட வேண்டியவர்கள், இவை அனைத்தையும் பட்டியலிட்டு நெருக்கமானவர்களிடம் ஒப்படைத்து அதனுடன் அதற்கு ஆகக்கூடிய செலவுக்கான தொகையை ஒப்படைக்கலாம். இது இறக்கும் தறுவாயில் மிகுந்த நிம்மதியை நமக்குத் தரும்.
மன்னிப்பும் நன்றியும்
வாழ்க்கையைப் பின்னோக்கிப் புரட்டிப் பார்த்தால் நாம் செய்த சில தவறுகளும், பிறரைக் காயப்படுத்திய தருணங்களும் நம் நினைவுகளில் வந்து செல்லும். நாம் இருக்கும்போதே நம்மால் காயம் அடைந்தவர்களை அழைத்து அவர்களிடம் மன்னிப்பு கோரலாம்.
இல்லாவிட்டால் ஒரு கடிதம் மூலம் நாம் சொல்ல நினைப்பதை எழுதி, நாம் இறந்தபின் அவர்களை அது சென்றடையுமாறு செய்யலாம். இதேபோல் நமக்கு அறிமுகமில்லாத சிலர் மூலம் உதவி பெற்றிருக்கலாம், சிலர் அதில் நண்பர் கூட ஆகியிருக்கலாம். அவர்களையும் நினைவுகூர்வது அவசியம்.
கடவுச் சொற்களைப் பகிர்தல்
முகநூல் பக்கம், வங்கிச் செயலி, மின்னஞ்சல் போன்றவற்றின் பயன்பாட்டுக்கு ‘கடவுச் சொல்’ முக்கியம். இவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க ‘ஆப்பிள் கீ’ போன்ற கணக்குகள் இருக்கின்றன.
அதைச் செயல்படுத்தி வேண்டியவரிடம் தெரிவித்தால், நமது வங்கிக் கணக்குகள், செயலிகள் போன்றவற்றை நாம் இறந்த பின் நம் சந்ததியினர் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். மேலும், நாம் பெற்ற கடன், கொடுத்த கடன் பற்றிய விவரமான தொகுப்பைப் பலர் அறியுமாறு செய்வது நம் வாழ்க்கைக்குப் பின் நம் பெயரை வாழச்செய்யும்.
நினைவுகளைச் சேமித்தல்
நம் வாழ்வில் நமக்குக் கிடைத்த பரிசுகள், பட்டங்கள், கல்யாணப் பத்திரிகை, முதலில் வாங்கிய சம்பள கவர், பிடித்த ஒளிப்படம் போன்றவற்றை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றினால், நமது கடைசிக் காலத்தில், நாமோ நமது குடும்பத்தினரோ பார்க்கும்போது நம் வாழ்க்கையின் பசுமையான நினைவுகள் தெள்ளிய நீரோடை போல் கண்முன் காட்சி தரும்.
-மு. ராமசாமி
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
விளையாட்டு
44 mins ago
வணிகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago