ஞாயிற்றுக்கிழமை கவினும், ரஞ்சனியும் விளையாடச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். சுட்டெரிக்கும் வெயில்தான் காரணம். திடீரென மின்சாரமும் போய்விட்டது. மின்விசிறி இயIங்காததால் புழுக்கம் அதிகமாகி நிலா டீச்சர் வீட்டில் அனைவருமே தவித்தனர்.
"ஒரே வியர்வையா இருக்கும்மா" என்று கத்தினான் கவின்.
அப்பா எங்கெங்கோ தேடி ஆளுக்கொரு பனை ஓலை விசிறியைக் கொண்டுவந்து கொடுத்தார். விசிறிக் காற்று இதமாக இருந்தது.
"அப்பா! நமக்கு ஏன் இப்படி வியர்க்குது?" என்று கேள்வி கேட்டான் கவின்.
"நல்ல கேள்விதான். ஆனா, வழக்கம்போல உங்கம்மாதான் பதில் சொல்லணும்" என்றார் அப்பா.
பனை ஓலை விசிறியை விசிறியடியே, "மனித உடலென்னும் மாபெரும் இயற்கை தொழிற்சாலைதான் இதற்கெல்லாம் காரணம்" எனச் சொல்லிச் சிரித்தார் நிலா டீச்சர்.
"புரியற மாதிரி சொல்லுங்கம்மா" என்றாள் ரஞ்சனி.
"சரி… சரி… சொல்றேன். நாமெல்லாம் வெப்ப ரத்தப் பிராணிகள். வெளியிலே என்ன வெப்ப நிலை இருந்தாலும் உடம்புக்குள்ளே எப்போதும் ஒரே மாதிரி வெப்ப நிலையைப் பராமரிக்கிற தகவமைப்பு, வெப்பரத்த பிராணிகளிடம் உள்ளது.
நம்ம உடம்போட சராசரி வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். நாம இருக்கிற இடத்தோட வெளிப்புற வெப்ப நிலை எப்படி இருந்தாலும், உடம்புக்கு உள்ளே எப்போதும் இதே வெப்ப நிலையைப் பராமரிப்பதற்கான ஏற்பாடு உடம்புலேயே இருக்கு.
நாம் இருக்கும் இடத்தோட வெப்ப நிலை அதிகரிக்கும்போது, நம் உடம்போட வெப்ப நிலையும் அதிகரிக்கத் தொடங்கும். உடனே வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிடும். வியர்வை நீர் தோல் பகுதிக்கு வந்து ஆவியாக மாறும்.
அப்படி வியர்வை நீராவியாக மாறணும்னா, அதுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை நம்ம உடம்புலேர்ந்தே எடுத்துக்கும். அப்போ உடம்போட வெப்ப நிலை குறைஞ்சு, சராசரி வெப்ப நிலைக்கு வந்துடும். அதனால உடம்போட வெப்ப நிலைய சீராக வச்சுக்க வியர்ப்பது ரொம்பரொம்ப அவசியம்.
அதேபோல நாம சாப்பிடற சாப்பாட்டுல உள்ள சத்து எரிக்கப்படுறதால கிடைக்கும் ஆற்றல்லதான், நம்ம உடம்புல எல்லாப் பகுதியும் செயல்படுது. நாம ஓடும்போது, உடற்பயிற்சி செய்யும்போது, கடுமையான வேலைகளைச் செய்யும்போது உடம்புல உள்ள பல உறுப்புகள் வழக்கத்தைவிட வேகமாக வேலை செய்யுது. அப்படி வேகமா வேலை செய்ய, கூடுதலான ஆற்றல் தேவை.
அந்த நேரத்துல நம்ம உடம்புல சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்துகள், வேகமாக எரிக்கப்பட்டு ஆற்றலா மாற்றப்படுது. இந்தச் செயல்பாடுகள் காரணமாக, உடலின் உள் வெப்ப நிலை அதிகரிக்குது. உடனே உடம்போட வெப்ப நிலைய சீர் செய்றதுக்காக வியர்வைச் சுரப்பிகள் வியர்வையச் சுரக்கும். வியர்வை காற்றில் ஆவியாக மாறி உடம்போட வெப்ப நிலைய சீராகப் பராமரிக்குது" என்றார் நிலா டீச்சர்.
"அம்மா! அதிகமா வியர்க்கும்போது உடம்புல நீர்ச்சத்து குறையுமா?" என்று கேட்டான் கவின்.
"ஆமாம். அது போன்ற நேரங்கள்ல நிறைய தண்ணி குடிக்கணும். நம் உடம்புல உள்ள கழிவுப் பொருள்கள் சிறுநீரகம்
மூலம் வெளியேற்றப்படுறது போலவே, வியர்வை மூலமாகவும் வெளியேற்றப்படுது. வெயில் காலங்கள்ல அதிகமா வியர்க்கறதால வியர்வை மூலமா நிறைய கழிவு வெளியேற்றப்படுது. குளிர்காலத்துல வியர்வை இல்லாததால, பெருமளவு கழிவு சிறுநீரகத்தால மட்டுமே வெளியேறுது. அதனாலதான் மழைக்காலத்துலேயும், ஏ.சி. ரூம்ல இருக்கும்போதும் நாம அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கு" என்றார் நிலா டீச்சர்.
"அதுசரி, அதிகமா குளிரும்போது நம் பல்லெல்லாம் கடகடன்னு அடிச்சுக்குதே. அது ஏம்மா?" என்றாள் ரஞ்சனி.
"குளிர்காலத்துல அல்லது அதிகக் குளிர் உள்ள இடத்துல இருக்கும்போது சுற்றுப்புற வெப்ப நிலை குறைஞ்சு, நம்ம உடம்போட வெப்ப நிலையும் குறையும். அப்போ நம்ம உடம்புக்குக் கூடுதலா வெப்பம் தேவைப்படுது.
அந்த நேரத்துல நம்ம உடம்பில் உள்ள தசைகள் சுருங்கி விரியும். அதன் மூலமா நம்ம உடம்புக்குத் தேவையான வெப்பம் உற்பத்தி ஆகுது. இதுபோன்ற நேரத்துலதான் உடம்புல
ரோமக் கால்கள் விரைச்சுக்கிட்டு நிற்கும். வெப்ப உற்பத்திக்காகத் தாடைகளின் தசைகளும் சுருங்கி, விரியறதாலே பற்கள் ஒன்றோடு ஒன்று அடிச்சுக்குது" என்றார் நிலா டீச்சர்.
"ஆஹா! உண்மையிலேயே நம்ம உடம்பு ஓர் இயற்கை தொழிற்சாலைதான்" என்றாள் ரஞ்சனி.
"ஆமாம்.. ஆமாம்.. எவ்வளவு அதிசயங்கள் நடக்குது!" என ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான் கவின்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
41 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago