மதுரையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாற்றுக் கல்வியைக் கொண்டுசெல்லும் வகையில் தூண்டில் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் யோகேஷ் கார்த்திக். பொறியியல் பட்டதாரியான இவர் மாணவர்களுக்குப் புத்தக அறிவு மட்டும் இருந்தால் போதாது. உலக அறிவும் வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கிவருகிறார். அதன்படி நாகமலை புதுக்கோட்டையில் இயங்கிவரும் பாலர் இல்லத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் மாற்றுக் கல்வி குறித்துப் பயிற்சி வழங்கிவருகிறார்.
இதில் இயற்கை, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல், அரசியல் குறித்துக் கற்றுத் தருகிறார். மேலும் இயற்கை விவசாயப் பயிற்சிகள் குறித்துக் கற்றுத் தரப்படுகிறது. சமணச் சிற்பங்களைக் காணவும், வனப் பகுதிகளுக்கும் மாணவர்கள் நேரடியாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். கற்பதோடு மட்டுமில்லாமல் நேரடியாக உலக நிகழ்வுகளில் தாங்களும் பங்குகொள்ள வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்குள் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.
இன்றைய கல்வி மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது என்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்தபோது யோகேஷ் கார்த்திக் உணர்ந்துள்ளார். எனவே, பாடம் கற்றுத் தருவதில் அவருக்கு இருந்த ஆர்வம் குறைந்துள்ளது. இதனால், அந்தப் பணியிலிருந்து விலகி சொந்த ஊரான மதுரைக்கு வந்துள்ளார். அதன் பின்னர் 2012-ம் ஆண்டில் அவருடைய கல்லூரி நண்பர்களுடன் ஒன்றிணைந்து விதை என்ற அமைப்பைத் தொடங்கிச் செயல்படுத்தி வந்துள்ளார்.
இதன்மூலம் அரசியல், இயற்கை வளம், பண்பாடு போன்ற சமுதாயப் பிரச்சினைகளுக்காகச் சில அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் மத்தியில் மாற்றுக் கல்வியைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகக் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கான தூண்டில் என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதனடிப்படையில், வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பாலர் இல்லத்துக்குச் சென்று மாற்றுக் கல்வியை வழங்கி வருகிறார்கள். இதில் அரசியல், பண்பாடு, கலாச்சாரம், இயற்கை, வரலாறு போன்ற பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைக் கற்றுத் தருகிறார்கள்.
“ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி திறன்கள் உண்டு. நாம் சொல்வதை மட்டும் கேட்குமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்துவதில் அர்த்தமில்லை. ஆகவே, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக அந்த இல்லத்தில் உள்ள 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களை அவ்வப்போது சமணர் சிற்பங்கள், மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறோம்” என்கிறார் யோகேஷ்.
விவசாயம் குறித்துப் பயிற்சி வழங்குகிறார்கள். வனத்துறை உதவியுடன் வனங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கை மற்றும் தாவரங்கள், விலங்குகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறுகிறார்கள். கிராம சபை கூட்டத்துக்குச் சிறுவர்களை அனுப்பி அங்கே நடக்கும் நிகழ்வுகளை நேரில் காண வைக்கிறார்கள்.
இதன் மூலம் தங்களுக்குள் உள்ள திறமைகளை மாணவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த நிகழ்வுகளால் மாணவர்களின் மனதில் உள்ள கூச்சம் தவிர்க்கப்படும். உலக நடப்புகளைப் புரிந்துகொள்ள முடியும். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் மாணவர்கள் தாங்களே சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியும். எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் திறமை அவர்களுக்குள் ஏற்படும். இவற்றையெறெல்லாம் உற்சாகமாகக் கூறும் யோகேஷ், “விடுதியில் சமைப்பதற்காக மாணவர்களே காய்கறிகளை விளைவித்தும் கொடுக்கிறார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
ஓடிடி களம்
23 mins ago
விளையாட்டு
30 mins ago
கல்வி
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago