செல்லப் பிராணியான நாயை வளர்க்கும்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால், வெளியூர் செல்லும்போது அதன் நிலைமையை நினைத்தால் கஷ்டமாக இருக்கும். அந்த வகையில் நாய்களுக்காகத் தற்போது சென்னையில் புதிதாகத் தொடங்கியிருக்கும் இடம்தான் ‘HOTEL FOR DOGS’.
நாம் வெளியூருக்குச் சொல்லும்போது,இவர்களுக்கு போன் செய்து நாய்களை ஒப்படைத்துவிட்டால் போதும். நம் வீட்டில் எப்படிப் பார்த்துக் கொள்வோமோ அதைவிட ஒரு படி மேல் பார்த்துக் கொள்கிறார்கள். இதனை நடத்தி வருபவர் ஷ்ரவன் கிருஷ்ணன் என்ற 24 வயது இளைஞர்.
லயோலா கல்லூரியில் பி.காம் படித்துள்ள இவர், தமிழ்நாடு கிரிக்கெட் அணி FIRST DIVISION பிரிவில் விளையாடி வருகிறார். வீட்டுக்குள் பாம்பு வந்தால் அதைப் பிடிக்கிறார். அதற்கு முறையான சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறார்.
திருவான்மியூருக்கு அருகே இருக்கும் இவருடைய ‘HOTEL FOR DOGS’ இல்லத்துக்குச் சென்றோம். அங்கு இருக்கும் நாய்கள் நம்மை வரவேற்றன. நாய்களுக்கு என்று பிரத்யேகமாக நீச்சல் குளம், மருத்துவமனை என அனைத்து வசதிகளும் உள்ளே இருக்கின்றன.
மூன்று வருடங்களுக்கு முன்னர் தான் வளர்த்த நாயை ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டு ஊருக்குச் சென்றுள்ளார் ஷ்ரவன். திரும்பிவந்து நாயை அழைத்துக்கொண்டபோது அதன் உடல் முழுவதும் உன்னி பாதிப்பு இருந்துள்ளது. உடம்பும் சரியில்லாமல் போய்விட்டிருக்கிறது.
காப்பகத்தில் நாயை அவர்கள் சரிவரக் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளார். அப்போதுதான், நாமே ஏன் ஒரு நல்ல காப்பகம் ஆரம்பிக்கக் கூடாது என்று அவருக்குத் தோன்றியுள்ளது. அதன் விளைவால் இந்த நாய்க் காப்பகத்தை ஏற்படுத்தியதாக இவர் சொல்கிறார்.
சென்னை வாழ்க்கையில் மனிதர்களைப் பார்த்துக்கொள்வதே கடினம். இதில் நாய்களைப் பார்த்துக்கொள்வது எப்படி? ஆனாலும் நாய்களை வளர்ப்பவர்கள் அவற்றை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ளும் ஒரு இடத்தைத் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். ஊருக்குக்கூடச் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் முதலில் தனது வீட்டில் மூன்று பணியாட்களைப் போட்டுச் சிறிதாகக் காப்பகத்தைத் தொடங்கியுள்ளார்.
நாய்கள் விளையாடவும், சுற்றித் திரியவும் தேவைப்படும் என்று பெரிய இடமாக அக்கரையில் உள்ள தன் நண்பரின் இடத்தைத் தேர்வு செய்துள்ளார். மொத்தம் எட்டு கிரவுண்ட் நிலம் கொண்ட இந்தக் காப்பகத்தின் உள்ளேயே நீச்சல் குளம், மருத்துவ வசதி, மருந்துக் கடை, நாய்களுக்கு என்று ஸ்பா, சிசிடிவி கேமரா, ஏசி ரூம் வசதி என அனைத்துமே இருக்கின்றன.
ஊருக்குப் போகிறீர்களா? நாய்களைப் பாதுகாக்க வேண்டும் என நினைத்தால் இந்தக் காப்பகத்துக்கு போன் பண்ணினால் அவர்களே உங்களது வீட்டுக்கு வந்து நாயை அழைத்துக்கொள்கிறார்கள். ஊரிலிருந்து திரும்பிய பின்னர் போன் செய்தால், நாயைக் கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். ஊரில் இருக்கும்போதும், அவர்களது SKYPE ID-ஐத் தொடர்பு கொண்டு நாய் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ளலாம்.
இதே மாதிரியான இடங்கள் அமெரிக்காவில் எல்லாம் இருக்கின்றன. அதைப் பார்த்துத் தான் சென்னையில் தொடங்கினோம் என்று சொல்லும் ஷ்ரவன், மார்ச் 2014-ல் ஆரம்பித்த காப்பகத்தில் தற்போதுவரை சுமார் 1,700 நாய்கள் வந்திருக்கின்றன என்கிறார். “Animal Planet, National Geographic சேனல்கள் பார்த்து வளர்ந்ததால் எப்போதுமே எனக்குச் செல்லப் பிராணிகள் மீது பிரியம் அதிகம்” என்கிறார் அவர்.
HOTEL FOR DOGS என்று பிரத்யேகமாகத் தனியாக ஃபேஸ்புக் பக்கம் ( >http://goo.gl/GjhIFj) இருக்கிறது. அடுத்ததாகச் செல்லப் பிராணிகளுக்கு என்று PET CAFE திறக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதைப் போலவே பெங்களூரு, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் திறக்கவும் எண்ணம் வைத்திருக்கிறார்கள்.
அனைத்தையும் பேசிவிட்டுக் கிளம்பும்போது, “டாமி... சாருக்கு ஷேக்கன் கொடு” என்றவுடன் ஹேண்ட் ஷேக் கொடுத்து வழியனுப்பிவைத்தது டாமி.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 mins ago
தமிழகம்
2 mins ago
விளையாட்டு
21 mins ago
சினிமா
22 mins ago
இந்தியா
59 mins ago
தமிழகம்
56 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
43 mins ago
கருத்துப் பேழை
52 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago