வீட்டுக்குள் சிங்கம் முயல்

By சக்திவேல் மயில்சாமி

அஸ்திவாரக்குழியிலும், கான்கிரீட்டுக்கு அடியிலும் அழுத்திக் கிடக்கும் கம்பிகளையும், மணல், செங்கல் எனப் பார்வையில் இருந்து மறைந்து கிடக்கும் பொருட்களையும் பார்த்துப் பார்த்து வாங்குவோம். அவற்றுக்குக் கட்டடத்தை வலுவாகத் தாங்கி நிற்கும் ஆற்றல் இருக்கும். ஆனால் அவை பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தாது. புறச்சுவர்களை அழகாக்கும் பெயிண்டுகள், பார்வைக்குப் பளிச்செனத் தெரியும் வாஷ்பேசின்கள், திரைச் சீலைகள் உள்ளிட்ட இண்டீரியர் பொருட்கள்தான் காண்பவர்களின் கவனத்தைத் திருப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

500 சதுர அடி வீட்டைக்கூட மனம் மயக்கும் மாளிகையாக்கும் சக்தி இண்டீரியர் பொருட்களுக்கு உண்டு. பார்வையில்படும் ஒவ்வொரு பொருளும் காண்போரின் கவனத்தைக் கவர வேண்டும்; கலையழகோடு காட்சியளிக்க வேண்டும் என்று மெனக்கெடுவது மனிதர்களின் பொது இயல்பு. தேவையின் அடிப்படையில் இல்லம் என்பது போய் அழகியலின் வெளிப்பாடு என்று உருவானதன் காரணமும் இதுவே.

ஒவ்வொரு பொருளாகத் தேடித் தேடிக் கட்டடங்களை அழகாக்கிய மனிதனுக்குள், ஒவ்வொரு நாளும் புதிய புதிய சிந்தனைகளும், தேவைகளும் உருவாகியதன் விளைவாக இல்லங்கள் இன்னும் அழகாயின என்று சொல்லலாம். தற்போது நமது இல்லங்களை அழகுபடுத்துவதில் வீட்டுச் சுவர்களுக்குக் கணிசமான பங்குண்டு.

பெயிண்டுகளால் சுவரை அலங்கரிக்கும்போது, வித விதமான வண்ணங்கள், வண்ணக் கலவைகள் எனப் பயன்படுத்திய நாம், அறைக்கு ஒரு கருத்து என்கிற அடிப்படையில் சுவரை அழகுபடுத்துவதில் அடுத்த கட்டத்திற்குச் சென்றோம். என்னதான் பெயிண்டுகள் அழகாக இருந்தாலும், அதன் வேதித் தன்மையால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை, சுவாசக் கோளாறு, தோல் அலர்ஜி உள்ளிட்ட சில அசௌகரியங்களும் இருந்ததை மறுப்பதற்கில்லை.

இப்படிப் பெயிண்டுகளால் பாதிக்கப்படுவோரின் கவனம், தற்போது இவற்றுக்கு மாற்றான வால்பேப்பர்களின் மீது திரும்பியுள்ளது. இப்படிப்பட்டவர்களுக்காகவே சந்தையில் வால்பேனலிங், வுட்டன் வால்ஸ் என ஏகப்பட்ட பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மக்களின் ரசனைக்கேற்ப இயற்கைக் காட்சிகள், கணித வடிவ டிசைன்கள், டைல் டிசைன்கள், குழந்தைகளுக்கு ஏற்ற கார்ட்டூன் சித்திரங்கள், உறுமும் புலி, கர்ஜிக்கும் சிங்கம், துள்ளி விளையாடும் முயல்கள், டாம் அண்டு ஜெர்ரி, மிக்கி மௌஸ் என 3டி வால்பேப்பர்களும் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன. 3டி வடிவ விலங்குகளின் படங்கள் கொண்ட வால்பேப்பர்கள், அடர்ந்த வனங்களுக்குள் வசிப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. விரைவில் சுவரில் ஒட்டும் திறன் கொண்ட இந்த வால்பேப்பர்கள், 5 ஆண்டுகள் வரை புத்தம் புதிதாகவே காட்சியளிக்கக் கூடியவை. முறையாகப் பராமரித்தால் ஐந்து ஆண்டுகளுக்கு வால்பேப்பரை மாற்ற வேண்டியதில்லை. அழுக்கு, கறை என எது பட்டாலும் தண்ணீரால் துடைத்தாலே போதும். சுவர் பளீரென மாறும்.

வால்பேப்பர்கள் கிழிந்துவிட்டால் மீண்டும் ‘பேட்ச் ஒர்க்' செய்வதும் மிக எளிதானது. பழைய வால்பேப்பரை அவை இருந்த இடம் தெரியாமல் பிரித்தெடுப்பதற்கு, நவீன ரசாயனப் பொருட்கள் கிடைக்கின்றன. வால்பேப்பர்களை ஏதாவதொரு காரணத்தால் சுவரிலிருந்து பிரித்தெடுக்க வேண்டுமெனில் அதற்கான ரசாயனத்தைக் கொண்டு எளிதாகப் பிரிக்கலாம். இவை கிழிந்துவிட்டால் அந்த இடத்தை மீண்டும் ‘பேட்ச் ஒர்க்' செய்வதும் மிக எளிது.

குறைந்த செலவில் குடிசையையும் கோபுரமாக மாற்றும் திறன் கொண்ட இந்த வால் பேப்பர்களைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் இல்லங்களைக் குழந்தைகளுக்கான கனவு நகரங்களாகவும் மாற்ற முடியும். அவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்களால் உங்கள் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டால் குழந்தைகளின் ஆனந்தம் இன்னும் அதிகரிக்கும்.

இத்தனை சிறப்பம்சங்களும் கொண்ட வால்பேப்பர்களின் விலை குறைவு என்பதால் நடுத்தரக் குடும்பங்களின் பார்வை வால்பேப்பர்களின்பால் தற்போது திரும்பியுள்ளது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

25 mins ago

ஜோதிடம்

28 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்