நீங்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துபவரா? தினமும் ஏதாவது ஒரு நிலைத்தகவலையோ ஒளிப்படங்களையோ பதிவேற்றுபவரா? அப்படியானால், உங்களுடைய நிலைத்தகவல், ஒளிப்படங்களை வைத்தே நீங்கள் எந்த வகையான ஆசாமி, உங்கள் மனதில் என்ன இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிடலாம். இதற்காகவே ‘உலகை மாற்றக்கூடிய யோசனைகள்’ என்ற பெயரில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கருத்தரங்கில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மனநிலையைப் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்கள்.
வெளிப்படைவாதிகள்
பொதுவாக, வெளிப்படையான மனநிலையுடன் இருப்பவர்கள், சமூக நிகழ்வுகள் பற்றியும் தங்களின் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகள் பற்றியும் அதிக அளவில் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்கிறார்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்று நினைப்போர், ஃபேஸ்புக் பதிவுகளில் காதலன் அல்லது காதலி பற்றிய விவரங்கள், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒளிப்படங்களைப் பதிவிட்டு மகிழ்கிறார்கள் என ஆய்வு சொல்கிறது.
சோகவாசிகள்
‘யேன் சோகக் கதையைக் கேளு..’ என்று மனதளவில் வருத்தத்துடன் இருப்பவர்கள், தங்களை யாராவது கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கிறார்கள். இவர்கள் சிறுபிள்ளைத்தனமாகவோ இரக்கம் ஏற்படும் வகையிலோ கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள்.
கோளாறுகள்
ஆளுமைக் கோளாறு இருப்பவர்கள் வேறொரு ரகமாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஃபேஸ்புக் நிலைத்தகவலை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். செல்ஃபி படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிடுபவர்களும் ஆளுமைக் கோளாறு உள்ளவர்கள்தான். செல்ஃபி படங்களை ‘ஆப்ஸ்’ உதவியுடன் அழகாக மாற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடுபவர்கள் மனதளவில் குறை உள்ளவர்களே. இதேபோல ஜிம் பயிற்சிகள் பற்றியோ அண்மையில் வாங்கிய விலை உயர்ந்த செல்போன், வாகனம் பற்றியோ ஃபேஸ்புக்கில் பதிவிட்டுப் பெருமைப் பீற்றிக்கொள்பவர்கள் சுயதம்பட்ட பேர்வழிகளாம். இப்படி ஆய்வில் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.
அபாயக் கட்டம்
சம்பந்தமே இல்லாமல் அதிகாலை 3 மணிக்கு எழுந்து ஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவிடுபவரா? அப்படியானால், மனதளவில் உங்களுக்கு பிரச்சினை இருக்கலாம் என்று உஷார்படுத்துகிறது ஆய்வு. அந்தப் பிரச்சினை அலுவலக வேலைப் பளுவால் வந்த மன அழுத்தமா, காதல் தோல்வியா, குடும்பத்தில் உருவான பிரச்சினையா என்பதை அந்தப் பதிவு மூலமே தெரிந்துகொள்ள முடியும் என்றும் டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
என்ன உபயோகம்?
ஃபேஸ்புக் பயனாளர்கள் பற்றிய ஆய்வுகள் அவர்களுக்கு எந்த மாதிரியான நன்மைகளைத் தரப்போகிறது என்ற கேள்விக்கும் அந்தக் கருத்தரங்கில் பதில் சொல்லப்பட்டது. சில ஃபேஸ்புக் பதிவுகள், அதற்குச் சொந்தமானவர்கள் மனதளவில் காயப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தற்கொலை முடிவைகூட அவர்கள் எடுக்கலாம் என்பதையும் உணர்த்தும் வகையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். அதுபோன்ற பயனாளர்களின் பதிவுகளைத் தொழில்நுட்ப உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கும்போது, அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவரது ஃபேஸ்புக் நண்பர்கள், குடும்ப உறவினர்கள் உஷாராகிவிட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
ஆனால், பல சந்தர்ப்பங்களில் மனதளவில் பாதிக்கப்பட்டவரின் நிலைத்தகவல்களை யாரும் பொருட்படுத்துவதில்லை. எனவே, இந்த நபர்களின் ஃபேஸ்புக் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களின் ஃபேஸ்புக் கணக்குக்குத் தானாக தெரியப்படுத்தும் வசதியும் தேவை என்பதை ஆய்வாளர்கள் யோசனையாக முன்வைத்துள்ளனர்.
இப்போது சொல்லுங்கள், இதில் நீங்கள் எந்த ரகம்?
முக்கிய செய்திகள்
இலக்கியம்
6 hours ago
இலக்கியம்
6 hours ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
13 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
சினிமா
37 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago