முன்னாள் எம்எல்ஏ செந்தில்நாதனுக்கும் (மைம் கோபி), ரியல் எஸ்டேட் அதிபர் வெற்றிவேலுக்கும் தொழில் போட்டி. செந்தில்நாதன் எந்த சொத்தையும் வாங்குவதற்கு முன்பு அங்கு காத்து, கறுப்பு, பேய், பிசாசு இருக்கிறதா என்று மந்திரவாதியை வைத்துப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவார். பாழடைந்து கிடக்கும் பள்ளிக்கூடம் ஒன்று விலைக்கு வருகிறது. அதையும் வாங்க விரும்புகிறார் செந்தில்நாதன். அங்கு பேய் இருப்பதாக அவரை நம்பவைக்க வேண்டும் என்று வெற்றிவேல் திட்டமிடுகிறார். அந்தப் பொறுப்பை 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கிறார்.
பேய் ஓட்டுதல் உள்ளிட்ட பல பித்தலாட்ட வேலைகளுக்குப் பேர் போன அவர்கள் பேய் நாட கத்தை அரங்கேற்ற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் போது எதிர்பாராத நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த நெருக்கடியும் அதன் விளைவுகளும் தான் ‘மோ’ சொல்லும் மீதிக் கதை.
பேய்க் கதைக்கான கதாபாத் திரங்களை நடப்பு விஷயங்களோடு தொடர்புபடுத்தி நம்பகமாக உருவாக்கிய விதத்தில் கவர்ந்து விடுகிறார் அறிமுக இயக்குநர் புவன் ஆர். நுல்லன். ‘‘மக்கள்கிட்ட பயம் இருக்கிறவரைக்கும் நாம பயப்பட வேண்டாம்’’ என்று பித்தலாட்டம் செய்யும் ப்ரியா (ஐஸ்வர்யா ராஜேஷ்) உள்ளிட்ட இளைஞர்களை அறிமுகப்படுத்தும் விதமே ரகளை!
பள்ளிக்கூட பங்களாவில் பேய் வரும் காட்சிகள் நன்கு படமாக்கப் பட்டுள்ளன. செந்தில்நாதனையும் மந்திரவாதியையும் மிரட்டி அனுப்பும் காட்சி கலகலப்பான மிரட்டல். சொதப்பல் திலகமாக நடித்திருக்கும் முனீஸ்காந்த் கலக்கிவிடுகிறார்.
பேய் உலவும் இடங்களைச் சித்தரித்த விதத்தில் இயக்குநர் புவன், ஒளிப்பதிவாளர் விஷ்ணு .கே, கலை இயக்குநர் பாலசுப்ர மணியம் ஆகியோரின் நேர்த்தியான உழைப்பும் கற்பனையும் உண்மை யான திகில் உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகின்றன.
இரைச்சல் இல்லாமல் மிரட்டும் சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையும், ஒலி வடிவமைப்பாளர் ஆனந்த் ஏற்படுத்தும் சிறப்பு ஒலி களும் படத்துக்குப் பெரும் பலம்.
எந்த ஒரு பாத்திரத்தையும் மையப்படுத்தாமல் கதை தன் போக்கில் செல்லும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக் கதை குழப்பமில்லாமல் பயணித் தாலும் படத்தின் நீளம் அயர்ச் சியைத் தருகிறது. காட்சிகள் சுவையாக இருந்தாலும் திருப்பங் கள் ஊகிக்கக்கூடியதாக இருக் கின்றன.
படத்தில் பங்குபெற்றவர்களின் பட்டியலை ஏன் ஆங்கிலத்தில் மட்டும் போடுகிறார்கள் என்பது விளங்கவில்லை.
கதாநாயகன் என்று யாரு மில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பேயோட்டும் ஐவர் குழுவில் அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப் பட்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் நகைச்சுவை இழையோடும் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். செல்வா, மைம் கோபி ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் நிறைவு.
நடிப்பாலும் நகைச்சுவைச் சரவெடிகளாலும் அதிக கைத் தட்டல்களை அள்ளுவது முனீஸ் காந்தும் யோகிபாபுவும். சினிமா ஒப்பனைக் கலைஞராக முனீஸ் காந்த், சினிமா நடிகனாகும் ‘வெறி’ கொண்டவராக யோகி பாபு ஆகிய இருவரும் தொடர்ந்து கொளுத்திப் போடும் நகைச்சுவை வெடிகளில் திரையரங்கம் அதிர்ந்துகொண்டே இருக்கிறது. பேய் பங்களாவில் முனீஸ்காந்த் செய்யும் சேட்டை களும், பேசும் விதமும் படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக் கின்றன. தன்னுடைய உலக சினிமா ‘அறிவை’ யோகி பாபு வெளிப்படுத்தும் விதம் அட்டகாசம்.
பாசாங்கு இல்லாத நகைச்சுவைப் படம். எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்களையும், நீளத்தையும் குறைத்திருந்தால் கச்சிதமான பொழுதுபோக்குப் படமாக இருந்திருக்கும்!
முக்கிய செய்திகள்
வணிகம்
6 mins ago
சினிமா
23 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
26 mins ago
சினிமா
32 mins ago
வணிகம்
14 mins ago
இந்தியா
26 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
சினிமா
27 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago