கான் சர்வதேச திரைப்பட விழா: சூழலியல் பிரச்சனைகளைப் பேசும் இந்திய ஆவணப்படத்துக்குக் கிடைத்த தங்கக் கண் விருது

By முகமது ஹுசைன்

பிரான்ஸின் கான் நகரில் நடைபெற்ற 75-ஆவது சர்வதேச திரைப்பட விழா நேற்று நிறைவடைந்தது. அந்த விழாவின் இறுதி நாளன்று இந்திய இயக்குநர் ஷெளனக் சென் இயக்கிய ‘ஆல் தேட் பிரீத்ஸ்’ ஆவணப்படத்துக்குத் தங்கக் கண் விருது வழங்கப்பட்டது.

இரண்டு சகோதரர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் பருந்துக்கும் இடையிலான ஈரமும் நேசமும் நிறைந்த அன்றாட வாழ்வின் வழியே தில்லியின் கொடூர முகமும், சூழலியல் ஆபத்துகளும் நமக்கு இதில் உணர்த்தப்படுக்கின்றன.

இது ஓர் ஆவணப்படம் என்பதால், இவர்களின் வாழ்வு புனைவு அல்ல. எத்தகைய ஆபத்தான சூழலில் நம்முடைய நிதர்சன வாழ்க்கை இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை இது.

ஷெளனக் சென்

தில்லி-6 படத்தின் நீட்சி

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் தில்லியும் ஒன்று. நாட்டின் தலைநகர் என்கிறபோதும், அங்கே இன்றும் பசுக்கள், எலிகள், குரங்குகள், தவளைகள், பன்றிகள் போன்றவை நிரம்பி வழிகின்றன. அவற்றுக்கு இடையேதான் மக்களின் வாழ்வும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

பெருநகருக்கே உரிய வேலையின்மை, பொருளாதார அழுத்தம், விரக்தி போன்றவை அங்கே வசிக்கும் சாமானியர்கள் நித்தமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகளை மீறியே, பல்வேறு மாநிலத்தை, பல்வேறு மதத்தைச் சேர்ந்த சாமானிய மக்கள் தங்கள் வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் வாழ முயன்று வருகின்றனர். இருப்பினும், அரசியல் ஆதாயத்துக்காக அங்கே விதைக்கப்படும் மதவெறுப்பு அரசியல் அவ்வப்போது வன்முறை கலவரங்களை ஏற்படுத்திவருகின்றன.

2009இல் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில், அபிஷேக் பச்சன் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியான தில்லி-6 திரைப்படத்தில் அந்த நகர மக்களின் வாழ்வும், அங்கே பெருகி வழியும் வெறுப்பும் நமக்குத் தத்ரூபமாக உணர்த்தப்பட்டு இருக்கும். இந்த வகையில், ஷெளனக் சென் இயக்கியிருக்கும் ‘ஆல் தேட் பிரீத்ஸ்’ ஆவணப்பத்தை தில்லி-6 திரைப்படத்தின் நீட்சி எனலாம்.

இதில் தில்லி நகரத்தின் மற்றொரு கொடூர முகமும் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. மக்களின் மனங்களில் விதைக்கப்படும் வெறுப்பு அரசியலின் பாதிப்புடன் சேர்த்து, காற்று மாசுபாட்டால் ஏற்படும் கொடிய பாதிப்பும் காத்திரமாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

கதைக்களம்

மக்கள்நெருக்கடி மிகுந்த தில்லியில் வசிக்கும் நதீம், சவூத் எனும் இரண்டு இஸ்லாமியச் சகோதரர்கள் ஒரு கரும்பருந்தை நேசிக்கிறார்கள். அதன் காரணமாக அவர்கள் பருந்து சகோதரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கரும்பருந்தின் மீதான நேசம் மற்ற பறவைகளின் மீதான ஒன்றாகவும் விரைவில் மாறுகிறது.

தில்லியின் காற்று மாசுபாட்டால், வானம் மூடப்படுவதும், அதிலிருந்து பறவைகள் ஆயிரக்கணக்கில் கீழே விழுவதும் அங்கே தொடர்கதை. அவ்வாறு விழும் பறவைகளை மீட்டெடுத்து, அவற்றுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், தாங்கள் வசிக்கும் வீட்டின் சிறிய அடித்தளத்தில் அவர்கள் ஒரு தற்காலிக பறவை மருத்துவமனையை நிறுவுகின்றனர். அதன் மூலம் காற்று மாசுபாட்டின் கொடிய நச்சில் அகப்பட்டு கீழே வீழும் பறவைகளைக் காப்பாற்ற முயல்கின்றனர்.

தற்போது பெருகிவரும் வெறுப்பு அரசியலின் ஆபத்தை விட, பன்மடங்கு வீரியம் கொண்டது சூழலியல் மாசுபாடு. வெறுப்பு அரசியலால் பாதிக்கப்படும் சகோதரர்களுக்கும், காற்று மாசுபாட்டால் புறக்கணிப்புக்கு உள்ளாகும் பறவைகளுக்கும் இடையிலான ஆத்மார்த்தமான உறவின் மூலம் அது நமக்கு உணர்த்தப்படுகிறது. மனிதர்களுக்கும் பறவைகளுக்கு இடையிலான நேசத்தினூடே தில்லி போன்ற பெருநகரங்களில் உயந்துவரும் காற்று மாசுபாடும், சமூக பதட்டங்களும் இதில் கவித்துவமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உண்டு

விருது வழங்கும் நடுவர் குழுவின் தலைவரான போலந்து நாட்டின் இயக்குநர் அக்னியெஸ்கா ஹாலண்ட், இந்த விருதை அறிவிக்கும்போது ”அழிந்துவரும் இந்த உலகில், ஒவ்வோர் உயிரும் முக்கியம். ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உள்ளது என்பதை இந்த ஆவணப்படம் நமக்கு மீண்டும் உணர்த்தி உள்ளது” என்று தெரிவித்தார்.

இது கான் விழாவில் கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாம் விருது. கடந்த ஆண்டில் பாயல் கபாடியாவின் ‘ஏ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ என்கிற ஆவணப்படத்துக்கு தங்கக் கண் விருது வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்