ஓர் எழுத்தாளரின் திரைப் பயணம்!

By செய்திப்பிரிவு

அகிலன் கண்ணன்

‘ஜனவரி 31 அகிலனின் 32-வது நினைவு தினம்’

எழுத்தாளர் அகிலனின் முதல் குறு நாவல் ‘மங்கிய நிலவு’. அதை புதுக்கோட்டையில் 1944-ல் வெளியிட்டார் இயக்குநர் ப .நீலகண்டன். அப்போது அவர், அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். வெளியீட்டு விழாவின் முடிவில், தமது அடுத்த படத்தின் கதைக்கு உதவ சென்னைக்கு வருமாறு அகிலனை அழைத்தார்.

ரயில்வே மெயில் சர்வீஸில் பணியாற்றிக்கொண்டிருந்த அகிலன், ஒரு மாத விடுப்பில் சென்னை வந்தார். கதை உரிமை வாங்கப்பட்ட மலையாள நாடகத்தைத் திரைப்படமாக்க,‘தமிழ் வாழ்க்கையின் பண்புக்கேற்பத் திரைக்கதையாக்கிக் கொடுக்க வேண்டும்’ என்றார் நீலகண்டன்.

தன் சொந்தக் கதையை வைத்து ஒரு திரைக்கதை எழுதச் சொல்வார் என நினைத்த அகிலனுக்கு ஏமாற்றம். நட்புக்கு மதிப்பளித்தும், திரையுலக அனுபவத்தைப் பெறவும் இசைந்தார். தனக்குத் தரப்பட்ட பணியைச் செவ்வனே செய்து முடித்தார். பிறர் கதையைத் திரைக்காக எழுதும்போது அகிலனுக்கு ஆத்ம திருப்தி கிட்டவில்லை.

கல்கியில் அகிலனின் ‘பாவை விளக்கு' தொடராக வந்து பேசப்பட்டது. அப்போதே, ஜூபிடர் அதிபர் சோமு அதைப் படமாக்க விரும்பினார். இது பற்றி அகிலன் தம் திரையுலக நண்பர் கே.சோமுவுக்குக் கடிதம் எழுதினார். அவரை உடனே சேலத்துக்கு அழைத்தார் சோமு. அங்கு ‘சம்பூர்ண ராமாயணம்' படப்பிடிப்பில் இருந்த ஏ.பி.நாகராஜன், ‘பாவை விளக்கு’ கதையைத் தாமே படமாக்க விரும்புவதாகக் கூறினார்.

முன்பணமும் தந்து , “நாவலை எழுதிய உங்களுக்குத்தான் கதையில் எந்தெந்தக் கட்டங்கள் முக்கியம், எந்தெந்தக் கதாபாத்திரங்கள் எப்படி இயங்க வேண்டுமென்பதும் தெரியும். நீங்கள் நினைப்பதுபோல் எழுதிவிடுங்கள். பிறகு நான் அதைத் திரைக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்கிறேன்" என்றார்.

தடம் மாறாத நாவல்

ராஜாஜியின் அறிவுரையை மீறி, ரயில்வே மெயில் சர்வீஸ் பணியைத் துறந்த அகிலன், சென்னைக்குக் குடிபெயர்ந்தார். கலைமகளில் வெளிவந்த அவரது ‘வாழ்வு எங்கே?’ தொடர், ‘குலமகள் ராதை'யாக ஸ்பைடர் பிலிம்ஸ் வழியாகப் படமாகத் தொடங்கியது.

சிவாஜி, ஏ.பி.என், கே.சோமு, அகிலன் கூட்டணி உருவானது. இரு படங்களும் முடியும்வரை அகிலனைத் தம்முடனேயே இருக்க வேண்டினார் ஏ.பி.என். அகிலன் முதலில் தயங்கினாலும், பின்னர் ஒப்புக்கொண்டார். இப்போது திரையுலகில் அகிலனின் பெயர் பரவத் தொடங்கியிருந்தது.

‘பாவை விளக்கு’ இயன்றவரை நாவலை ஒட்டியே திரைப்படமானது. குற்றாலம், தாஜ் மஹால், பம்பாய், சென்னை எனப் படப்பிடிப்பு சுழலும். சிறப்பு அனுமதி பெற்று முதல் முறையாக தாஜ் மஹாலுக்குள் படமாக்கப்பட்ட ‘காவியமா நெஞ்சில் ஓவியமா’ பாடல் அதில் இடம்பெற்றது. ‘வாழ்வு எங்கே?' நாவலானது, சில மாற்றங்களுடன் ‘குலமகள் ராதை’யாக உருவானது. நாவலில் கண்ட திருப்தி திரையில் கிடைக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. பின்னர், ‘பட்டினத்தார்' படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதினார் அகிலன் . ஜி ராமநாதனின் தயாரிப்பில் கே.சோமு இயக்கத்தில் டி.எம். சௌந்தர்ராஜன் நடிப்பில் வெளிவந்தது. நகைச்சுவைப் பகுதி, வசனம் ஆகியவற்றை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.

கல்கியிலிருந்து அடுத்த நாவலைத் தொடராக எழுதும்படி அழைப்பு வந்தது. திரையுலகிலிருந்து விலகிவிட விரும்பிய அகிலனுக்கு, ஏ.பி. நாகராஜனின் அன்பு அதற்குக் குறுக்கே நின்றது. மாதத்தில் ஒரு வாரம் திரையுலகுக்கும் 3 வாரங்கள் எழுத்துலகுக்கும் என ஒதுக்கிக் கொண்டார். சரித்திர நாவலான, ‘வேங்கையின் மைந்தன்' ஆய்வுக்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் இலங்கைக்கும் போக விரும்பியதால் ஏ.பி.என்னிடம் விடைபெற்றார்.

தர்ம சங்கடம்

‘வேங்கையின் மைந்தன்' நாவலையும் தொடர் முடியும் முன்பே பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆர் கூட்டணி படமாக்க விரும்பியது. நாடகமாக மேடையேற்றிய சிவாஜி தாமே அதைப் படமாக்க விரும்பியதால் அகிலன் , எம்.ஜி.ஆரிடம் தமதுசங்கடத்தை விளக்கினார். சில வருடங்கள் சென்றபின் அகிலனின் மற்றொரு சரித்திர நாவலான ‘கயல்விழி'க்கு தமிழ்நாடு அரசு பரிசு அளித்தது. எம்.ஜி.ஆர், இந்த நாவலைத் திரைப்படமாக்க விரும்பி, அகிலனின் இல்லத்துக்கு நேரில் வந்து அவரது இசைவைப் பெற்றார். பி.ஆர்.பந்துலு இயக்க, எம்.ஜி.ஆர் நடிக்க, ‘கயல்விழி’, ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டிய’னாக உருவாகத் தொடங்கியது. பி.ஆர்.பந்துலு திடீரென மறையவே, ஒரு இடைவெளிக்குப்பின் தானே இயக்குநராகி படத்தை உருவாக்கினார்
எம்.ஜி.ஆர்.

இடையில், அரசியலில் திடீர் மாற்றம் உருவாகி எம்.ஜி.ஆர். தனிக் கட்சித் தொடங்கினார். இச்சூழலில் கயல்விழியின் முதன்மை நாயகர்களான அண்ணன் குலசேகர பாண்டியன், இளைய சகோதரர் சுந்தர பாண்டியன் கதாபாத்திரங்கள் எம்.ஜி.ஆரின் புதிய கட்சிக்குப் பெரிதும் பிரச்சார பலமானது. அப்படமே அவரது கடைசிப் படமாகவும் ஆனது.

எழுத்துரிமை வழக்கு

அகிலனின் ‘சிநேகிதி’ நாவலைத் தழுவி ஒரு படம் வெளிவந்தது . தனது எழுத்துரிமைக்காக அகிலன் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், வழக்கு தள்ளுபடியானது. அதன்பின்னர், திரையுலகிலிருந்து விலகியிருக்கவே விரும்பினார் அகிலன். ஆனால், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிப் படங்களைக் காதலுடன் பார்ப்பவரான அகிலனுக்குள், திரைப்படம் பற்றிய ஒரு தேடல் இருந்துகொண்டேதான் இருந்தது. கலைஞர், எம்.ஜி.ஆர். மாறி மாறி ஆட்சிசெய்தபோது, பலமுறை தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத் தேர்வுக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். மத்திய அரசு, திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அவரை நியமனம் செய்தபோது, தன் உடல் நலக் குறைவால் மறுத்தார்.

கட்டுரையாளர்,
எழுத்தாளர் அகிலனின் மகன்; எழுத்தாளர், பதிப்பாளர்; தொடர்புக்கு:
akilankannan51@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

9 mins ago

க்ரைம்

3 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

30 mins ago

தொழில்நுட்பம்

35 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

கல்வி

5 hours ago

மேலும்