1. அவலங்களின் அழகை, அவமானங்களின் வெடிப்புகளைத் துணிவுடன் திரையில் கொண்டுவருபவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்டவன்தான் ஒரு திரைப் படைப்பாளியாக இருக்க முடியும் என்று நம்புகிறவர். சினிமாவை தூய கலையாக மட்டுமே பார்க்க வேண்டும், அதில் வணிக அம்சங்களைத் திணிப்பது அந்தக் கலை மீதான வன்முறை என்று கூறுபவர். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பழமையை இறுகப் பிடித்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிவருவதாகத் துணிவுடன் தொடர்ந்து கூறி வருபவர்.
2. கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் மூத்த மகனாக 1977 மார்ச் 5 அன்று, சென்னையில் பிறந்தவர் செல்வராகவன். சென்னை மயிலாப்பூர், விவேகானந்தா பள்ளியில் படித்து முடித்து, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். பள்ளி இறுதி வகுப்பிலும் கல்லூரியில் பயிலும்போதும் அப்பா தரும் பாக்கெட் மணியில் திரைப்படங்கள் பார்த்தார்; பாலகுமாரன் நாவல்களை வாங்கிப் படித்தார். பாலகுமாரனைத் தனது ஆசான்களில் ஒருவராகவும் மனதில் வரித்துக்கொண்டார்.
3. அப்பா கஸ்தூரி ராஜா கதை எழுதி இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ பணப் பிரச்சினையால் பாதியுடன் நின்றுவிட, அதற்குப் புதிய திரைக்கதை எழுதி, அப்பாவுக்காக மீதிப் படத்தை இயக்கினார் செல்வராகவன். யாரும் வாங்க முன்வராத அந்தப் படம் வெளியானபோது செல்வராகவன் என்ற இயக்குநரும், தனுஷ் என்ற நடிகரும் பிறந்தனர்.
4. ‘காதல் கொண்டேன்’ படத்தில் தொடங்கி ‘இரண்டாம் உலகம்’ வரை உண்மையான காதலை நோக்கிய ஓயாத தேடலில் உழல்பவை செல்வராகவனின் படங்கள். பொய், காமம் இரண்டிலும் ஊறிக்கிடப்பதே இன்றைய காதல் எனத் தனது படங்களில் வரையறுக்கும் அவர், சமூக ஏற்றத்தாழ்வுகளால், தாழ்வு மனப்பான்மையால் கிழிபடும் சாமானிய மனிதர்களிடமிருந்து தன் கதையின் நாயகர்களைப் படைக்க விரும்புபவர்.
5. எல்லா நிகழ்வுகளையும் போலத்தான் இவையும் எனத் துணிவுமிக்க பாலியல் காட்சிகளால் பார்வையாளர்களை அதிரச் செய்பவர். 90-களுக்குப் பிறகான நகர்ப்புற, கீழ் மத்தியதர வர்க்க இளைஞர்களின் ஏக்கங்களையும் மீறல்களையும் தைரியமாகவும் மூர்க்கத்துடனும் கலாச்சாரப் போலித்தனங்களைக் கீழே போட்டு மிதித்தபடி எடுத்து வைத்தவை இவர் இயக்கிய காதல் காவியங்கள்.
6. அன்பு, உறவுகள், மதிப்பீடுகள் அனைத்தும் நிச்சயமற்றுப் போன உலகில், தனது விளிம்புநிலைக் கதாபாத்திரங்களின் அகால மரணம் மூலம் தனது படங்களுக்குக் காவியச் சாயலை வழங்குவதில் வெற்றிபெற்ற இயக்குநர்.
7. செல்வராகவனின் கதாநாயகிகள் முதன்மையான முடிவுகளைத் தாமே எடுக்கக்கூடியவர்கள். கதாநாயகனை முன்னிட்டு இருட்டடிப்பு செய்யாமல், பெண் கதாபாத்திரங்களை அவர்களுக்கே உரிய பண்புடன் தொடர்ந்து சித்திரித்துவருவதில் சமரசம் செய்துகொள்ளாதவர். அவரது படங்களிலிருந்து பெண் கதாபாத்திரங்களை நீக்கிவிட்டால், கதாநாயகர்கள் துணைக் கதாபாத்திரங்கள்போல் ஆகிவிடுவதைப் பார்க்கலாம். அந்த வகையில் கே.பாலசந்தர், பாலுமகேந்திரா உள்ளிட்டோரின் நவீனகால நீட்சியே செல்வராகவன் எனப் பாராட்டப்படுபவர்.
8. முதுகில் குத்தும் கீழ்மட்ட கட்சி அரசியலைப் பேசிய ‘புதுப்பேட்டை’, கற்பனையான சோழர்களின் வரலாற்றின் வழியே ஈழத்தமிழர் படுகொலை, புலம்பெயர் வாழ்க்கையை மறைமுக உள்ளீடாகக் கொண்ட, தென்னிந்திய சினிமா கண்டிராத ஃபேண்டஸி படம் எனக் கொண்டாடப்படும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்கள் இன்னும் பல ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்க வேண்டிய செல்வராகவனின் முன்கூட்டிய படைப்புகள் எனலாம்.
9. செல்வராகவனுக்கு நண்பர்கள் என்று பெரிதாக யாருமில்லை. யுவன்ஷங்கர் ராஜாவும் செல்வராகவனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவரின் நட்பில் சிலகாலம் விரிசல் விழுந்தது. யுவனுக்கு இணையான நட்புலகைப் பாடலாசிரியர் நா. முத்துக்குமாருடன் பகிர்ந்துகொண்டிருந்த செல்வராகவன், வெளியாகவிருக்கும் தனது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் மூலம் யுவனுடனான தனது நட்பைப் புதுப்பித்து, படத்தை முத்துகுமாருக்கு சமர்ப்பித்திருக்கிறார்.
10. வீட்டில் தம்பி தனுஷ், தங்கைகள், அம்மா விஜயலட்சுமி ஆகியோருடன் சிரிப்பும் விளையாட்டுமாகப் பழகும் செல்வராகவன், படப்பிடிப்பில் தனுஷ் தன்னை “சார்” என்று அழைப்பதையே விரும்புவார். தனிமை விரும்பியாகவும் கோபக்காரராகவும் இருந்த செல்வராகவனின் உலகை மாற்றி அமைத்துவிட்டார்கள் அவருடைய மனைவி கீதாஞ்சலி, மகள் லீலாவதி, மகன் ஓம்கார்.
நண்பரின் பார்வையில்..
செல்வராகவன் தன் ஆத்மார்த்த நண்பராகவும் ஆசானாகவும் கருதும் ஒருவர் எழுத்துச்சித்தர் பாலகுமாரன். அவரிடம் செல்வராகவன் பற்றிக் கேட்டதும் தீர்க்கமாய் வந்து விழுந்த வார்த்தைகள் இவை:
செல்வராகவன் எனும் இளைஞனைச் சிறுவயதில் மிகக் கூர்மையாகக் கவனித்திருக்கிறேன். அவனுடைய தந்தை, தாய் இருவரையும் நான் நன்கு அறிவேன். இருவருமே எளிய மனிதர்கள். இயல்பானவர்கள். கஸ்தூரிராஜா என் நண்பர். செல்வராகவன் பிறந்தபோது இருந்த வீட்டுச் சூழ்நிலையை தயக்கமின்றி என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மிகுந்த அழுத்தத்தில், வறுமையில் வளர்ந்த இளைஞன் செல்வராகவன். இதனால் அவனிடம் இருந்த தாழ்வு மனப்பான்மை பள்ளிப்பருவத்தில் கொஞ்சம் வலுப்பெற்றது.
வெளித்தோற்றத்தில் பொலிவான ஆளாக இருந்தாலும், உள்ளுக்குள் ‘நாம் கவர்ச்சிகரமான ஆணாக இல்லையோ’ என்ற எண்ணம் உண்டு. அதுவே மற்றவர் மீதான அலட்சியமாக, வெடுக்கென்ற விமர்சனமாக வெளிப்படும். மாறாகத் தன்னிடம் ஒருவர் உண்மையாக இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால், மூச்சு முட்ட இறுகக் கட்டிக்கொள்வார். அவ்வளவு அன்புடையவர். இது என்னிடம் நடந்தது. என் எழுத்துக்களைப் படித்துவிட்டு என்னை அவரது திரைப்படத்துக்கு வேலைசெய்ய அழைத்தபோது கொஞ்சம் தயங்கினேன். இவர் என்ன மாதிரியான சினிமா கொடுப்பார் என்ற கேள்வி இருந்தது.
ஆனால், மிகச் சிறந்த கற்பனை வளமும் வாழ்க்கையின் யதார்த்தம் பற்றிய ஆச்சரியமும் அதைப் படமாக்கிவிட வேண்டும் என்ற துடிப்பும் அவரிடம் இருந்ததை அவரது தொடக்கப் படங்களின் வழியே அவதானித்துக்கொண்டேன். வணிக சினிமாவின் நியதிகளுக்கு உட்பட்டு வெற்றிகளைக் கொடுக்க முடியும் என்ற திறமையையும் அவரிடம் கண்டுகொண்டேன். செல்வராகவன் கடுமையான உழைப்பாளி. உச்சகட்ட சோம்பேறி. இரண்டுமாக இருக்கிற ஒரு யதார்த்தக் கலைஞனை நான் அவருள் கண்டேன்.
தமிழில் தரமாக எழுதக்கூடியவர், சிறந்த சிறுகதையை அவரால் எழுத முடியும். நாவல் எழுதுகிற திறமையும் உண்டு. எழுத்தின் வன்மை, அதன் நெளிவுசுளிவுகளை அறிந்தவர். அவருடைய படங்கள் எல்லாம் வாழ்வின் வலியை, அவமானங்களை இளைஞர்களுக்குச் சொல்லி, ‘எழுந்திரு… எழுந்திரு…’ என்று உற்சாகப்படுத்துபவை.
தற்போது திருமணமாகி தந்தையாகவும் ஆகிவிட்டதால், அவரது மனதுக்குள் அமைதி வந்திருக்கும். இந்தச் சூழ்நிலையில் உலகை உள்ளது உள்ளபடி உள்வாங்கித் திரைவழியே பிரதிபலிக்கும் அவரது திறனுக்கு காலமும் மனநிலையும் அவரது அருகில் வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். இனிவரப்போகும் சந்தர்ப்பங்களைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டால் சிறந்த படைப்பாளி எனக் காலம் அவரைக் கொண்டாடும் என எண்ணுகிறேன். வாழ்க செல்வராகவன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
37 mins ago
சினிமா
57 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
33 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago