சினிமாவுக்கான இயக்கம் தேவை

18-வது கேரள சர்வதேச திரைப்பட விழா திருவனந்த புரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த திரைப்பட விழாவில் 56 நாடுகளைச் சேர்ந்த 209 படங்கள் திரையிடப்படுகிறது. இந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே தமிழ்ப் படம் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘சூது கவ்வும்’. இந்தப் படம் ‘இந்திய சினிமா இன்று’ என்னும் பிரிவில் திரையிடப்பட்டது. இதற்காகத் திருவனந்தபுரம் வந்திருந்த இயக்குநர் நலன் குமாரசாமி, திரைவிழா அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

சர்வதேசப் புகழ்பெற்ற திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் இயக்குநராகக் கலந்துகொள்வதை எப்படி உணர்கிறீர்கள்?

பெருமையாக இருக்கிறது. அதுபோல பார்வையாளனாகவும் எனக்கு இதுதான் முதல் திரைப்பட விழா. துவக்க விழா நிகழ்ச்சி எனக்கு புதிய அனுபவத்தைத் தந்தது. சினிமாவை விரும்பக்கூடிய பலர் ஒரே இடத்தில் கூடுவதைப் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது. இம்மாதிரியான ஒரு விழாவில் என்னுடைய படமும் திரையிடப்படுவதில் மகிழ்ச்சி.

துவக்க விழாவில் பேசிய நடிகை ஷபானா ஆஸ்மி, நல்ல சினிமா உருவாக சூழல் முக்கியம் எனக் குறிப்பிட்டார். அந்தச் சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதா?

ரசிகர்களைப் பொறுத்த அளவில், அவர்கள் நல்ல சினிமா எடுத்தால் ரசிக்கிறார்கள். அதற்கு வரவேற்பு இல்லை எனச் சொல்ல முடியாது. பல நல்ல சினிமாக்கள் வியாபார ரீதியாகவும் வெற்றி அடைந்திருக்கிறது. ஆனால் கேரளாவில் இருப்பது போல சினிமா இயக்கமாக இல்லை. தமிழகத்தில் சினிமா இயக்கம் ஒன்று உருவாக வேண்டியது அவசியம்.

நீங்கள் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. எப்படி சினிமாவைக் கற்றீர்கள்?

எனக்கு எல்லோரையும் போல சினிமா ஆர்வம் உண்டு. ஆனால் எம்.டெக் படித்திருக்கிறேன். கொஞ்ச நாள் அந்தத் துறையில் வேலை பார்த்தேன். பிறகு என் அப்பாவுடன் தொழிலைக் கவனித்துக் கொண்டேன். ‘நாளைய இயக்குனர்’ போட்டிக்கான அழைப்பு வந்தது. அதற்காக ‘நெஞ்சுக்கு நீதி’ குறும்படத்தை எடுத்தேன். அதை எடுக்கும்போது நானாகக் கற்றுக்கொண்டேன். திரைக்கதை அமைப்பது குறித்து நிறைய புத்தகங்கள் வாசித்தேன். சர்வதேச சினிமாக்கள் பார்த்தேன்.

உங்களுடைய ‘சூது கவ்வும்’ மாதிரியான படம் தமிழுக்குப் புதியது. இந்தப் பாணியை எங்கிருந்து பெற்றீர்கள்?

கோயன் பிரதர்ஸ் தான் எனக்குப் பிடித்த இயக்குனர்கள். அவர்களுடைய எல்லாப் படங்களும் எனக்கு உந்துதல் தந்தவை. ‘சூது கவ்வும்’ படத்தில் உள்ள ப்ளாக் காமெடி பாணி, கோயன் பிரதர்ஸ் படங்களின் பாதிப்புதான்.

பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கப் போகிறீர்களா?

பெரிய நடிகர்களுக்காக கதை செய்வதற்கு இன்னும் தயாராக வேண்டியிருக்கிறது. கதாநாயகர்களுக்கான சினிமா எடுக்க விருப்பம்தான். ஆனால் அது ‘தளபதி’ மாதிரியான படமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சினிமாவில் உங்கள் இலக்கு என்ன?

‘மெமரீஸ் ஆஃப் மர்டர்’ என்று ஒரு கொரியப் படம். உலக அளவிலான பல சர்வதேசத் திரை விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வாங்கிக் குவித்த படம். இந்தப் படம் வியாபாரரீதியாகவும் வெற்றி அடைந்த படம். இதுமாதிரியான ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதே என் இலக்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்