சென்னை சர்வதேச பட விழா: காட்டிக்கொடுத்த காதல் கவிதை!

By திரை பாரதி

நேற்று ‘தி ஸ்கொயர்’ படத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய சர்வதேசப் படவிழாவில் இன்று மொத்தம் 26 படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில் சினிமா ஆர்வலர்கள் தவறவிடக் கூடாத படங்கள் பல. அவற்றில் சில படங்கள் பற்றிக் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டு சென்றால் திரை அனுபவம் முழுமையாகக் கிடைத்துவிடலாம்.

15th film festival logo_col (2)ஒருநாளைக்குப் பிறகு

சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவி திரையரங்கில் மாலை 4.30 மணிக்குத் திரையிடப்படும் படம் ‘எ டே ஆஃப்டர்’ (A DAY AFTER) திரை தேசம் பிரிவின் கீழ் திரையிடப்பட இருக்கும் ஆறு தற்காலக் கொரியப் படங்களில் ஒன்று. 92 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் ஹாங் சாங்-சூ.

சியோலில் சிறிய பதிப்பகம் ஒன்றை நடத்திவரும் போங்வான், அன்று சீக்கிரமாக எழுந்துகொள்கிறார். ‘அதிகாலையில் மிகவும் சீக்கிரமாக அவர் எழுந்து கொண்டதற்கு என்ன காரணமாக இருக்கும்?’ சந்தேகப்படும் அவருடைய மனைவி கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார். ஆனால், போங்வான் மேலோட்டமான பதில்களையே தருகிறார். அவர் அலுவலகம் கிளம்பிச்செல்லும் அந்த விடியாத அதிகாலையில் ஒரு மாதத்துக்கு முன் வேலையைவிட்டுச் சென்ற பெண்ணைப் பற்றியே சிந்திக்கிறார். அலுவலகத்தை அடைந்ததும் ஏரியூம் என்ற தனது புதிய செகரெட்டரியைச் சந்திக்கிறார்.

அவள் மிகவும் அழகான இளம் பெண். இதற்கிடையில் நிலைகொள்ளாமல் தவிக்கும் மனைவி, வீட்டில் தன் கணவன் எழுதிய காதல் கவிதையைக் கண்டுபிடிக்கிறார். முகம் சிவக்க அதே வேகத்தோடு, கையில் கவிதையோடு பதிப்பக அலுவலகத்துக்கு வந்து கணவனிடம் சண்டை போடுகிறார். அவருடைய கணவரின் செகரட்டரியைத் தாக்குகிறார். கவிதை காட்டிக்கொடுத்தது எதை? கான் படவிழாவின் கலந்துகொண்டு விருதுபெற்றிருக்கும் இந்தப் படம் உங்களைக் கூட ஒருவகையில் விசாரணை செய்யக்கூடும்.

ஒளிந்து வாழும் வீரன் ஒருவன்

தேவி திரையரங்கில் மாலை 7.00 மணிக்குக் காண வேண்டிய படம் ‘கோல்டன் இயர்ஸ்’ என்ற புத்தம் புது பிரெஞ்சுப் படம். முதல் உலகப் போரிலிருந்து தப்பிவந்த வீரன் பாலின் உண்மைக் கதை இது. ராணுவ வீரன் என்ற கணவனது அடையாளத்தை மறைக்க, அவனுடைய மனைவி லூயி, பாலுக்குப் பெண் வேடமிடுகிறாள். பாரிஸில் சூஸன் என்ற பெயரில் ஒரு பெண்ணைப் போல் நடமாடுகிறான் பால். போர் முடிந்ததும், சூஸன் மீண்டும் பால் என்ற தன் உண்மையான அடையாளத்தைப் பெற முயற்சி மேற்கொள்கிறான். இப்படி மறைந்து வாழ்பவர்களின் சாயம் வெளுக்கும்போது எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை இந்தப் படம் நகைச்சுவையாகப் பேசுகிறது. இந்தப் படமும் நடந்துமுடிந்த கான் பட விழாவின் போட்டிப் பிரிவில் கலந்துகொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

துணிவே துணை

உலக சினிமா என்ற அளவில் திரை ஆர்வலர்களைத் தொடர்ந்து ஈர்க்கும் இரண்டு நாடுகள் என்ற அளவில் கொரியா, பிரான்ஸ் நாடுகளின் இரண்டு படங்கள் பற்றிக் கூறியாகிவிட்டது. தமிழில் ஒரு படம்கூட இந்த வரிசையில் இன்று இடம்பெறவில்லையா என்று கேட்பவர்களுக்காகவே இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ரஷ்யக் கலாச்சார மையத்தில் திரையிடப்படும் படம் ‘மை சன் இஸ் எ கே’. ஆண்களின் ஓரின ஈர்ப்பு பற்றிக் கூறும் அதிரடியான திரைப்படம்.

குணச்சித்திர அம்மா கதாபாத்திரங்களில் நடித்துவரும் அனுபமா குமார், அபிஷேக் ஜோசப், அஸ்விந்த்ஜித், கிஷோர், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்கியிருக்கிறார். இது இவர் இயக்கியிருக்கும் முதல் முழுநீளப் படம். ஏற்கெனவே நிறைய குறும்படங்களை இயக்கி கவனம் பெற்றவர். இந்தப் படம் உங்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அவ்வகை ஆர்வலர்கள் கலந்துகொண்டது தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த நிலையில், இந்தப் படத்தைப் பொருத்தமான தருணத்தின் திரையிடலாகக் கொள்ளலாம். இன்று திரையிடப்படும் ஏனைய திரைப்படங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை மேலும் தெரிந்துகொள்ள www.tamil.thehindu.com இணையதளத்துடன் இணைந்திருங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்