தி கிரீன் மைல்: மனதுக்கும் மரணத்துக்குமான தூரம்

By வெ.சந்திரமோகன்

தங்கள் வசந்தகால வாழ்வின் நினைவுகளை அசைபோட்டபடி நாள்களை ஓட்டும் முதியோர்களின் இல்லம். அதில் தங்கியிருக்கும் பால் எட்ஜ்காம்ப் (டாம் ஹாங்ஸ்) என்ற முதியவர், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு பாடலைப் பார்த்தவுடன் பழைய நினைவுகளின் அழுத்தம் தாங்காமல் அழுதுவிடுகிறார். அந்தக் கண்ணீருக்குக் காரணம் என்ன என்று கேட்கும் தனது தோழியிடம், வலிமிகுந்த அந்தக் கதையைச் சொல்கிறார்.

பால் பணிபுரிந்த சிறைச்சாலையான ‘கிரீன் மைல்’ மரணதண்டனைக் கைதிகளுக்கானது. இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கப்போகும் அவர்கள்மீது வன்மம் காட்ட என்ன இருக்கிறது? அங்கே கொண்டுவரப்படும் கைதிகள்மீது கண்காணிப்பாளர் பாலும் பிற காவலர்களும் பரிவுடன் நடந்துகொள்கின்றனர்.

ஒருநாள் சிறைக்கு அழைத்துவரப்படும் கைதியைப் பார்க்கும் காவலர்களுக்குப் பேரதிர்ச்சி. கைகால்களில் விலங்கிடப்பட்டுக் கொண்டுவரப்படும் கொலைக் குற்றவாளி ஜான் காஃபி ஏழு அடிக்கும் அதிகமான உயரத்தில் பிரம்மாண்டமான உருவம் கொண்ட கறுப்பின மனிதன். இரண்டு வெள்ளைக்காரச் சிறுமிகளைப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவன்.

அமைதியான அந்தச் சிறைக்கூடம் அவனது வருகையால் சற்றே பதற்றத்துக்குள்ளாகிறது. எனினும், கூச்ச சுபாவம் கொண்ட அந்த ராட்சத உருவம் கொண்ட மனிதன், ஆபத்தில்லாதவன் என்பதை பாலும் மற்றவர்களும் விரைவில் உணர்ந்துகொள்கின்றனர். ஜான் காஃபியிடம் இருக்கும் விசேஷ சக்திதான் கதையின் ஆன்ம பலம். சிறுநீரகத் தொற்றால் அவதிப்படும் பால், ஜான் காஃபியின் அந்த அற்புத சக்தி மூலம் முற்றிலும் குணமடைகிறார்.

காவலர் குழாமில் புதிதாகச் சேர்ந்த பெர்சி வெட்மோர் வக்கிர மனம் கொண்டவன். கைதிகளைத் துன்புறுத்தத் தயங்காதவன். மரண தண்டனைக் கைதியான எட்வர்ட் டெல் செல்லமாக வளர்க்கும் எலியைக் காலால் மிதித்தே கொன்றுவிடுகிறான். பரிதாபத்துக்குரிய அந்தக் கைதி அலறித் துடிக்கும்போது மீண்டும் ஒரு அதிசயம் நிகழ்கிறது. ஜான் காஃபி சிறிய அந்தப் பிராணியைத் தன் கைகளுக்குள் பொத்திவைத்து அதன் மரணத்தைத் தன் உடலுக்குள் வாங்கிக்கொள்கிறான். சில நிமிடங்களில் மீண்டும் உயிர் பெறும் எலி அன்புக்குரிய தன் எஜமானரைக் கொஞ்சுகிறது.

டெல்லின் மரண தண்டனை நாளில், பெர்சி தன் குரூர எண்ணத்தை அரங்கேற்றுகிறான். மின்சார நாற்காலியில் அமரவைக்கப்படும் கைதியின் தலையில் நீரில் நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை வைப்பது முக்கியம். உயர் அழுத்த மின்சாரம் தரும் அதிர்ச்சி, கைதியின் உடலைப் பொசுக்கிவிடாமல் இருப்பதற்கான ஏற்பாடு அது.

ஆனால், பஞ்சை நனைக்காமலேயே டெல்லின் தலையில் வைத்துப் பொருத்திவிடுகிறான். இதனால், டெல் மிகக் கோரமாக மரணமடைகிறான். தன் சிறை அறையில் இருந்தபடியே அந்தக் கொடூர நிகழ்வை உணர்ந்து துடிக்கிறான் ஜான் காஃபி.

உண்மையில், வைல்ட் பில்தான் அந்தச் சிறுமிகளைக் கொன்றவன். சம்பவத்தை நேரில் பார்க்கும் ஜான், சிறுமிகளைத் தன் சக்தியின் மூலம் காப்பாற்ற முயல்கிறான். தாமதமான தனது முயற்சி பலிக்காமல் போகவே, தாங்க மாட்டாமல் கதறி அழும் அவனைக் குற்றவாளி என முடிவு செய்கிறது சிறுமிகளைத் தேடிவந்த உறவினர் கூட்டம். தன் அற்புத சக்தியால் பிறர் உயிரைக் காப்பாற்றும் அந்த உன்னத மனிதன், செய்யாத குற்றத்துக்காக மரண தண்டனை பெறுகிறான்.

இந்த உண்மைகளை ஜானின் தொடுதல் மூலம் காட்சி பூர்வமாகவே உணர்ந்துகொள்கிறார் பால். ஜானை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் பாலும் காவலர்களும் சிறையிலிருந்து தப்பிச் செல்ல அவனுக்கு உதவத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர். என்றாலும், மனிதத் தன்மையற்ற இந்த உலகிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளவே விரும்புவதாகச் சொல்லும் ஜான், மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். மரண தண்டனை விதிக்கப்படும் நேரத்தில், காவலர்கள் கலங்கிய கண்களுடன் உறைந்து நிற்கின்றனர்.

இந்தக் கதையைத் தன் தோழிக்குச் சொல்லும் பால், மற்றொரு அதிசயத்தையும் அவளுக்குக் காட்டுகிறார். முதியோர் இல்லம் இருக்கும் வனப்பகுதியில் உள்ள பழைய வீட்டில், ஒரு சிறு பெட்டியில் இன்னும் உயிருடன் இருக்கிறது டெல்லின் செல்ல எலி. அதிசயிக்கும் தோழிக்கு இன்னொரு உண்மையைச் சொல்கிறார் பால். அவருக்குத் தற்போது வயது 108.

இருவருக்கும் தன் அற்புத சக்தி மூலம் நீடித்த வாழ்நாளைப் பரிசளித்துச் சென்றிருக்கிறான் ஜான். எனினும், தன் அன்புக்குரியவர்களின் இறப்புகளைச் சந்திக்க நேரும் துயரம்தான் தனக்கு மிஞ்சுகிறது என்று சொல்லும் பால், தன் முடிவுக்கான நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பதுடன் படம் நிறைவடைகிறது.

படத்தில் சிறைக் கண்காணிப்பாளர் பால் பாத்திரத்தில் டாம் ஹாங்ஸும், ஜான் காஃபி பாத்திரத்தில் மைக்கேல் கிளார்க் டங்கனும் ஆத்மார்த்தமாக நடித்திருக்கின்றனர்.

சிறைக்கு வெளியே கொண்டுவரப்படும் சமயத்தில் வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து ஒரு குழந்தையைப் போல் குதூகலிக்கும் காட்சியிலும், தலைமைக் காவலரின் மனைவியைக் குணப்படுத்தும் காட்சியிலும் மைக்கேல் கிளார்க்கின் நடிப்பு, கண்களை நனைத்துவிடும். ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை உணர்வுப் பூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் பிராங்க் டாராபாண்ட். சிறை வாழ்க்கையின் வலியை உணர்த்தும் ‘தி ஷாஷாங்க் ரீடெம்ஷன்’ படத்தை இயக்கியவர் இவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

12 mins ago

சுற்றுச்சூழல்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்