தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரம் மதுரை. தமிழ்ப் பண்பாட்டிற்கும் இலக்கியத்திற்கும் இருப்பிடமாகப் பல நூற்றாண்டுகளாகத் திகழ்ந்துவரும் நகரம் இது. இந்நகரின் வழியாக வைகை ஆறு ஓடுகிறது. மேற்கு மலைத் தொடரிலுள்ள ஏலமலையை அடுத்துள்ள வருஷநாடு பள்ளத்தாக்கில் தோன்றும் இந்த ஆறு, பாக் ஜலசந்தியில் கடலில் கடக்கிறது.
மழைக்காலத்தில் மட்டுமே இதில் நீர் ஓடும். ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் நீர் இருக்காது. கேரளத்திலிருந்து வரும் பெரியாறு இதனுடன் சேருவதால்தான், இந்த ஆற்றினால் தமிழ்நாட்டு மக்களுக்குச் சில நன்மைகளைச் செய்ய முடிகிறது.
சிறந்த தமிழ்க் காவியமாகிய சிலப்பதிகாரத்தில் வைகை ஓடும் காட்சியை இளங்கோவடிகள் இசையுடன் வருணித்திருக்கிறார். வைகை நதியை ஓர் இளம் பெண்ணாகவும், அதன் இடையிலே உள்ள மணற்குன்றில் பூத்திருக்கும் சிவப்பு நிறமலர்களை அவளுடைய சிவந்த வாயாகவும், நீரிலே மிதந்து வரும் முல்லை அரும்புகளை அவளது பற்களாகவும், குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மீன்களை அவளது கண்களாகவும், இருபுறமும் அலைகள் அரித்த கருமணலை அவளது கூந்தலாகவும் அவர் வருணித்திருக்கிறார்.
வைகையின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு மக்களை ஏற்றிச் செல்ல அந்தக் காலத்தில் குதிரைமுக ஓடங்கள், யானை முக ஓடங்கள், சிங்க முக ஓடங்கள் ஆகியவை இருந்தனவாம்.
ஒரு காலத்தில் சைவ-சமணச் சண்டைகள் தென்னாட்டில் மும்முரமாக நடைபெற்றன. அப்போது, எந்தச் சமயம் பெரியது என்பதை நிச்சயிக்க, வைகை நதியைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதக் கருத்துகளை ஏடுகளில் எழுதி வைகையில் போட்டார்கள். உயர்ந்த கருத்துகளைக் கொண்ட ஏடுகள், நதி ஓடுகின்ற பக்கம் செல்லாமல் எதிர்த்து வந்தனவாம்! இது ஒரு கதைதான். ஆனாலும் எவ்வளவு அழகான கதை!
(நன்றி: நம் நதிகள் பாகம் 2,
அழ. வள்ளியப்பா, நேஷனல் புக் டிரஸ்ட்)
முக்கிய செய்திகள்
க்ரைம்
16 mins ago
இந்தியா
2 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago
சினிமா
4 hours ago