சோதனைகளைக் கடக்க உதவும் யூனுஸ் நபிகளார்

By முகமது ஹுசைன்

மீளவே முடியாத இன்னலிலோ வெளியேற வழியே தெரியாத சூழலிலோ அகப்பட்டு இருப்பதாக உணரும் அளவுக்கு நம்முடைய வாழ்க்கை நம்பிக்கையின்மையும் அவநம்பிக்கையும் சூழ்ந்ததாக இருக்கிறது. ஆனால், அவநம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் நம்பிக்கையே தீர்வாக உள்ளது. அந்த நம்பிக்கையே நல்வழியை நமக்குக் காட்டுகிறது; ஏற்படுத்தியும் தருகிறது. காலம் கடந்து நிலைத்து நிற்கும் யூனுஸ் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை உணர்த்தும் சேதியும் இதுவே.

தோல்வியில் முடிந்த முயற்சி

அந்தக் காலத்தில் பிரசித்திபெற்ற நினிவே எனும் பெரிய நகரம் உருவ வழிபாடும் மூடநம்பிக்கைகளும் நிறைந்த இடமாகத் திகழ்ந்தது. அங்கே மக்கள் தீமைகளில் மூழ்கி, பாவச் செயல்களில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவந்தனர். அந்த நகரத்து மக்களுக்கு இறையுரையைப் போதித்து, நல்வழியைக் காட்ட யூனுஸ் நபி அனுப்பப்பட்டார்.

யூனுஸ் நபிக்கு முன்பிருந்த நபிகளை எப்படிப் பல தேசங்கள் நிராகரித்தனவோ, அதே போன்றே யூனுஸ் நபிகளாரையும் நினிவே நகரத்து மக்கள் நிராகரித்தனர். அவர் எதிர்பார்த்ததை அவரால் அடைய முடியவில்லை. தன்னுடைய பணி தோல்வியடைந்ததை உணர்ந்தபோது, அவர் அங்கிருந்து மனமுடைந்து வெளியேறினார்.

புயலில் அகப்பட்ட கப்பல்

இறைவனின் அனுமதியின்றி நகரத்தை விட்டு வெளியேறிய அவர், நகரத்திலிருந்து வெகு தொலைவுக்குச் செல்ல விரும்பி ஒரு கப்பலில் ஏறிப் பயணப்பட்டார். அவர் பயணம் செய்த கப்பல் வலுவான புயலில் சிக்குண்டது. புயலின் மூர்க்கத்தால் அந்தக் கப்பல் மூழ்கத் தொடங்கியது. வேறு வழியின்றி, யூனுஸ் நபி கப்பலைவிட்டு வெளியேறினார்.

தொலைந்த அகங்காரம்

அப்போது கடலில், அசாதாரணமான அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. இறைவன் கட்டளையிட்டபடி, யூனுஸை முழுவதுமாக விழுங்குவதற்காக ஒரு திமிங்கிலம் அனுப்பப்பட்டது. அது அவரை முழுவதுமாக விழுங்கிக் கடலின் அடி ஆழத்துக்குச் சென்றது. இருள் சூழ்ந்த ஆழ்கடலில் விரக்தியின் ஆழத்தில் மூழ்கியபோதுதான் யூனுஸ் நபியின் மனத்தில் அந்த மாற்றம் ஏற்பட்டது. தான் ஒரு மதவாதி, தீர்க்கதரிசி என்பது போன்ற அகங்காரங்களை உதறி, அவர் இறைவனின் உதவியை நாடினார். ஏனெனில், தன்னால் எதுவும் முடியாது; இறைவனால் மட்டுமே தனக்கு உதவ முடியும், சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை அவர் அப்போது முழுமையாக உணர்ந்தார்; நம்பினார்.

இறைவனின் கருணை

அந்தக் கணத்திலேயே, திமிங்கிலம் கடலின் மேற்பரப்புக்கு வந்து, யூனுஸ் நபியைக் கரையில் உமிழ்ந்து சென்றது. இறைவனின் கருணையால், அவருக்கு நிழல் அளிக்கும் விதமாக ஒரு செடியும் அவரைச் சுற்றி அங்கே முளைத்து வளர்ந்தது. சோதனையிலிருந்து மீண்ட அவர், நம்பிக்கையுடன் மீண்டும் நினிவே நகருக்குச் சென்றார்.

அந்த மூர்க்கமான புயலும், அதனால் ஏற்பட்ட கடுமையான கடல்சீற்றமும் அந்த நகரத்துக்கும், அதன் மக்களுக்கும் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நினிவே நகரத்து மக்களிடம் அதற்கான காரணத்தையும் இறைவனின் கருணையையும் யூனுஸ் நபி எடுத்துரைத்தார். இறைவனின் கருணையை அனுபவபூர்வமாக உணர்ந்த அந்த நகரத்து மக்கள், அவரின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்தனர். இறைவழிக்குத் திரும்பினர். தங்களையும் தங்கள் வாழ்வையும் இறைவனிடம் ஒப்படைத்தனர்.

நம்பிக்கை காட்டும் வழி

இருளால் சூழப்பட்ட ஒரு திமிங்கிலத்தின் வயிற்றில் இருப்பதைப் போல் நீங்கள் எப்போதாவது உணர்ந்தால், வெளியேற வழியில்லாததுபோல் தோன்றினால், யூனுஸ் நபி செய்ததை நீங்களும் செய்யுங்கள். நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள். கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் இந்த இக்கட்டான சூழலால், தற்போதைய காலகட்டம் நமக்குக் கடினமானதாகவும், விசித்திரமாகவும், ஏன் அச்சம் நிறைந்ததாகவும்கூட இருக்கலாம். இந்தக் காலகட்டத்தைக் கடப்பதற்கும், துயரிலிருந்து மீள்வதற்கும், மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் இந்த நம்பிக்கை ஒன்றே நம் முன் இருக்கும் ஒரே வழி.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

59 mins ago

கல்வி

56 mins ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்