சரஸ்
பழங்குடி மக்களால் வனங்களை மட்டுமல்ல வானத்தையும் எட்டிப் பிடிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் நாட்டின் முதல் பழங்குடியின விமானி அனுப்பிரியா மதுமிதா லாக்ரா.
புயலால் அதிகமாகப் பாதிக்கப்படும் ஒடிஷாவைச் சேர்ந்தவர் 27 வயதாகும் அனுப்பிரியா. புவனேஸ்வரில் உள்ள மத்திய விமானப் பயிற்சி மையத்தில் ஏழு ஆண்டுகள் விமானி பயிற்சிப் படிப்பைக் கடந்த ஆண்டு இவர் முடித்தார். பயிற்சி முடித்ததுமே தனியார் நிறுவனமான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ அவருக்கு இணை விமானிப் பணியை வழங்கியது. இதன்மூலம் நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் விமானி என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத் துள்ளார். அனுப்பிரியாவின் இந்தச் சாதனை இந்தியா விமானத் துறையில் ஒரு மைல்கல்.
1948-ல் நாட்டின் முதல் பெண் விமானியான சரளா தக்கர் தொடங்கிவைத்த பயணம், சமூகத்தில் வெவ்வேறு தளங்களில் உள்ள பெண்களுக்கு இப்போதும் உந்துசக்தியாக உள்ளது.
ஒடிஷாவின் மக்கள் தொகையில் 22 சதவீதத்தினர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மொத்தம் 62 வகையான பழங்குடியின மக்கள் வாசித்துவருகிறார்கள். கனிம வளங்கள் நிறைந்த ஒடிஷா தற்போதும் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய சாதனையால் தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார் அனுப்பிரியா. தற்போதுவரை ரயில் போக்குவரத்தைக் காணாத மல்காங்கிரி மாவட்டத்தில் பிறந்தவர் அனுப்பிரியா. இவருடைய தந்தை காவல் துறையில் காவலராகப் பணியாற்றிவருகிறார். தாயார் ஜிமஜ் யாஸ்மின், இல்லத்தரசி. பள்ளியில் சிறந்த மாணவியாக அறியப்பட்ட அனுப்பிரியாவுக்குச் சிறுவயதிலிருந்தே விமானி ஆக வேண்டும் என்பதுதான் லட்சியமாம். ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெற்ற அனுப்பிரியாவுக்கு அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், அவருக்கோ பொறியியலைவிட வானில் பறக்கும் ஆசையே மேலோங்கியிருந்தது.
கைகூடிய கனவு
இந்நிலையில் பொறியியல் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு புவனேஸ்வரில் உள்ள அரசு விமானப் பயிற்சி மையத்தில் 2012-ம் ஆண்டு சேர்ந்தார். ஆனால், பயிற்சிக்குத் தேவையான கட்டணத்தை அனுப்பிரியாவின் குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை. அவருடைய பெற்றோரோ மகளின் விருப்பத்தை நிறைவேற்ற உறவினர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரிடமும் கடன் பெற்றுப் படிக்க வைத்தனர். குடும்பத்தினரின் கஷ்டம் வீண்போகாதபடி அனுப்பிரியாவும் தன்னுடைய பயிற்சியில் தேர்ச்சிபெற்றார். டெல்லியில் நடைபெற்ற விமானிப் பயிற்சித் தேர்வில் வெற்றிபெற்றார்.
“எங்கள் மகள் எங்களை மட்டும் பெருமையடைய வைக்கவில்லை. எங்கள் மாநிலத்துக்கே பெருமை சேர்த்துள்ளார். சமூகத்தில் பின்தங்கிய எங்களைப் போன்றவர்களுக்குக் கல்விதான் திறவுகோல். படிப்பு விஷயத்தில் பிள்ளைகள் எதைத் தேர்வு செய்கிறார்களே அதைப் படிக்க உதவுவதுதான் பெற்றோரின் கடமை. அதைத்தான் நாங்களும் செய்தோம். மற்றப் படிப்புகளைவிட விமானிப் பயிற்சிப் படிப்புக்கு அதிக செலவானது. ஆனால், அந்தக் கவலையெல்லாம் அனுப்பிரியாவின் வெற்றிக்குப் பிறகு பெரிதாகத் தெரியவில்லை. பெண் குழந்தைகளுக்கு எங்கள் மகள் எடுத்துக்காட்டாக உயர்ந்திருக்கிறாள் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது” என்கிறார் அவருடைய தாயார் ஜிமஜ் யாஸ்மின். நாற்பது சதவீதப் பெண்களே கல்வியறிவு பெற்றுள்ள ஒடிஷாவில் அனுப்பிரியாவின் இந்தச் சாதனை பெண்கள் பலருக்கு ஊக்கம் அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
43 mins ago
இந்தியா
55 mins ago
கருத்துப் பேழை
48 mins ago
கருத்துப் பேழை
56 mins ago
சினிமா
3 hours ago
கல்வி
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago