குரூப்-1 தேர்வு: வயது வரம்பு உயர்த்தப்படாததால் ஏமாற்றம்

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை தமிழக அரசு உயர்த்தாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப் பாளர் உள்பட 8 வகையான பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வை நடத்துகிறது. இதற்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30, இதர அனைத்து வகுப்பினருக்கும் 35 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது புதிய பணி நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 5 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கள் எதுவும் நடக்கவில்லை. இதனால், ஏராளமான இளை ஞர்கள் பாதிக்கப்பட்டனர். 96-ல் ஆட்சி மாறியதும், 5 ஆண்டுகள் புதிய நியமனங்கள் எதுவும் நடக்காததால் அரசுப் பணியில் சேருவதற்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

5 ஆண்டுகள் சலுகை

அதை ஏற்று, அப்போதைய முதல்வர் கருணாநிதி வயது வரம்பை அனைத்து வகுப்பினருக்கும் 5 ஆண்டு கள் தளர்த்தி உத்தரவிட்டார். குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 35 ஆகவும், மற்ற வகுப்பினருக்கு 40 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனால், அந்த ஆட்சியில் இரண்டு குரூப்-1 தேர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டதால் வயது வரம்பு தளர்வு சலுகையை பெரும்பாலோரால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

2011-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த நிலையில், வயது வரம்பு சலுகை 16.7.2011 அன்று முடிவடைய இருந்தது. இந்தச் சலுகை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவ்வாறு நீட்டிக்கப்படவில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போன்று தமிழகத்திலும் குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதற்காக பல போராட்டங்களையும் நடத்தினர். அவர்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்நிலையில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆகிய பதவிகளில் 79 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதில் வயது வரம்பு ஏதும் உயர்த்தப்படாததால் மாணவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து குரூப்-1 தேர்வு எழுதுவோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:

மற்ற மாநிலங்களில் இருப்பதைப்போல் குரூப்-1 தேர்வு வரம்பை 45 ஆக உயர்த்தி தேர்வு எழுத எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். தனியாக எந்த இடஒதுக்கீடும் கேட்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் வெறும் 4 குரூப்-1 தேர்வுகள்தான் நடத்தப்பட்டுள்ளன. ஒரு தேர்வை நடத்தி பணி வழங்குவதற்கே 3 ஆண்டுகள் ஆகிவிடுகிறது.

வயது வரம்பு நீட்டிப்பு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை, முதல்வரின் தனிப்பிரிவு என பல்வேறு நிலைகளில் ஆயிரக்கணக்கான மனுக்களை அளித்தோம். ஆனாலும் வயது வரம்பை அரசு நீட்டிக்கவில்லை. எனவே, வயது வரம்பை நீட்டிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுசேர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏப்ரல் 26-ல் முதல்நிலைத்தேர்வு குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு, ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கு ஜனவரி 28-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தொழில்நுட்பம்

40 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்