தொழில் தொடங்கலாம் வாங்க! - 12: மல்லையா அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லையே!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

யாரிடம் பணம் கேட்பது என்ற கேள்வி தொழில் தொடங்குவதில் முக்கியக் கேள்வி. முதல் போட்டால்தானே முதலாளி? முதலுக்கு எங்குப் போவது? யாரைக் கேட்பது? எப்படிக் கேட்பது? எவ்வளவு கேட்பது? இவை புதிதாகத் தொழில் யோசிப்போரை அலைக்கழிக்கும் கேள்விகள்.

வெறும் கை முழம் போடாது

பணம் இருந்தால் போதும் தொழில் செய்துவிடலாம் என்று நம்புவது எவ்வளவு மடத்தனமோ அதே போலப் பணமே இல்லாமல் தொழிலை ஆரம்பிக்கலாம் என்று எண்ணுவதும் மடமையே. விசிட்டிங் கார்ட் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் சேவைத் துறை தொழில்களுக்கும் முதல் தேவை.

அளவில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் வெறும் கை முழம் போடாது. பெரும்பாலும்! அதையும் மீறிப் போட்டவர்கள் இருக்கலாம். பல கிரிமினல் கதைகளில் இப்படி வெறும் கையால் முழம் போட்டு மேலே வந்தவர்கள் இருக்கலாம். ஆனால், உழைத்து வெற்றி பெறத் துடிக்கும் சிறு வியாபாரிகளுக்கு முதல் அவசியம் முதல்தான்.

தேவைப்படுவோருக்குப் போய்ச் சேர்கிறதா?

இந்தியச் சூழலில் தொழில் தொடங்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். பெரும்பாலான குடும்பங்கள் தொழில் என்றதும் பயப்படுவார்கள். தொழில் கடனுக்கு வங்கிகளை அணுகுவதில் பொது மக்களுக்குப் பெரும் தயக்கம் உள்ளது. தற்போது நிலைமை சிறிது மாறினாலும், வங்கிகள் என்றாலே கையை விரிப்பார்கள் என்ற எண்ணத்தைத்தான் அவர்கள் இதுநாள்வரை தோற்றுவித்துள்ளனர்.

சொல்லப்போனால் பல அரசாங்கத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை தேவைப்படுவோருக்கு முழுமையாகப் போய்ச் சேர்கிறதா என்றால் பதில் உங்களுக்கே தெரியும். தவிர அரசாங்க அலுவலகத்தில் சென்று ஒரு காரியம் முடிக்க வேண்டும் என்றால் நிறைய தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அது முதல் முறையாகத் தொழில் முனைய நினைப்போரைச் சோர்வடையச் செய்துவிடும்.

சொல்லப்போனால் பல அரசாங்கத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை தேவைப்படுவோருக்கு முழுமையாகப் போய்ச் சேர்கிறதா என்றால் பதில் உங்களுக்கே தெரியும். தவிர அரசாங்க அலுவலகத்தில் சென்று ஒரு காரியம் முடிக்க வேண்டும் என்றால் நிறைய தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அது முதல் முறையாகத் தொழில் முனைய நினைப்போரைச் சோர்வடையச் செய்துவிடும்.

வறுமையின் அபராதம்

இந்தக் காரணங்களால்தான் சொத்தை அடமானம் வைத்துத் தொழில் தொடங்குகிறார்கள் வசதி படைத்தவர்கள். நடுத்தர வர்க்கப் பாட்டு இதுதான்: “தங்கமே உன்ன நான் தேடி வந்தேன் நானே…” நலிந்த பிரிவினர் எல்லாம் அநியாய வட்டிக்கு அடிமையாகிவிடுகின்றனர். மறைந்த நிர்வாக மேதை சி.கே. பிரகலாத் இதை வறுமையின் அபராதம் என்று கூறுவார். அங்காடிகளில் முதல் புரட்டுபவர்கள் வாங்கும் கடனின் வருடாந்தர வட்டி சினிமா வட்டியை விடப் பன்மடங்கு அதிகம். காலையில் 900 ரூபாய் கொடுத்து மாலையில் 1000 ரூபாய் வசூலிப்பவர்கள் இருக்கிறார்கள். காலையில் கடன் வாங்கிப் பொருள் எடுத்து, நாள் முழுவதும் உழைத்து, விற்று, லாபத்தில் மாலையில் கடனை அடைக்கும் தினசரிச் சிறு வியாபாரிகள் இதனால் பலன் அடைகிறார்கள். அவர்கள் அன்றாட பிழைப்புக்கு வாங்கும் இந்த வட்டி விகிதத்தைக் கணக்கு போட்டுப் பாருங்கள். தலை சுற்றும்!

எது பெருமை?

இந்தியா முன்னேறச் சிறு மற்றும் குறு வியாபாரிகள் தழைக்க வேண்டும். உலகப் பணக்காரர்களில் முதல் நூறில் இந்தியாவின் பணக்காரர்கள் இருப்பது நமக்குப் பெருமை இல்லை. வறுமை நாடுகள் பட்டியலில் இந்தியா வெளியேற வேண்டும். அதுதான் பெருமை. அதற்கு ஒரே வழி சிறு தொழில் மேம்பாடுதான். வங்க தேசத்தில் பேராசிரியர் முகமது யூனஸ் கிராமீன் வங்கி (Grameen Bank) எனும் வங்கி மூலம் கடனுக்குத் தகுதியில்லாத நலிந்த பிரிவினருக்குக் கடனுதவி செய்து சாதனை படைத்தார். அதுவரை நிலவிவந்த ஒரு பெரும் பொய்யான பிம்பத்தை உடைத்ததுதான் என்னைப் பொறுத்த வரை நிஜமான சாதனை. பொருளாதார வசதி இல்லாதவருக்குக் கடன் தந்தால் திரும்ப வராது என்பதைப் பொய்யாக்கி ஏழை எளியவர்கள், மத்திய, மேல் தட்டு மக்களை விடக் கடன் தொகையைச் சரியாகத் திருப்பிக் கட்டுகிறார்கள் என்று வருடா வருடம் நிரூபித்தார். நம் நாட்டு வங்கி முதலாளிகள் மல்லையாவை நம்பும் அளவுக்குச் சிறு வியாபாரிகளை நம்புவதில்லை.

நம் கிராமங்களில் அபாரத் தொழில் எண்ணமும் ஆர்வமும் கொண்ட பலர் தொழில் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் பிழைப்புக்காக வேறு வேலைக்குப் போய்த் தங்கள் தொழில் ஆசையைத் தொலைத்துவிடுகிறார்கள். ஒரு கிராமத்துக்கு ஒருவர் நல்ல தொழில் புரிந்தாலே அந்தக் கிராமம் சுபிட்சம் பெறும். லட்சக்கணக்கான தொழிலதிபர்கள் வரும் அளவுக்கு இந்தியாவில் வளமும் சந்தையும் உள்ளது. இவர்களுக்குத் தேவை முதல் தொழிலுக்கான பயிற்சியும் ஊக்குவிப்பும் கடனுதவியும்தான்.

வணிகம் செய்யும் சவால்

கல்விக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோம், வேலையே கிடைக்காவிட்டாலும். கல்யாணத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோம், அது வாழ்க்கைக்குப் பயன்படாவிட்டாலும். ஆனால், தொழில் செய்ய என்றால் முதல் கிடைப்பது மிகவும் சிரமம். இதுதான் நிதர்சனம்.

இதனால்தான் இங்கு தனியார் வங்கியில் தனிப்பட்ட கடன் (பர்சனல்லோன்) எடுப்பது. சீட்டு பணத்தைத் தள்ளி எடுப்பது, நகைகளை அடமானம் வைப்பது, சொத்துக்களை விற்பது எல்லாம் சகஜம். அவசரப் பணத் தேவைக்கு உள்ளவர்களை உறிஞ்சிக் கொழுக்கும் அமைப்புகள் செழிக்கின்றன. ஆனால், நல்ல தொழில் திட்டத்துக்கு நியாயமான வட்டியில் கடனுதவியும் கிடைப்பது அரிதாகிறது.

இந்த வறண்ட பூமியைப் பிளந்து வருவதுதான் வீரிய விதையின் சவால். தொழில் செய்பவர்களுக்கு எந்த வகையிலும் சலுகை காட்டாத சமூகத்தில் வணிகம் செய்யும் சவால் அது!

முடியாதது என்று எதுவுமில்லை. முடியும். முதலைப் பெறும் வெற்றிதான் தொழில் முனைவோரின் முதல் வெற்றி!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 mins ago

இந்தியா

11 mins ago

சுற்றுலா

35 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்