இளைஞர்கள் பலர் இப்போது சொந்தத் தொழில்செய்ய ஆர்வமாக உள்ளனர். ஆனால், என்ன தொழில்செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்ற கேள்விகளுக்கு அவர்களிடம் விடை இல்லை. தொழில்செய்ய முடிவெடுத்த பிறகுதான் அந்தத் துறை சார்ந்து தகவல்களைச் சேகரிப்பார்கள். ஆனால், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே இந்தத் துறைதான் தனது துறை அதில்தான் சாதிக்கப் போகிறோம் எனச் சிலர் தீர்க்கத்துடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவர்தான் பாலாஜி.
சினிமா உண்டாக்கிய காதல்
அவர் தேர்ந்தெடுத்த துறை ‘ரோபோட்டிக்ஸ்’. நவீன அறிவியலான ரோபோட் தொழில்நுட்பம் குறித்த தொழில் செய்துவரும் பாலாஜியின் சொந்த ஊர் விழுப்புரம் அருகே கண்டச்சிபுரம் என்னும் கிராமம். தந்தை தச்சுத் தொழிலாளி. சாதாரணக் குடும்பப் பின்னணி. சினிமா நடிகர்களின் படங்களைச் சேகரிக்கும் வயதில் பத்திரிகைகளில் வரக்கூடிய ரோபோட் படங்களை வெட்டிச் சேகரித்துள்ளார். அந்த அளவுக்கு ரோபோட் அறிவியலில் ஈடுபாட்டுடன் இருந்துள்ளார்.
பள்ளிக் காலகட்டத்திலேயே மாவட்ட அளவிலான அறிவியல் போட்டிகளில் ரோபோட் அறிவியல் மாதிரிகளை உண்டாக்கி வெற்றிபெற்றுள்ளார். ஆனால், பிளஸ் டூ முடித்த பிறகு அவரால் உடனடியாக மேற்படிப்பைத் தொடர முடியவில்லை. அதனால் ஓராண்டு இடைவெளி விழுந்துவிட்டது. இந்தக் காலத்தில் பாலாஜி, கல்லூரிகளுக்கு புராஜெக்ட் மாதிரி செய்வதற்கான ஆலோசகராக வேலை பார்த்துச் சம்பாதித்துள்ளார்.
இதற்குப் பிறகுதான் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு ரோபோட் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தற்போது வேல் டெக் உயர் தொழில்நுட்பம் டாக்டர் ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றிவருகிறார்.
தன்னை பற்றிச் சொல்லித்தரும் ரோபோட்
இதற்கிடையில் தனது ரோபோட் குறித்த ஆய்வையும் மேற்கொண்டுவருகிறார். இவர் தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். இது அல்லாது ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த ரோபோட் அறிவியல் கண்காட்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
பாலாஜி தனது புதிய கண்டுபிடிப்பான ‘ஜிபோட்’ (GBOT- educational based robot kit) என்பதை இப்போது சந்தைப்படுத்த இருக்கிறார். இது எளிய முறையில் மாணவர்களுக்கு ரோபோட் அறிவியலைச் சொல்லித் தரக்கூடிய ரோபோட். இந்தக் கருவியைக் கல்விச் சாலைகளில் பயன்படும் நோக்கத்துடன் வடிவமைத்துள்ளதால் இதற்கான விலையை நிர்ணயிப்பதிலும் பாலாஜி கவனத்துடன் இருந்துள்ளார். ரூ.500-தான் விலை நிர்ணயித்துள்ளார்.
இந்த ரோபோட்டைத் தமிழகத்தில் பல பள்ளிகள் வாங்க முன்வந்துள்ளன. கிராமப்புறப் பள்ளிகளுக்கும் இதைக் கொண்டுசேர்க்கும் முயற்சியிலும் பாலாஜி இறங்கியுள்ளார். இவை அல்லாமல் அர்ஜென்டினா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இந்த ரோபோட்டுக்கான அழைப்பு வந்துள்ளது. இந்தக் கல்வி ரோபோட்டைத் தொடர்ந்து விவசாயிகளுக்கான ரோபோட்டையும் கண்டுபிடித்துள்ளார். அதையும் விரைவில் சந்தைப்படுத்தவுள்ளார். இது தொடர்பாக ‘Tamil robotics club ’ என்ற பெயரில் ஒரு ஸ்மார்ட்போன் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தவிருக்கிறார்.
(நிறைவடைந்தது)
கட்டுரையாளர் தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago