புதுத் தொழில் பழகு 12: தேன் வார்க்கும் தொழில்

By ஜெய்குமார்

 

நா

ம் தேடிப்போகும் வாய்ப்புகளைவிட நம்மைச் சுற்றியிருக்கும் வாய்ப்புகளைத்தான் நாம் முதலில் பரிசீலிக்க வேண்டும். இந்த மேற்கோள் பல விஷயங்களுக்கும் உதாரணமாகச் சொல்லப்படுவது உண்டு. இது தொழில்செய்ய விரும்புவர்களுக்கும் பொருந்தக்கூடியது. அப்படித் தன்னைச் சுற்றியிருந்த வாய்ப்பு ஒன்றைப் பயன்படுத்தி வெற்றிபெற்றவர்தான் டி.அஜின். அவர் பயன்படுத்திக்கொண்ட வாய்ப்பு தேன் தயாரிப்பு.

நாகர்கோவிலை அடுத்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அஜின், ஒரு பொறியியல் பட்டதாரி. மின்னியலில் பட்டம் பெற்றவர். படித்து முடித்த பிறகு உள்ளூரிலேயே தண்ணீர்ச் சுத்திகரிப்புத் துறையில் சேவைப் பொறியாளர் வேலை கிடைத்துள்ளது. தற்காலிகமாக அந்த வேலையைப் பார்த்தபோதுதான் சொந்தத் தொழில் தொடங்கும் எண்ணம் அவருக்கு வந்துள்ளது.

சவாலே சமாளி

ஆனால், அவர் படித்த துறையில் சொந்தத் தொழில் என்பது சற்றுக் கடினமானது. ஏனெனில், மின்னியல் துறை சார்ந்த தயாரிப்புத் தொழில் கூடுதல் முதலீட்டைக் கோரக்கூடியது. அதனால் தனது சொந்த ஊரான மார்த்தாண்டத்தை மையமாக வைத்து என்ன தொழில் செய்யலாம் என யோசித்துள்ளார். அந்தப் பகுதியில் ரப்பர் மரங்கள் அதிகம். கோட்டயத்துக்கு அடுத்தபடியாக அதிகமான ரப்பர் உற்பத்தி இங்கேதான் நடக்கிறது.

இதைப் பின்னணியாகக் கொண்டு ஏதாவது தொழில் தொடங்கலாம் என யோசித்துள்ளார். இங்கு கிடைக்கும் ரப்பரைக் கொண்டு மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கையுறை போன்றவற்றைத் தயாரிக்கும் தொழில் இந்தப் பகுதியில் உண்டு. அது அல்லாது ரப்பர் பேண்ட் தயாரிக்கும் சிறு நிறுவனங்களும் உள்ளன.

இவற்றுக்கு மாற்றாக உள்ள மற்றொரு முக்கியமான தொழில் தேன் தயாரிப்பு. இதுவும் ரப்பர் மரம் சார்ந்த தொழில்தான். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் ரப்பர் மரம் பூ பூக்கும். அந்தப் பூவிலிருந்து கிடைக்கும் தேனைச் சேகரிப்பது இந்தப் பகுதியின் முக்கியமான தொழில். இந்தத் தொழிலில் ஈடுபடலாம் என அஜின் முடிவெடுத்துள்ளார். மார்த்தாண்டத்தில் உள்ள தேன் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் இதற்கான ஆலோசனைகளைப் பெற்றுள்ளார். “முதலில் இந்தத் தொழில் தொடங்குவதற்குக் கொஞ்சம் சிரமப்பட்டேன். சந்தையில் பலரும் தேன் உற்பத்திசெய்கிறார்கள். இதற்கிடையில் எனது தயாரிப்பை விற்பது சவாலான காரியமாக இருந்தது” என்கிறார் அஜின்.

தரம் இருந்தால் வெற்றி நிச்சயம்

அதனால் வெறும் தேனை மட்டும் தயாரிக்காமல் தேனில் ஊறவைத்த உலர் பழங்கள், பருப்புகளை விற்கலாம் என முடிவெடுத்தார். தேனில் ஊறவைத்த உலர் பழங்களை முதலில் சந்தைப்படுத்தினார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது. தேனில் ஊறவைத்த நெல்லிக்காய், பாதம் பருப்பு, இஞ்சிச் சாறு கலந்த தேன், துளசி கலந்த தேன், பூண்டு கலந்த தேன் எனப் புதிய புதிய வகையை ‘எம்.எச்’ (Marthandam Honey Food Products) என்ற பிராண்டில் அறிமுகப்படுத்தினார்.

மேலும் விற்பனைக்காக தரத்தில் அஜின் சமரசம் செய்துகொள்ளவில்லை. அதனால் தொடக்கத்தில் சந்தையில் தாக்குப்பிடிப்பது அவருக்குச் சவாலான காரியமாக இருந்திருக்கிறது. “இங்கே பலர் பிளாஸ்டிக் பாட்டில்களில் தேன் விற்கிறார்கள். தேனைப் பிளாஸ்டிக்கில் சேகரித்துவைப்பது நல்லதல்ல. நாங்கள் கண்ணாடி பாட்டில்களில் மட்டும்தான் விற்கிறோம். அதனாலும் தரத்தைச் சமரசம் செய்துகொள்ளாததாலும் மற்றவர்களின் விலைக்கு எங்களால் தேனை விற்க முடியாது. இது தொடக்கத்தில் சற்றுச் சிரமமாக இருந்தது. ஆனால், தரம் இருந்ததால் சந்தையில் நாங்கள் வெற்றிபெற்றோம்” என்கிறார் அஜின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்