IPL 2022 | பேட் கம்மின்ஸின் மரண அடி; வெங்கடேஷ் ஐயரின் கம்பேக் - மும்பையை வீழ்த்தியது கேகேஆர்

By செய்திப்பிரிவு

புனே: ஐபிஎல் 15வது சீசன் 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழக்கம் போல் வெங்கடேஷ் ஐயர் மற்றும் அஜிங்கியா ரஹானே இணை துவக்கம் தந்தது. 4வது ஓவரிலேயே 7 ரன்களுக்கு ரஹானே அவுட் ஆனார். இந்த சீசனில் இதுவரை வெங்கடேஷ் ஐயர் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு இன்றைக்கு அதிகமாக இருந்தது. அதனை இன்று பூர்த்தி செய்து கம்பேக் கொடுத்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்க்ஸ், நிதிஷ் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் வெங்கடேஷ் ஐயர் நிதானம் காண்பித்தார். ஆட்டத்தின் 14வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் தனது அரைசதத்தை கடந்தார்.

எனினும், 13வது ஓவரில் களமிறங்கிய பேட் கம்மின்ஸ் தான் இன்றைய ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் எனலாம். மரண அடி அடித்து மும்பையை அணியை கலங்கடித்தார் அவர். முதல் பந்தில் சிங்கிள் எடுத்தவர், அடுத்தடுத்த ஓவர்களில் விஸ்வரூபம் எடுத்தார். 13வது, 14 வது ஓவர்களில் தலா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்திருந்த கம்மின்ஸ் 15வது ஓவரை வீசிய தனது சக நாட்டு வீரரான டேனியல் சாம்ஸ் ஓவரை பொளந்து கட்டினார்.

அந்த ஓவரின் 6 பந்துகளிலும் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டர்களில் அடித்து ஒரே ஓவரில் மேட்சை முடித்து அணியை வெற்றிபெறவைத்தார். 14 பந்துகளிலேயே தனது அரை சதத்தை எட்டிய கம்மின்ஸ் ஒட்டுமொத்தமாக 15 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இதன்மூலம் 16வது ஓவர் முடிவிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன், ரோஹித் சர்மா இணை துவக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடி வந்த இந்த இணையை 3-வது ஓவர் வீசிய உமேஷ் யாதவ் பிரித்தார். அவர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 3 ரன்களில் நடையைக் கட்டினார் ரோஹித் சர்மா.

அதன்பிறகு களத்துக்கு வந்த டெவால்ட் ப்ரீவிஸ், இஷான் கிஷனுடன் கைகோத்தார். ஆனால், டெவால்ட் ப்ரீவிஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. வருண் சக்ரவர்த்தி வீசிய 8-வது ஓவரில் போல்டாகி 29 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒருபக்கம் இஷான் கிஷன் மட்டும் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அவரது போராட்டமும் ஒருகட்டத்தில் தோற்றுப்போக, பேட் கம்மின்ஸ் வீசிய 11-வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 14 ரன்களை மட்டுமே சேர்த்து மைதானத்திலிருந்து வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. இருவரும் இணைந்து 18 ஓவர் முடிவில் 129 ரன்களை சேர்த்தனர். அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ் 52 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, பொல்லார்டு வந்ததும் சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார். 5 பந்துகள் மட்டுமே ஆடிய பொல்லார்டு 3 சிக்ஸர்கள் விளாசி மிரட்டி 22 ரன்களை சேர்த்தார். மறுபுறம் 27 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மா 38 ரன்களில் அவுட்டாகாமல் களத்தில் நின்றார்.

20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 161 ரன்களை சேர்த்தது. மும்பை அணி தரப்பில் உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

மேலும்