புதுடெல்லி: ஐபிஎல் ஏலத்தில் முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பழைய நினைவலைகளை முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி பகிர்ந்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டது "வாழ்க்கையில் தனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய தருணம் அது" என்று விவரித்துள்ளார்.
ஆர்சிபி அணியின் வலையொளி நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, "2008-ம் ஆண்டு அது. U-19 உலகக் கோப்பைக்காக மலேசியாவில் இருந்தபோது ஏலம் தொடங்கியது. அப்போது ஜூனியர் அணியில் நான் இல்லை. இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றால், ஒருவர் ஏலம் எடுக்கப்படுவதில் இருக்கும் தடைகளை அப்போதுதான் நான் பார்த்தேன். ஆனால், அந்த தருணமும் எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அந்த ஏலத்தில் நான், சித்தார்த் கவுல், ரவீந்திர ஜடேஜா, மணீஷ் பாண்டே உட்பட U-19 அணியில் விளையாடிய 14 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டோம்.
டெல்லி அணி என்னை ஏலம் எடுக்க ஆர்வமாக இருந்ததாக அப்போது பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் எனக்கு பதில் அப்போது U-19 அணியில் முக்கிய பவுலராக இருந்த பிரதீப் சங்வானை தேர்ந்தெடுத்தது டெல்லி. தங்கள் அணியின் பவுலிங் யூனிட்டை பலப்படுத்த விரும்பியே என்னை விடுத்து பிரதீப் சங்வானை தேர்வு செய்தார்கள் என்பது சில காலங்கள் கழித்து தெரியவந்தது. ஆனாலும், அன்றைய ஏலத்தில் ஆர்சிபி என்னைத் தேர்ந்தெடுத்தது. இதை, என் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய தருணமாக நான் உணர்கிறேன். அன்று நான் அப்போது உணரவில்லை என்றாலும், இப்போது அந்த நினைவுகள் தோன்றும்போது அப்படியே உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக விராட் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, "அனைத்திற்கும் ஒரு காலவரம்பு உள்ளது. அதை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். தோனி ஓய்வுபெற இருந்த தருணத்தில் அவர் கேப்டனாக அணியில் தொடரவில்லை. கேப்டனாக இல்லாவிட்டாலும் அவர் அணிக்கு ஒரு தலைவராகவே இருந்தார். கேப்டனாக நாங்கள் இருந்தாலும் அவரிடமே ஆலோசனைகளை பெற்றோம். எனவே, நீங்கள் ஓர் அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தலைவராக இருந்தால்போதும். இப்போது ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு நிறைய பங்களிக்க முடியும். நிறைய வெற்றிகளை அணிக்கு பெற்றுத்தர முடியும்.
ஒரு கேப்டனாக, இந்திய அணியை முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்றதில் ஓரளவு நான் வெற்றிபெற்றுள்ளதாகவே உணர்கிறேன். ஒரு திறமையான வீரர் அனைத்து வகையான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வீரராக தோனி தலைமையில் விளையாடி, அதன்பின் நான் நீண்ட காலமாக இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை வகித்துள்ளேன். அப்போதும், இப்போதும் என் மனநிலை ஒரே மாதிரியாகவே உள்ளது. அணியை வெற்றிபெறச் செய்ய ஒரு வீரராக இருந்தபோதே கேப்டன் போலவே நினைத்தேன். இப்போதும் எனக்கு நானே தலைவன்தான்" என்று கேப்டன் பதவி தொடர்பாக விவரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
4 hours ago