மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையா் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால். இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை தோற்கடித்து தனது 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வதற்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்கள் ஒற்றையா் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பிரபல ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினியை இன்று எதிர்கொண்டார். மெல்போர்னின் ராட் லேவர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் மழை குறுக்கிட்டது. இதனால் மைதானத்தின் கூரை மூடப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஈரப்பதமான வானிலை மேட்டியோ பெரட்டினிக்கு சாதகமான ஒன்று. பலமுறை இதுபோன்ற தருணங்களில் மேட்டியோ பெரட்டினியின் கை களத்தில் ஓங்கியிருந்துள்ளது. இதனால் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு எகிறவைத்தது.
அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போட்டார் நடால். ஆரம்பம் முதலே சர்வீஸை தன்வசமே வைத்திருந்த நடால், பெரட்டினியை திணறடித்தார். ஏழாவது நிலை வீரரான மேட்டியோ பெரட்டினிக்கு எதிரான முதல் இரண்டு செட் ஆட்டத்தையும் 6-3, 6-2 என்ற கணக்கில் நடாலே வென்றார். மூன்றாவது செட்டில் பெரட்டினி, நடாலுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்த ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது. மூன்றாவது செட்டை 3-6 என்று பெரட்டினி கைப்பற்றினாலும், நான்காவது செட்டில் நடால் சுதாரித்துகொண்டார்.
இறுதியில், மூன்று மணிநேரம் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில் பெரட்டினியைத் தோற்கடித்து நடால் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். 2009-க்கு பிறகு ஆஸ்திரேலிய ஒபனை நடால் கைப்பற்றியதில்லை. அதேநேரம், 2020 பிரெஞ்ச் ஓபனுக்குப் பிறகு நடாலின் முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியும் இது என்பதால் இப்போதே ஃபைனல் மீதான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் டேனில் மெட்வெடேவ் இடையேயான மற்றொரு அரையிறுதி போட்டி இன்றிரவு நடைபெறுகிறது. அதில் வெல்பவருடன் நடால் இறுதிப்போட்டியில் மோதுவார்.
ஆறு மாதங்களுக்கு பிறகு வெற்றி: கடைசியாக 2020 பிரெஞ்ச் ஓபனுக்கு பிறகு பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் ஆறு மாதங்கள் நடாலால் விளையாட முடியவில்லை. இந்த வருட தொடக்கத்தில் விளையாட ஆரம்பித்தார். ரோஜர் பெடரர், ஜோகோவிச், நடால் மூவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களில் முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை தோல்விகளை சந்திக்காமல் 9 வெற்றிகளை பெற்றுள்ள நடால், 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று புது வரலாறு படைக்க இன்னும் ஒரு போட்டியே உள்ளது.
வெற்றிக்கு பிறகு பேசிய நடால், "என்னைப் பொறுத்தவரை மற்ற எல்லாவற்றையும் விட ஆஸ்திரேலிய ஓபனே இப்போது பெரிதாக தெரிகிறது. காயத்தில் இருந்து மீண்டு இந்த நிலைக்கு வந்துள்ளதை பார்க்கும்போது நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். 2009-ல் ஒருமுறை வெற்றிபெற்றாலும், 2012-ல் ஜோகோவிச், 2017-ல் ரோஜருக்கு எதிராக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றுள்ளேன். ஆனால், இந்த ஆண்டு மீண்டும் ஒரு வாய்ப்பு வரும் என்று நான் நினைக்கவே இல்லை. ஃபைனலில் என்னால் முடிந்தவரை முயற்சிசெய்வேன். ரசிகர்களின் ஆரவாரம் என்னை மீண்டும் இந்த களத்துக்கு கொண்டுவந்துள்ளது. மீண்டும் இங்கே இறுதிப் போட்டியில் விளையாடுவது என்பது எனக்கு நிறைய அர்த்தம் மிகுந்தது" என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago