இந்திய அணியின் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டி20 உலகக் கோப்பையோடு விராட் கோலி விலகுவது உறுதியாகியுள்ளன நிலையில், ஒருநாள் அணியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கக் கோரி தேர்வுக் குழுவிடம் விராட் கோலி அழுத்தம் கொடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய பிரிவுகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்த விராட் கோலி நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், “டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். 3 பிரிவுகளுக்கும் கேப்டன் பொறுப்பேற்று கடந்த 9 ஆண்டுகளாக எனக்கிருக்கும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கிறேன். தொடர்ந்து ஒருநாள், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக வழிநடத்துவேன்” எனத் தெரிவித்தார்.
உண்மையில் பணிச்சுமை காரணமாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கோலி தனது அறிவிப்பில் குறிப்பிட்டது ஒருவிதத்தில் உண்மையென்றாலும், கேப்டன் விராட் கோலிக்கும், அணி நிர்வாகத்துக்கும் இடையே உறவுகள் நல்ல முறையில் இல்லை என்பதால்தான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் இந்தியா, இங்கிலாந்து ஒருநாள் தொடரின்போது, ஃபார்மில் இல்லாத ஷிகர் தவணை அணியில் சேர்க்கக் கோரி தேர்வுக் குழுவினரிடமும், அணி நிர்வாகத்திடமும் கேப்டன் கோலி வாதம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், தேர்வுக் குழுவினர் இளம் வீரர்களைத் தொடக்க வீரர்களாக வளர்க்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக வைத்திருந்தனர். இதன்படி விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கலைத் தொடக்க வீரராகப் பயிற்சி அளிக்கலாம் என்று தேர்வுக் குழுவினர் தேர்வு செய்திருந்தனர்.
ஆனால் விராட் கோலி, தொடக்க ஆட்டக்காரர்களில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஷிகர் தவண்தான் களமிறங்க வேண்டும் என்றும், அவரைத் தேர்வு செய்யலாம் என்றும் தேர்வுக் குழுவினரிடம் கோலி வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே அணிக்குள் பனிப்போர் நடந்துள்ள தகவலும் கசியத் தொடங்கியுள்ளது. அணிக்குள் கேப்டன் பதவியைத் தக்கவைப்பதிலும், பிடிப்பதிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே பனிப்போர் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால், தன்னைவிட ரோஹித் சர்மா வயதில் மூத்தவர் என்பதால், துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கலாம் என்று உச்சகட்டமாக கோலி தேர்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், தற்போது விராட் கோலிக்கு 32 வயதாகிறது, ரோஹித் சர்மாவுக்கு 34 வயதாகிறது. ஆதலால், ஒருநாள் அணியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கலாம் என்ற திட்டத்தை தேர்வுக் குழுவிடம் கோலி வைத்துள்ளார். ஒருநாள் அணிக்கு கே.எல்.ராகுலை கேப்டனாகவும், துணை கேப்டனாக ரிஷப் பந்த்தையும் தேர்வு செய்யலாம் என்றும் கோலி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், வெள்ளைப் பந்து கேப்டன் பதவியிலிருந்துதான் நீக்கப்படுவேன் என்பது கோலிக்கு நன்கு தெரியும்.
ஆதலால்தான் அதற்கு முன்பாகவே கோலி பணிச்சுமை காரணமாக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனக்குத்தானே அழுத்தத்தை கோலி குறைத்துக் கொண்டார். அதுமட்டுமல்லாமல், கோலியின் செயல்பாடு டி20 உலகக்கோப்பை போட்டியில் மோசமாக இருந்தால், ஒருநாள் அணி கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டாலும் அதில் வியப்பேதும் இல்லை” எனச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago