இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் திராவிட்டை நியமிக்கப்படுவது சரியானதாக இருக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பதில் அளித்துள்ளார்.
இலங்கை சென்று ஷிகர் தவண் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணிக்குப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் சென்றுள்ளார். ராகுல் திராவிட் பயிற்சியில் இதற்கு முன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 2018-ல் உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஒரு முறை இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது.
தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் திராவிட் மூலம் ஏராளமான இளம் வீரர்கள் பயிற்சிப் பட்டறையில் உருவாக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்கள்தான் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், பிரித்விஷா, முகமது சிராஜ் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் திராவிட்டின் செதுக்கலால் உருவானவர்கள்.
இதற்கிடையே விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட்டணியும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாலும், இதுவரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பை ஏதும் வாங்கவில்லை. வரும் டி20 உலகக் கோப்பையுடன் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிகிறது.
ஆதலால், அதற்குப் பின் இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா, அவ்வாறு நியமிப்பது சரியானதாக இருக்குமா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவிடம் தனியார் தொலைக்காட்சி கேள்வி எழுப்பியது.
அதற்கு கபில் தேவ் அளித்த பதிலில், “இப்போது அதுகுறித்துப் பேசுவதற்கு எந்த அவசியமும் இல்லை என நினைக்கிறேன். இலங்கைக்கு எதிரான தொடர் முதலில் முடியட்டும், என்ன மாதிரியான திறமையை இந்திய அணி வெளிப்படுத்துகிறது, எவ்வாறு விளையாடுகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என விரும்பினால், அதில் தவறில்லை. அதற்கு திராவிட் சரியான தேர்வுதான். ஆனால், ரவி சாஸ்திரி அவரின் பணியைச் சிறப்பாகச் செய்துவருவதாக இருந்தால், புதிய பயிற்சியாளருக்கு வேலை ஏதும் இருக்காதே. ரவி சாஸ்திரியை நீக்குவதற்கு அவசியம் ஏதும் இல்லையே. இந்தக் கேள்விக்கு காலம்தான் பதில் அளிக்கும். இதுபோன்ற கேள்விகள் நமது பயிற்சியாளர்கள் மீதும் வீரர்கள் மீதும் தேவையில்லாத அழுத்தத்தை, நெருக்கடியை உருவாக்கும்.
இந்திய அணியில் பெஞ்சில் ஏராளமான திறமையான, இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இரு நாடுகளுக்கு எதிராக இருவிதமான போட்டிகளை விளையாட முடியும் அளவுக்கு வீரர்கள் இருக்கிறார்கள்.
இதுபோன்று இரு நாடுகளின் அணிக்கு எதிராக அணியைத் தயார் செய்து ஒரே நேரத்தில் விளையாடுவதன் மூலம் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்பளிக்க முடியும். இரு அணிகளுக்கும் ஒரே நேரத்தில் அழுத்தம், நெருக்கடி கொடுக்கிறோமா என்பதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்''.
இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago