ஐபிஎல் அவ்வளவுதானா? இந்தியாவிலிருந்து பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் லண்டன் சென்றனர்

By பிடிஐ

ஐபிஎல் அணியில் உள்ள வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் பாதியிலேயே ஐபிஎல் டி20 போட்டி நிறுத்தப்பட்டதையடுத்து, இங்கிலாந்தைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் லண்டன் புறப்பட்டுச் சென்றனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்தச் சூழலிலும் பாதுகாப்பாக ஐபிஎல் டி20 போட்டி நடந்தது.

வீரர்களுக்குப் பல அடுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு பயோ-பபுளில் தங்கவைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஆனால், பயோ-பபுள் சூழலையும் மீறி 4 வீரர்களுக்கு அடுத்தடுத்து தொற்று ஏற்பட்டது.

இதனால், அடுத்தடுத்து இரு லீக் ஆட்டங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் கடும் பாதுகாப்பு, பரிசோதனைகள் நிரம்பிய பயோ-பபுளுக்குள் கரோனா தொற்று புகுந்தபின் போட்டி நடத்துவது வீரர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதால், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவிலிருந்து நேரடியாகத் தங்கள் தாய்நாட்டுக்குச் செல்லாமல், மாலத்தீவு அல்லது இலங்கை சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா புறப்படுகின்றனர். நாளை காலை முதல் சிறுசிறு குழுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு புறப்படுகின்றனர்.

இதனிடையே ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டதையடுத்து தொடரில் பங்கேற்றிருந்த 11 இங்கிலாந்து வீரர்களில் பெரும்பாலானோர் லண்டன் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதில் சன்ரைசர்ஸ் அணி வீரர் பேர்ஸ்டோ, ராஜஸ்தான் வீரர் பட்லர், சிஎஸ்கே வீரர்கள் மொயின் அலி, சாம் கரன், டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், ஜேஸன் ராய் ஆகியோர் லண்டன் சென்றடைந்ததாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனல் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பிவிட்டதால், இந்த சீசனில் இனிமேல் தொடர்ந்து ஐபிஎல் போட்டி நடத்தப்படுமா என்பது சந்தேகம்தான்.

இந்தியாவில் தற்போது, இயான் மோர்கன், டேவிட் மலான், கிரிஸ்ஜோர்டான் மட்டும் தங்கியுள்ளனர். இவர்கள் 3 பேரும் அடுத்த 48 மணி நேரத்தில் லண்டன் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்தியாவை ரெட்லிஸ்ட் பட்டியலில் பிரிட்டன் அரசு வைத்துள்ளது. ஆதலால், லண்டன் செல்லும் வீரர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள தங்குமிடத்தில் தங்கள் சொந்தச் செலவில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த 10 நாட்களில் கரோனா பாதிப்பு ஏற்படாவிட்டால் மட்டும் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்