ஐபிஎல் டி20 பயோ-பபுள் சூழலுக்குள் கரோனா வைரஸ் புகுந்ததால், டி20 தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதையடுத்து, வெளிநாட்டு வீரர்களைப் பாதுகாப்பாக தாயகம் அனுப்பிவைக்கத் தேவையான வழிகளை ஆராய்வோம் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்தார்.
ஐபிஎல் டி20 தொடரில் பயோ-பபுள் சூழலில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் நாளை நடக்க இருந்த சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் அணியுடனான ஆட்டத்தை ரத்து செய்ய மும்பை அணி தரப்பில் கோரப்பட்டு இருந்தது. ஆனால், சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹாவுக்கும், டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ராவுக்கும் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பயோபபுள் சூழலுக்குள் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, ஐபிஎல் டி20 தொடரை தற்காலிகமாக நிறுத்திவைத்து பிசிசிஐ இன்று அறிவித்தது.
இந்த ஐபிஎல் தொடரில் இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வீரர்கள், நியூஸிலாந்தைச் சேர்ந்த 10 வீரர்கள், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 11 வீரர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 வீரர்கள் , மே.இ.தீவுகள் அணியைச் சேர்ந்த 9 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 3 வீரர்கள், வங்கதேசத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களைப் பாதுகாப்பாக அனுப்புவது குறித்து பிசிசிஐ என்ன முடிவு எடுத்துள்ளது எனத் தெரியவில்லை. இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் நிருபர்களிடம் கூறுகையில், “ஐபிஎல் டி20 தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு வீரர்களை அவர்களின் சொந்த நாட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். அதற்குரிய அனைத்து வழிகளையும் பிசிசிஐ அமைப்பு ஆய்வு செய்யும். அதற்குரிய வழிகளை விரைவில் பிசிசிஐ அறிவிக்கும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், “நாட்டில் தற்போதும் சூழலின் அடிப்படையில், ஐபிஎல் டி20 தொடரை ரத்து செய்ய பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வீரர்களின் உடல்நலத்திலும், ஐபிஎல் தொடரில் ஈடுபட்டுள்ள மற்றவர்களான மைதானப் பராமரிப்பாளர்கள், போட்டி நடத்தும் அதிகாரிகள் என யார் உடல்நலத்திலும் விளையாட நாங்கள் விரும்பவில்லை. ஆதலால், தொடரை ரத்து செய்தோம்” எனத் தெரிவித்தார்.
பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், “வீரர்கள், மைதான ஊழியர்கள், ஐபிஎல் தொடரை நடத்துவோர் என யாருடைய உடல்நலத்திலும் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. இந்தத் தொடரை ரத்து செய்ததன் நோக்கமே அனைவரின் உடல்நலம், பாதுகாப்பு, ஆரோக்கியத்தில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படக்கூடாது, பாதுகாப்பாக ஒவ்வொருவரும் அவர்களின் குடும்பத்தாருடன் சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
தமிழகம்
23 mins ago
சினிமா
19 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
43 mins ago
க்ரைம்
49 mins ago
க்ரைம்
58 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago