தோனியோடு என்னை ஒப்பிடுவதைக் கேட்க வியப்பாக இருந்தாலும். யாரோடும் என்னை ஒப்பிடாதீர்கள். நான் எனக்குரிய அடையாளத்துடனேயே விளையாட விரும்புகிறேன் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்தார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றிக்கு அணியை கொண்டு சென்றபோது 97 ரன்னில் சதத்தைத் தவறவிட்டு துரதிருஷ்டமாக ஆட்டமிழந்தார். அதனால், அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
ஆனால், பிரிஸ்பேனில் மிகச்சிறப்பாக பேட்செய்து மேட்ச் வின்னராக ஜொலித்த ரிஷப் பந்த் 89 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். காபாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் ரிஷப் பந்த் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டியில் மிகவிரைவாக 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்பதில் தோனியை முறியடித்து ரிஷப் பந்த் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியத் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி வீரர்கள் இன்று காலை தங்கள் சொந்த நகரங்களுக்கு வந்து சேர்ந்தனர். ரிஷப் பந்த் டெல்லி விமானநிலையத்தில் வந்திறங்கினார். டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் ரிஷப் பந்த்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது ரிஷப் பந்திடம் “ தோனியுடன், உங்களை ஒப்பிட்டு பேசுகிறார்களே” என்று, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரிஷப் பந்த் சிரித்துக்கொண்டே “ மகிழ்ச்சியாக இருக்கிறது. தோனி போன்ற சிறந்த வீரருடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது.
ஆனால், என்னைப் பொருத்தவரை தோனியுடன் மட்டுமல்ல எந்த வீரருடன் என்னை ஒப்பிட நான் விரும்பவில்லை. இந்தியக் கிரிக்கெட்டில் நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். எனக்குரிய அடையாளத்துடன் விளையாடவே நான் விரும்புகிறேன்.
ஆதலால், தோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னைப் போன்ற சிறிய வீரரை ஒப்படாதீர்கள். ஆஸ்திரேலியாவில் நாங்கள் விளையாடிய விதம் குறித்து ஒட்டுமொத்த அணியும் மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
8 mins ago
ஆன்மிகம்
18 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வணிகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago