இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா நடப்பு தொடரில் தோல்வியடையவே அதிக வாய்ப்புள்ளது என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரில் கலினன் கருத்து தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியினரின் அனுபவமின்மையும் இந்தியாவின் தட்பவெப்பமும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்குக் கடும் சவாலாக அமையும் என்றார் டேரில் கலினன்.
“நிச்சயமாக! எந்த அணி தோல்வியடைய அதிக வாய்ப்பிருக்கிறது என்று கேட்டால் அது தென் ஆப்பிரிக்க அணிதான் என்று நான் கூறுவேன். அவர்கள் குளிர்காலத்திலிருந்து நேராக இந்திய துணைக் கண்டத்துக்கு வந்திறங்கியுள்ளனர். வெறுமனே ஆட்டக்கள நிலவரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தட்பவெப்ப சூழ்நிலையையும் எதிர்கொள்ள அனுபவம் தேவை. டிவில்லியர்ஸ், ஆம்லா தவிர அனுபவஸ்தர்கள் இந்த அணியில் இல்லை.
ஸ்பின்னைக் கொண்டு இந்தியாவை வீழ்த்த முடியாது:
தென் ஆப்பிரிக்க அணி தங்களது ஸ்பின் பந்துவீச்சைக் கொண்டு இந்தியாவை வீழ்த்தும் என்று எனக்குத் தோன்றவில்லை. எங்கள் காலத்தில் 4 வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டே இந்தியாவை வீழ்த்தியுள்ளோம். ஆனால், இப்போதைய இந்திய வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் ஆடுகின்றனர். இந்தியா சமீப காலங்களாக ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறுகின்றனர் என்றாலும் நான் வேகப்பந்து வீச்சாளர்கள் 4 பேரையே களமிறக்குவேன்.
டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை சமீப காலங்களில் தொடக்கத்தில் சரியாக வீசுவதில்லை என்றே கருதுகிறேன். மோர்கெல் இந்த சூழ்நிலைகளில் துல்லியமாக வீச வேண்டிய தேவையுள்ளது. இந்தப் பிட்ச்களில் வெர்னன் பிலாண்டரை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மென்களுக்குப் பிடிக்கும். அவர் அதிக ஓவர்களை தொடர்ச்சியாக வீசும் உடல்தகுதி இல்லாதவர். சுழற்பந்து வீச்சும் அனுபவமற்றது. இவர்கள் இந்திய அணியை ஆல்-அவுட் செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
இந்திய வேகப்பந்து வீச்சு பலனளிக்கும்...
மாறாக இந்திய வேகப்பந்து வீச்சு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களை நிச்சயம் நெருக்கடிக்குள்ளாக்கும். நிச்சயம் வேகப்பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகமாக இருக்குமாறு பிட்ச் அமையும் என்றே எதிர்பார்க்கிறேன். 4-ம் நாளில் பந்துகள் திரும்பும். எனவே புதிய பந்தில் தென் ஆப்பிரிக்கா 2, 3 விரைவு விக்கெட்டுகளை இழந்தால், அதன் பிறகு இந்திய சுழற்பந்து வீச்சிடம் தென் ஆப்பிரிக்கா நிச்சயம் மீள முடியாத நிலைக்கே செல்லும். நான் தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்தால் ஒன்றும் எடுக்காத பிளாட் பிட்ச்களை இட்டால் மகிழ்ச்சியடைபவனாக இருப்பேன்.
இம்ரான் தாஹீர் அச்சுறுத்தல் அல்ல..
நிரூபிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் இல்லை. தாஹிர் அதிகம் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை. இந்த வடிவத்தில் அவர் சிறந்து விளங்கவில்லை. ஏனெனில் இங்கு அதிக ஓவர்களை தொடர்ச்சியாக, சீராக வீசுவது அவசியம், இதற்கு தாஹிர் தோதுபட மாட்டார் என்றே கருதுகிறேன்.
பிறகு புதிய ஸ்பின்னர்களான் சைமன் ஹார்மர், டேன் பியட் ஆகியோர் நிச்சயம் இந்திய அணியை ஆல் அவுட் செய்யக் கூடியவர்கள் அல்ல. அப்படி நடக்க வெண்டுமெனில் இந்தியா மிக மோசமாக ஆடினால்தான் உண்டு”
இவ்வாறு கூறினார் கலினன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago